
இருமனம் இணையும் திருமணம் என்பது கடவுள் போட்ட முடிச்சு என்பர். இளம் வயதில் இவ்வாசகத்தை கேட்கும்போது வீணர்களின் பேச்சு இது என்ற எண்ணம் கூட பலருக்கு வரும். அவர்களிடமே திருமண வாழ்வை ஒரு தசாப்தமாவது அனுபவித்த பிறகு இக்கருத்தைப் பற்றி கேட்டால், நம்மை மீறி ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்குகிறது என்று பதில் கூறக் கேட்டுள்ளேன். வாழ்க்கை என்பது ஒரு புதிர். அதை அனுபவித்துக்கொண்டே முயலுங்கள் புதிர் விடுபடும் என்பது பல ஞானிகளின் கருத்தாக உள்ளது. பலரது குடும்ப வாழ்வை காணும்போது சிறு வயதில் அவர்களது மனோபாவத்திற்கும் குடும்பஸ்தர்களான பிறகு அவர்களது மனோபாவத்திற்கும் பெரிய வேறுபாட்டை காண முடிகிறது. திருமண வாழ்க்கையை இருவர் இணைந்து விளையாடும் ஒரு விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால், எதிராளியின் நிலைக்கு தக்கபடி விளையாடுபவர்கள் வெற்றி காண்கிறார்கள். இவிளையாட்டில் ஒருவருக்கு மட்டும் வெற்றி என்ற கோப்பை கொடுக்கப்படுவதில்லை. ஏனெனில் ஒருவர் மட்டும் வெற்றி பெற்றால் மற்றொருவர் தோல்வியடைகிறார். தோல்வியுற்று எதிராளி வெளியேறிவிட்டால் நம்மவரது குடும்ப வாழ்வு முடிவுக்கு வருகிறது. இங்கு மற்றவருக்கு விட்டுக்கொடுப்பவர்கள் விளையாட்டை இழக்காமல் ஆடுகிறார்கள். ஆனால் ஒருவருக்காக மற்றவர் மட்டுமே அதிகமாக விட்டுக்கொடுக்கிறார் எனில் நிச்சயம் அவர்களது குடும்ப வாழ்வு என்றாவது ஒருநாள் முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாததாகிறது. இதனால் வெற்றி, தோல்வி எனும் நிலையை தவிர்த்து இருவருமே களத்திலிருந்து வெளியேறிவிடக்கூடாது எனும் நிலையில் இவ்விளையாட்டு விளையாடப்பட வேண்டும். நாம் எதிராளிக்கு தக்கபடி கவனமாக விளையாட வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, எதிராளியும் தோல்வியடைந்து வெளியேறிவிடக்கூடாது எனும் கவனத்துடன் விளையாடப்பட்ட வேண்டிய விசித்திரமான விளையாட்டே குடும்ப வாழ்வாகும். இந்நிலையில் சமீபத்தில் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்று என்னிடம் வந்த ஒரு தம்பதியின் ஜாதகங்கள் இன்றைய ஆய்வுப் பதிவாக வருகிறது.
கீழே கணவனின் ஜாதகம்.

கும்ப லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதியும் ஜீவன காரகருமான சனி 12 ல் ஆட்சி பெற்று, கடகத்தில் ஆட்சி சனியின் சாரத்தில் பூசம்-1 ல் நின்றதால், நீசபங்கப்பட்ட வாகன காரகர் செவ்வாயின் பார்வையை பெறுவதால் ஜாதகர் வாகனத் துறையில் பணிபுரிகிறார். 1௦ ல் 7 ஆமதிபதி சூரியன் திக்பலம் பெற்று ராகு, புதனுடன் இணைந்திருப்பதால் ஜாதகரைவிட மனைவி வலுவானவராகிறார். களத்திர காரகர் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சுய சாரம் பூராடத்தில் நிற்பதால் மனைவியால் ஜாதகருக்கு லாபமுண்டு. ஆனால் சுக்கிரனுக்கு இருபுறமும் பாவிகள் அமைந்து பாவகர்தாரி யோகம் ஏற்பட்டுள்ளதாலும், சுக்கிரனுக்கு செவ்வாய் 8 ல் நிற்பதாலும் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு இருக்கும். அதே சமயம் 7 ஆமதிபதி சூரியன் லக்னாதிபதி சனி சாரத்தில் விருட்சிகத்தில் அனுஷத்தில் அமைந்ததால் கருத்து வேறுபாட்டை மீறிய பிணைப்பு இருவருக்குமிடையே இருக்கும். 7 ஆமதிபதி சூரியன் ராகுவுடனும், புதனுடனும் இணைந்ததால் மனைவிக்கு சிறந்த நிர்வாகத் திறனுண்டு. இயல்பாகவே ஆதிக்க மனோபாவம் கொண்ட களத்திர பாவாதிபதி சூரியனுக்கு ராகுவின் இணைவு அதீத ஆளுமையை வழங்கும். இங்கு ஜாதகரைவிட மனைவி வலுவானவர், சாதுர்யம் மிக்கவர் எனும் நிலையை குறிப்பிடும். .
இரண்டாவதாக மனைவியின் ஜாதகம்.

