
இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம் சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே உறவுகளிடையே மதிப்பை பேண பிரதானமான தகுதியாக இருந்தது. அதன்பிறகு இன்று பணத்துடன், நல்ல கல்வியும், சிறப்பான உத்யோகமுமே உறவுகளிடையே கௌரவத்தை ஏற்படுத்துகிறது. இதில் குறைபாடு ஏற்படின் முதன்மை உறவான கணவன்-மனைவி உறவில்கூட கசப்புகள் என்பது இன்று சாதரணமாகிவிட்டது. இது பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு.
கடந்த வாரம் அலைபேசியில் அழைத்த ஒரு அன்பர் தனது மகனது குடும்ப வாழ்க்கை பற்றி ஜோதிடம் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அலுவலக அன்பர் ஒருவர் உங்களை பற்றிக் கூறினார். எனக்கு ஜோதிடத்தில் பெரிய நம்பிக்கை இல்லை. அதனால் மகனது ஜாதகத்தை குறித்து வைக்கவில்லை. ஆனால் பிறந்த தேதி மட்டும் உள்ளது. என்றார். தற்போது மகனது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்காக முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். அதனாலேயே உங்களை தொடர்பு கொண்டேன் என்றார். என்ன விஷயத்திற்காக ஜாதகம் பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டதால் ஜாதகம் இல்லாத சூழலில் பிரசன்னம் மூலம் அவருக்கு பதிலளிக்கலாம் என்று முடிவெடுத்தேன். உரிய தொகையை கட்டிவிட்டு சில மணி நேரங்களுக்குப் பிறகு தொடர்புகொள்ளுங்கள் என்று கூறினேன்.
ஜாதகம் இல்லாதவர்களுக்கு பலன் கூற உருவாக்கப்பட்டதுதான் பிரசன்னம். பிரசன்னத்தில் ஒட்டுமொத்த ஜாதக பலனை காண முடியாது என்றாலும் கேள்விக்குரிய துல்லியமான பதிலை கூற முடியும் என்பதே பிரசன்னத்தின் சிறப்பம்சம். பல்வேறு வகை பிரசன்னங்களுள் ஒவ்வொன்றும் தனிச் சிறப்பு மிக்கது என்றாலும் என்னை வசீகரித்து அரவணைத்தது ஜாமக்கோள் பிரசன்னமே. எனவே இவர் தனது மகனை முன்னிட்டு எழுப்பிய கேள்விக்கு ஜாமக்கோள் அடிப்படையில் பதில் கூறலாம் என்று பார்க்கப்பட்ட பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.

மகனது குடும்ப வாழ்வுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நீங்குமா? என்பதே கேள்வி. எனவே இங்கு கேள்வியாளர் என்பது பிரசன்னத்தில் மகனை குறிப்பிடும் என்பதை அறிக.
துலாம் உதயம் குடும்ப பாதிப்பிற்காக நீதிமன்றம் செல்லும் நிலையில் கேள்வியாளர் இருப்பதை குறிப்பிடுகிறது. கேள்வியாளர் உதயம் எனில் மனைவியை 7 ஆமிடம் குறிப்பிடும்.
மனைவியை குறிப்பிடும் 7 ஆமிட செவ்வாயின் மிருகசீரிஷத்தில் ஆரூடம் நின்று களத்திர காரகர் சுக்கிரன் உதயத்திற்கு 8 ல் அமைந்தது மனைவியுடன் கருத்து மோதல் என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறது.

உதயத்திற்கு 9 ல் உள்வட்டத்திலும் வெளிவட்டத்திலும் இரு சூரியனும் நிற்பது கேள்வியாளருக்கு கிடைக்கும் தந்தையின் ஆதரவை குறிப்பிடுகிறது. குறிப்பாக உதயத்தில் சனி நிற்க, 6 ஆமதிபதி குருவுடன் சூரியன் இணைந்து 9 ல் அமைந்தது கேள்வியாளரது தொழிலில் தந்தை வழிகாட்டல் இருக்கும் என்பதை குறிப்பிடுகிறது. உச்ச நீச கிரகங்களே கேள்வியின் பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கும் என்பதற்கேற்ப சனி உதயத்தில் உச்சம் என்பதால் கேள்வியாளர் செய்யும் தொழிலே இவரது குடும்ப வாழ்வுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். உதய சனியே 6 ல் குடும்ப காரகர் குருவுடன் இணைந்து நிற்பது இதை உறுதி செய்கிறது
கவிப்பு 12 ல் சூரியனின் உத்திரம்-3 ல் 1௦ ஆமதிபதி சந்திரனுடன் இணைந்து நிற்பது கேள்வியளர் தந்தையின் கட்டளைப்படியே தொழிலில் ஈடுபடுகிறார் என்பதையும் அதுவே இவரது குடும்ப பாதிப்பிற்கு காரணம் என்பதையும் தெளிவாக்குகிறது.
