
தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா? அல்லது நிரந்தரமானவைகளா? என்றால், மாறுதல்களை ஏற்படுத்தும் கிரகங்கள் தசா-புக்தி கிரகங்களாகி, அவை கோட்சாரத்தில் பெயர்ச்சியாகும் வருட கிரகங்களுடன் தொடர்பானால் ஒரு ஜாதகருக்கு வரும் மாற்றங்கள் நிரந்தரமானவைகளாக அமையும். அப்படி தொடர்பாகவில்லையேல் கோட்சாரத்தால் ஜாதகருக்கு ஏற்படும் மாற்றங்கள் கோட்சாரம் மாறியதும் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடும்.
தசா-புக்தி கிரகங்களுக்கும், இவற்றோடு கோட்சாரத்தில் பெயர்ச்சியாகி தொடர்பாகும் வருட கிரகங்களுக்கும் தொடர்பு உள்ளதெனில் அவை ஏற்படுத்தும் மாற்றங்கள் நன்மையானவையா? அல்லது தீமையானவையா? என்பது அடுத்த கேள்வி. இதை சரியாக நாடிபிடித்துவிட்டால் ஜாதகருக்கு ஒரு ஜோதிடரால் தெளிவாக வழிகாட்ட இயலும். ஜோதிடருக்கு உள்ள உண்மையான சவால் இங்கேதான் ஒளிந்துள்ளது என்றால் அது மிகையல்ல. இது பற்றி ஒரு உதாரண ஜாதகத்துடன் ஆராய்வதே இன்றைய பதிவு.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

துலாம் லக்னாதிபதி சுக்கிரன் மூன்டறாமிடம் தனுசில் ராசி சந்தியில் குறைந்த பாகை பெற்று தாரா காரக கிரகமாக உள்ளார். சுக்கிரனுடன் இணைந்த கிரகங்களால் பாதிப்பில்லை என்றாலும் சுக்கிரனுக்கு முன்னாள் புதன் வக்கிரம் பெற்று நிற்பது சிறப்பான அமைப்பல்ல. சுக்கிரனுக்கு வீடு கொடுத்த குரு நீசம் பெற்றது, லக்னாதிபதியான சுக்கிரனை மேலும் பலவீனப்படுத்திவிடுகிறது. லக்ன திரிகோணத்திலும் கிரகங்கள் இல்லை. ஆனால் ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு 11 ல் ராகுவுடன் இணைந்து அமைத்ததும், ராசியின் திரிகோணத்தில் சனியும், கேதுவும் அமைந்ததும் இந்த ஜாதகத்தில் லக்னத்தைவிட ராசியை வலுவானதாக மாற்றியமைக்கின்றன. அதாவது தனது விதியை தனது முடிவுகளால் ஜாதகர் மாற்றி அமைக்கலாம். அனுஷத்தில் நிற்கும் சந்திரன் குருவுடன் பரிவர்த்தனையாகி மகரத்தில் வந்து ஆட்சி பெறும் நட்சத்திராதிபதி சனியால் நீசபங்கப்படுகிறார். சந்திரன் இந்த லக்னத்திற்கு 1௦ ஆமதிபதியாகி 2 ஆமிடத்தில் நீசபங்கப்படுகிறார் என்பதை கவனிக்க. 2 ஆமதிபதி செவ்வாய் 12 ஆமிடத்தில் ராகுவுடன் மறைகிறார் என்பதையும் கவனிக்க. இதனால் இந்த ஜாதகர் தனது பூர்வீக இடத்தைவிட்டு வெளியேறி கடல் கடந்த வெளிநாட்டில் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் முன்னேறிவிடுவார் என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது.