கடக லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் உச்சம் பெற்றது சிறப்பு. 2 ஆமதிபதி சூரியன் துலாத்தில் புதனுடன் பரிவர்த்தனையாகும் சுக்கிரனால் நீச பங்கப்படுகிறார். பரிவர்த்தனையில் துலாத்திற்கு வரும் சுக்கிரன் நீச பங்கத்துடன் திக்பலமும் பெறுகிறார். 4 ஆமிட சூரியனும் சுக்கிரனும் 1௦ ஆமிடத்தை பார்வையிடுவதால் ஜாதகிக்கு தனிச் சிறப்பு மிக்க அதிகாரப் பதவி வாய்க்கும். குடும்ப காரகர் குரு 6 ஆமிடத்திலிருந்து 1௦ ஆமிடமான மேஷத்தையும், 2 ஆமிடம் சிம்மத்தில் நிற்கும் 10 ஆமதிபதி செவ்வாயையும் பார்வையிடுகிறார். இவை யாவும் ஜாதகிக்கு திருமணமானவுடன் வேலை கிடைக்கும் என்பதை குறிப்பிடுகிறது. ஜாதகிக்கு திருமணமாகி மூன்று மாதத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஜாதகிக்கு வேலை கிடைக்க வேண்டுமானால் திருமணமாகி கணவன் வரவேண்டும் என்பதை ஜாதகம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஜாதகிக்கு குடும்பம் அமைந்தவுடன் 6 ஆமிட குருவின் பார்வை 2 ஆமிட செவ்வாய்க்கு கிடைப்பதால் கணவரும் பொருளாதார ரீதியாக உயர்வடைய வேண்டும். உண்மையில் திருமணமான பிறகு கணவருக்கும் நல்ல சம்பாத்தியத்தில் பணி மாறுதல் கிடைத்தது. திருமண பந்தத்தில் கணவனும் மனைவியும் இணைந்த பிறகு மனைவிக்கு பணியும், கணவருக்கு உத்தியோக உயர்வும் கிடைக்க வேண்டும் என்ற சிறப்பான அமைப்பு.
கணவரின் கும்ப லக்னத்திற்கு மனைவியின் கடக லக்னம் 6 – 8 ஆக அமைந்தது பெரிய பாதிப்பை தராது. ராசிதான் ஈர்ப்பு. ஜாதக அமைவிற்கு அடுத்து தசா-புக்திகளின் பங்கு தம்பதி ஒற்றுமைக்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். கணவரின் கன்னி ராசிக்கு மனைவியின் ரிஷப ராசி திரிகோணத்தில் அமைந்துள்ளது சிறப்பு. ஆனால் கணவரின் கேது மனைவியின் சந்திரன் மீது அமைந்தது மனைவிக்கு மன உழைச்சலை ஏற்படுத்தும். மேலும் கணவரின் 7 ஆமதிபதி சூரியன் மனைவி ஜாதகத்தில் நீசபங்கப்படுவது பொருளாதாரத்திற்கு சிறப்பு. ஆனால் குடும்ப விஷயத்தில் கணவன்-மனைவியிடையே காதலை விடுத்து கௌரவத்தை முக்கியப்படுத்தும் அமைப்பு. இதனால் இருவருக்குமிடையேயான அன்னியோன்யம் பாதிக்கப்படும். மனைவி ஜாதகத்தில் 2 ல் செவ்வாய் அமைந்து கணவரின் லக்னத்தை பார்ப்பது மனைவி பேசும் வார்த்தைக்கு கணவர் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்ற நிலையை குறிக்கிறது. கணவர் லக்னாதிபதி சனி 12 ல் ஆட்சி பெற்று மனைவி லக்னத்தை பார்ப்பது மனைவியின் மீது கணவரின் கட்டுப்பாட்டை குறிப்பிடுகிறது.
மேற்கண்ட அமைப்பை வைத்து பார்த்தால் இருவரும் பொருளாதார வகையில் சிறப்பை பெற்றிருந்தாலும் குடும்ப வகையில் ஒருவருக்கொருவர் கட்டுப்பாட்டுடன் வாழும் நிலை உள்ளது தெரிகிறது. ஆனால் குடும்ப ஒற்றுமையில் அதிருப்தி இல்லாமல் இருக்காது. இவர்களது பெற்றோர்கள் இவர்கள் இருவரும் சண்டையிடாமல் இருப்பதே இல்லை. இதன் காரணம் என்ன? என்று ஜாதகம் பார்க்க வந்திருந்தனர். அதிருப்தி இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் பிரயாமல் இணைந்து வாழவும் செய்கிறார்கள். கணவருக்கு குரு தசை நடக்கிறது. கணவருக்கு 8 ல் குரு சந்திர யோகம். இதனால் பொருளாதாரம் சிறப்பு. குடும்பத்தில் சங்கடங்கள். கணவரின் தசா நாதர் குரு இருக்கும் இடத்தில் மனைவியின் தசா நாதர் ராகு இருக்கிறார். கிரகங்களில் ராகு-கேதுக்களே வலுவானவர்கள் என்பதற்கேற்ப, குடும்பத்தில் ராகு தசை நடக்கும் மனைவி கையே ஓங்கி இருக்கும். ஆனால் ராகுவின் துர் குணத்தை கன்னியில் ராகு மீது அமரும் கணவரின் தசாநாதர் குரு மட்டுப்படுத்திவிடுவார். இதனால் பாதிப்பு கடுமையாக இருக்காது.
இருவருக்குமிடையேயான ஜாதக அமைப்பு பாதிப்பு போல தெரிந்தாலும் ஜாதக இணைவுகள் ஒன்றையோன்று இணக்கமாக செயல்பட வைக்கின்றன. இருவருக்குமிடையேயான சில நேரச் சண்டையில் சட்டை கிழியாமல் இருக்கலாம். ஆனால் சிறு வருத்தங்கள் மட்டும் இருக்கும். “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகத் திறமையானவர்கள். ஆனால் வாய்தான் காது வரை நீழும்” என்ற திரைப்பட வசனம் நினைவிற்கு வருகிறது.
மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனிப்பன்,
கைபேசி: +91 8300124501