உதயத்திற்கு 1௦ ல் கடகத்தில் புதன் பாம்புடன் இணைந்து அமைந்தது, கேளியாளர் புதன் சார்ந்த வெளிநாடு தொடர்புடைய தொழிலில் இருப்பார் என்பதை குறிப்பிடுகிறது. கடக புதன் சுய சாரம் ஆயில்யத்தில் இருக்க, வெளிவட்டத்தில் பாம்பு சனியின் பூசத்தில் அமைந்தது, கேள்வியாளரது தொழிலில் இருக்கும் குற்றம் குறைகளை குறிப்பிடுகிறது. கௌரவக் குறைவான தொழில் என்றும் கூறலாம். 1௦ ஆமிடம் கேள்வியின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டை குறிப்பிடும். இது கேள்வியாளர் செய்யும் மதிப்புக் குறைவான வேலையை நேசித்துச் செய்வதையும் குறிப்பிடுகிறது.
இனி கேள்வியாளரது மனைவியின் நிலை என்ன? என்பதை உதயத்தின் 7 ஆமிடத்தைக்கொண்டு ஆராயலாம். ஜாமச் சனியும், ஜாமச் செவ்வாயும் ஒருவருக்கொருவர நேர் எதிரேதான் அமைவர். இதில் இதர ராசிகளைவிட இவ்விரு கிரகங்களும் உச்ச நீசமாகும் துலாம்-மேஷம், கடகம்-மகரம் ஆகியவற்றில் அமையும் ஜாம சனி-செவ்வாய்தான் அதிக பாதிப்பை தரக்கூடியது. கடும் பகை கிரகங்களான சனியும் செவ்வாயும் 1-7 ல் அமைந்தது இந்தப் பிரசன்னத்தை பொறுத்தவரை கணவன்-மனைவிக்குள் கடும் கருத்து மோதலை உள்ளதை குறிப்பிடுவதுடன், இருவரும் கடுமையான உழைப்பை நம்மக்கூடியவர்கள் என்பதையும் குறிப்பிடுகிறது. கேள்வியாளரை குறிப்பிடும் துலாத்தில் உச்ச சனி அமைந்துள்ளது கணவர் கடும் உழைப்பாளி. மிகுந்த பொறுமைசாலி என்பதை குறிப்பிடுகிறது. இவரது இயல்புக்கு நேர் மாறாக 7 ல் நிற்கும் செவ்வாய் மனைவி வேகமானவர் என்பதை குறிப்பிடுகிறது. மேஷத்திற்கு 1௦ ல் மகரத்தில் புதன் அமைந்தது மனைவியும் புதனின் காராகத் தொழில்களான கணிதம், தரவுகள் (Data), தகவல் தொடர்பு போன்றவற்றோடு தொடர்புடைய வேலை செய்பவராக இருப்பார் என்பதை குறிப்பிடுகிறது. குறிப்பாக 7 ன் மூன்றாமதிபதி புதன் 1௦ ஆமிடத்துடன் தொடர்பாகி கடகத்தில் நிற்பதால் மனைவி சென்னையில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிபவராக இருக்க வாய்ப்புண்டு.
உள்வட்டத்தில் 7 ஆமதிபதி செவ்வாய் சிம்மத்தில் கேதுவோடு இணைந்துள்ளதும் மனைவி சிம்மம் குறிக்கும் தலைநகரில் கேது குறிக்கும் தொழில்நுட்பம் சார்புடைய தொழிலில் இருப்பார் என்பதையே குறிப்பிடுகிறது. உதய சனியும், 12 ஆமிட கவிப்பும் 1௦ ஆமதிபதி சந்திரன் சாரம் பெற்றது கணவனும் மனைவியும் பணி நிமிர்த்தம் பிரிந்துள்ளதை குறிப்பிடுகிறது. உதயத்தின் 7 ஆமதிபதி செவ்வாய் கேதுவோடு இணைந்து உதயத்திற்கு பாதகத்தில் நிற்பது, மனைவி தனது முடிவில் உறுதியாக உள்ளதை குறிக்கிறது. உள்வட்ட சுக்கிரன் கவிப்போடு இணைந்து நிற்கும் சந்திரனின் சாரத்தில் ரோஹிணி-1 ல் நிற்பதாலும், மனைவி கணவருடன் இணைய வேண்டுமெனில் வேலையை விட்டுவிட்டு குடும்பத்திற்கு வர வேண்டும். சுக்கிரன் சந்திரனோடு தொடர்பாவதால் 1௦ ஆமதிபதி சந்திரன் குடும்ப பாவகமான 2 ஆமிடத்தில் நீசமாவார் என்பதை அறிக. இதனால் மனைவி வேலையை விட்டுவிட்டு வந்து கணவரோடு இணைய தயாராக இருக்க மாட்டார். பிரசன்னம் தொழில் மற்றும் சம்பாத்தியத்தில் மனைவியே வலுவாக உள்ளதை தெளிவுபடுத்துகிறது. இதுவே இவர்களின் பிரிவினைக்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடும்.