ஜாதகரின் நிலையை கோட்சாரத்தில் கவனிக்கலாம். கோட்சாரத்தில் லக்னாதிபதி சுக்கிரன் மீனத்தில் ரிஷப குருவுடன் பரிவர்த்தனை பெற்று நிற்கிறார். அதே சமயம் ராசியாதிபதி செவ்வாய் கடகத்தில் நீசம் பெற்று ஜனன கால விருட்சிக சந்திரனுடன் பரிவர்தனையாகிறார். இவ்விரு பரிவர்த்தனைகளும் ஜாதகர் தற்போது வெளிநாட்டில் இருப்பதை உறுதி செய்கிறது. ஜாதகர் வெளிநாட்டில் தற்போது நல்ல நிலையில் உள்ளாரா? அல்லது அவருக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா? எனக் காண்போம். கடகத்தில் நிற்கும் கோட்சார செவ்வாய் ஜனன லக்னத்திற்கு 1௦ ல் திக்பலம் பெற்று நிற்கிறார் என்பதை கவனிக்க. மேலும் மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் ரிஷபத்திற்கு பரிவர்த்தனையாகி வந்து ஆட்சி பெறுகிறார். இது ஜாதகர் தற்போது வெளிநாட்டில் நல்ல நிலையில்தான் உள்ளார் என்பதை குறிப்பிடுகிறது.
வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் ஜாதகருக்கு தற்போதைய வருட கிரக நிலைகளால் பாதிப்பு ஏதும் வருமா? என்பது கேள்வி. சனிப் பெயர்ச்சி நடந்துவிட்டது. குருப்பெயர்ச்சியும், ராகு-கேதுப் பெயர்ச்சியும் அடுத்த மாதத்தில் நடக்கவுள்ளது. ராகு-கேதுகள் தற்போது மீனத்திலும் கன்னியிலும் கோட்சாரத்தில் நிற்கின்றன. முன்பே பார்த்தபடி ஜாதகர் வெளிநாட்டில் வேலையில் இருந்தால் அவருக்கு வேலையில் பாதிப்பு வராது. ஜாதகர் வெளிநாட்டிதான் இருக்க வேண்டும் என்பதை கோட்சாரத்தில் லக்னாதிபதி மற்றும் ராசியாதிபதியின் நிலை தெளிவாகக் குறிப்பிடுகிறது. எனவே வேலையில் பாதிப்பில்லை. கோட்சாரத்தில் ஜீவன காரகர் சனி கால புருஷனுக்கு வெளிநாட்டுத் தொடர்பை குறிக்கும் 12 ஆமிடத்தில் ஜனன காலத்தை போலவே கோட்சாரத்திலும் அமைந்துள்ளார். பொதுவாக இவ்வமைப்பு பாதிக்காது என்றாலும், ஜனன சனி நேர்கதியில் உள்ளதால் அவர் கோட்சாரத்திலும் நேர்கதியிலேயே மீனம் சென்று அங்கு ஜனன கால கேதுவுடனும், கோட்சார ராகுவுடனும் தொடர்பாவதால் ஓரளவேனும் பாதிப்படைய வேண்டும். ஆனால் இங்கும் ஒரு Twist உள்ளது. கோட்சார சனி மீனம் சென்றதும் ஜாதகருக்கு பணி நிமித்தம் வரும் பாதிப்பை, ஜனன காலத்தில் சனியோடு பெயர்சியான குரு ஏற்றுக்கொண்டுவிடுவார். இது அவருக்கு குரு குறிக்கும் குடும்பம், பொருளாதாரம் ஆகியவற்றில் பாதிப்பை தருமேயன்றி சனியின் காரகங்களில் அதாவது பணியில் பாதிப்பைத் தராது என்பது உறுதியாகிறது.
இப்போது தசா-புக்திகளின் நிலை கோட்சார வருட கிரகங்களுடன் தொடர்பாகிறதா? என்று காண்போம். ஜாதகர் புதன் தசை சனி புக்தியில் உள்ளார். ஜனன சனி கோட்சார சனியுடன் தொடர்பாகிறார். புக்திகாரகராகவும் அவரே உள்ளதால் பணியில் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் சனிக்கு வரும் பாதிப்பைத்தான் குரு ஏற்றுக்கொண்டாரே இதனால் ஜாதகருக்கு வேலையில் பாதிப்பு வராது. சனியில் இடத்தில் குரு அமர்வதால் 28 வயதான ஜாதகருக்கு இந்தக்காலத்தில் குடும்பத்தை அமைத்துக்கொள்ள தகுந்த காலமல்ல. கோட்சார ராகு ஜனன சனியின் 7.47 பாகையை கடந்து கோட்சார சனியின் 2.24 பாகையையும் கடந்து மீனத்தில் 1.33 பாகையில் நிற்பதால் ஜாதகருக்கு வேலையில் நிச்சயம் பாதிப்பு வராது. குரு-சனி பரிவர்த்தனையால் சனி மகரத்தில் அமர்வதாக எடுத்துக்கொள்க. தற்போது மீனச் சனியின் இடத்தில் ஜனன கேதுவிற்கும் கோட்சார ராகுவிற்கும் நடுவே குரு மாட்டிக்கொண்டுள்ளார். இதனால் குருவின் காரகங்கள் பாதிப்பிற்குள்ளாகும். கோட்சாரத்தில் குரு லக்னத்திற்கு 9 ஆமிடம் மிதுனத்திற்கு அடுத்த மாதம் பெயர்ச்சியாகிச் செல்லவுள்ளார். அது பணி வகையில் ஜாதகருக்கு சிறப்பைத்தரும். ஆனால் 9 ஆமிடம் என்பது 2 க்கு 8 ஆமிடம் என்பதால் குடும்பத்தை அமைத்துக்கொள்ள சரியான காலமல்ல.

இந்த ஜாதகர் வளைகுடாவில் கப்பல்களை பழுது பார்க்கும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இதன் காரக ராசி மீனம். காரக பாவகம் லக்னத்திற்கு 12 ஆமிடமாகும். காரக கிரகங்கள் ராகுவும் கேதுவுமாகும். மீனத்தில்தான் வருட கிரகங்களில் குருவும் சனியும் ராகு-கேதுக்களுடன் தொடர்பாகின்றன. மீனத்தை லக்னத்திற்கு 12 ஆமிடமான கன்னியில் இருந்து ஜனன கால ராகுவும் செவ்வாயும் பார்ப்பதால் இவற்றோடு தொடர்புடைய காராகத் தொழில் பாதிப்படையாது என்பதால் ஜாதகருக்கு பணியில் பாதிப்பில்லை. என்று உறுதியாகச் சொல்லப்பட்டது. அதே சமயம் லக்னத்திற்கு 8 ல் களத்திர காரகர் சுக்கிரன் குருவோடு பரிவர்த்தனையாகி மறைவதும், 7 ஆமதிபதி செவ்வாய் கோட்சாரத்தில் திக்பலதுடன் நீசம் பெற்று 2 ஆமிடத்துடன் பரிவர்த்தனை ஆவது சம்பாத்தியத்தை தடை செய்யாது. ஆனால் திருமண வாழ்வை தடை செய்யும். ஏனெனில் கோட்சாரத்தில் பரிவர்த்தனையாகும் சுக்கிரனும் செவ்வாயும் 2 ஆமிடத்துடந்தான் தொடர்புகொள்கின்றன. 7 ஆமிடத்துடன் அல்ல. எனவே ஜாதகருக்கு வேலையில் பாதிப்பு வராது. ஆனால் திருமண வாய்ப்பு தள்ளிப் போகும் என்று கூறப்பட்டது. ஜாதகர் வேலை மற்றும் திருமணம் இவ்விரண்டையுமே கேள்வியாக எழுப்பினார். கோட்சார சந்திரன் சனியின் 1௦ ஆம் பார்வையை பெறுவதாலும், விருட்சிகத்தில் பரிவர்த்தனையாகி நிற்கும் 2 , 7 ஆமதிபதி செவ்வாயை கோட்சாரச் சந்திரன் சந்தித்துவிட்டு தனுசிற்கு வந்ததாலும் இவ்விரு கேள்வியையும் எழுப்பினார்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501