தனுசில் நிற்கும் ஜாம சுக்கிரன் 235.29 பகையில் நிற்பதை கவனிக்க. 235 பாகை என்பது விருட்சிகத்தில்தான் உண்மையில் சுக்கிரன் நின்று செயல்படுகிறார் என்பதை குறிப்பிடுகிறது. ஜாமக்கோள் பிரசன்னத்தில் ஸ்திர ராசியில் ஜாமக் கிரகங்கள் அமையாது. ஆனால் பாகைப்படி அமையலாம். இப்படி பிரசன்னப்படி தனுசில் அமையும் ஜாமச் சுக்கிரன் பாகைப்படி ஸ்திர ராசியில் அமைகிறது. இப்படி பாகைப்படி ஸ்திர ராசியில் அமையும் ஜாம கிரகங்கள் குறிப்பிடும் உறவுகள் கேள்வியாளருக்கு பயனற்றவையாகிவிடும் என்பது பிரசன்ன விதியாகும். இந்த அடிப்படையில் மனைவி இருக்கும் இடத்திற்கு கணவர் சென்றால்தான் அவரது குடும்ப உறவு நிலைக்கும் என்பது தெரிகிறது. தனது குடும்ப வாழ்வை தக்கவைக்க இவர் பொண்டாட்டி சொன்னால் கேட்டுத்தான் ஆக வேண்டும். இல்லையேல் குடும்ப வாழ்வு பறிபோய்விடும். ஆனால் உதயத்தில் நீதிமான் எனப்படும் சனி நீதிமன்றத்தை குறிக்கும் துலாத்தில் உச்சமாவதால் மனைவி வேலையை துறந்து வராவிட்டால் கேள்வியாளர் இதை காரணம் காட்டி மணமுறிவுக்கு நீதிமன்றத்தை நாடும் மனநிலையில் இருப்பது தெரிகிறது. உதயத்தில் மறுமணத்தை குறிப்பிடும் 4 ஆமதிபதி சனி நிற்பதும், 4 ஆமிடத்தில் இரண்டாவது உறவை குறிப்பிடும் புதன் நிற்பதும், கேள்வியாளருக்கு மறுமண எண்ணமுள்ளதை தெரிவிக்கிறது. எனவே இங்கு பிரிவினைக்கே வாய்ப்புள்ளதை பிரசன்னம் தெரிவிக்கிறது.
மேற்கண்டவற்றை ஆராய்ந்துவிட்டு கேள்வியாளரின் தந்தையை அழைத்து உங்கள் மகன், மருமகள் இருவரின் பிரிவினைக்கு இருவரும் செய்யும் வேலையே காரணமாக இருக்கும். மருமகள் வேலை விஷயத்தில் மனம் மாறமாட்டார். எனவே மகன்தான் உங்கள் மருமகளுடன் சென்று இணைய வேண்டும் என்று பிரசன்னம் சுட்டிக்காட்டியதை கூறினேன். பதிலுரைத்த அவர் மகன் தனது தொழிலுக்கு உதவியாக என்னுடனே இருக்கிறான். மருமகள் சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறாள். நல்ல சம்பாதியமுள்ள வேலையை துறந்து இங்குவர மருமகளுக்கு மனமில்லை. எனவே நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று மகனுக்கு மறுமணம் செய்து வைக்கும் முடிவில் இருப்பதாக கூறினார். மகனின் பணி பற்றி கேட்டேன். அதற்குத் தந்தை மருமகள் அளவு சம்பாதியமில்லாத பணிதான். வணிக நிறுவனங்களில் சட்டதிட்ட நடைமுறைகளை ஒழுங்கு செய்யும் Social Audit தொடர்புடைய எனது நிறுவனத்தில் மகன் Compliance பணிகளை கவனித்துக்கொள்கிறார் என்று கூறினார்.
ஜோதிடத்திலேயே நம்பிக்கையில்லாமல் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி என்னை தொடர்புகொண்ட அவர் ஜாதகம் கூட இல்லாமல் பிரசன்னம் மூலம் துல்லியமாக கணவன்-மனைவி கருத்து வேறுபாட்டிற்கான காரணத்தை நான் கூறியது கண்டு திகைத்து “நம்ப முடியாத ஆச்சரியமாக உள்ளது உங்கள் பதில்” என்று கூறினார். இதுதான் பிரசன்னத்தின் அருமை. இக்கலையை எனக்கு அருளிய எனது குருவிற்கு மானசீகமாக மனதிற்குள் நன்றி கூறிக்கொண்டேன்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: +91 8300124501