
அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர் ஆலோசனை பெற்ற போது அவரது தொழில் பற்றி பேச்சு வந்தது. அவர் ஒரு மருந்து வியாபாரி. மருந்துக்கடை வைத்துள்ளார். அது அவருக்கு பரம்பரைத் தொழில். தனது முன்னோர்கள் தனக்களித்துச் சென்ற தொழிலை ஈடுபாட்டுடன் செய்து வருகிறார். மருந்துக்கள் சார்ந்த பின்னணியில் வந்தவருக்கு இயல்பாக உள்ள மருத்துவ விஷயங்களுடன் தனது தனித் திறமையால் தொழிலை திறம்பட நடத்தி பெரும் தனவந்தராக உயர்ந்துள்ளார். அப்போது அவர் கூறிய சில விஷயங்கள் மனதில் பதிந்தன. அவரது வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் குறிப்பிட்ட சில மருந்துக்களை நாடி அவரிடம் வருவதாகவும். அவற்றை தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்வதாலேயே தான் பெரும் தனம் ஈட்டியதாகவும் அவர் கூறியபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மருந்துவம் சார்ந்த தொழிலில் இருக்க கிரக காரணங்களை அறிந்திருந்தாலும் குறிப்பிட்ட வகை மருந்துகள் அவருக்கு ஏன் அதிகம் தன வரவை தருகின்றன என ஜோதிட அடிப்படையில் ஆராய்ந்து நான் அதிசயப்பட்ட விஷயங்களே இன்றைய பதிவாக வருகிறது.
கீழே அவரது ஜாதகம்.

ரிஷப லக்னத்திற்கு தொழில் ஸ்தானமான 1௦ ஆமிடம் கும்பத்தை சுகஸ்தானத்தில் ஆட்சி பெற்ற சூரியன் பார்ப்பது ஜாதகர் மருத்துவம் சார்ந்த தொழிலில் தனித்து செயல்படுவார் என்பதை குறிப்பிடுகிறது. லக்னத்திற்கு மூன்றாமதிபதி சந்திரன் 5 ஆமதிபதி புதனுடன் பரிவர்தனையாகியுள்ளார். பரிவர்த்தனைக்குப் பின் தனது உச்ச வீட்டிலிருந்து மருந்துக்களை குறிக்கும் புதன் மீனத்தில் வக்கிரம் பெற்று நிற்கும் ஜீவனகாரகர் சனியை பார்க்கிறார். இவ்வமைப்புகளால் ஜாதகர் சொந்தமாக மருந்து வியாபாரம் செய்கிறார்.
கடகத்தில் நிற்கும் கிரகங்களுள் நீசச் செவ்வாய் முக்கியமானவர். அதாவது வாடிக்கையாளர்களைக் குறிப்பிடும் 7 ஆமிடமும், 2 ஆவது காமத் திரிகோணம் விருட்சிகத்தின் அதிபதியுமான செவ்வாய் முதல் காமத்திரிகோணமும் கால புருஷனுக்கு சுகஸ்தானமுமான கடகத்தில் நீசம் பெற்று அங்கு புதன், சுக்கிரனுடன் இணைந்துள்ளதால் இவரது வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் வாலிப வயோதிகர்களாக இருப்பர். அதாவது அதிக இல்லறத்தால் உடல் பலகீனமானவர்கள் தங்கள் உடல் வலுவை மீட்டெடுக்க இவரை நாடி வருபவர்களாக இருப்பர் என்பதை இவ்வமைப்பு காட்டுகிறது. புதனுடனான பரிவர்த்தனைக்குப் பின் சந்திரன் கடகம் வந்து அங்கு நீசமான செவ்வாயை நீச பங்கப்படுவது இவரது மருத்துவத்தால் இவரது வாடிக்கையாளர்கள் வலுவடைவதை குறிப்பிடுகிறது.
வக்கிரச் சனி கால புருஷனுக்கு பள்ளியறையை குறிப்பிடும் மீனத்தில் நிற்பதை கவனிக்க. பள்ளியறை விசயங்களில் ஈடுபட்டுச் சம்பாதிப்பதே இவரது ஜீவன கர்மா என்பதை இது குறிப்பிடுகிறது. சனிக்கு வீடு கொடுத்த குரு, தன ஸ்தானமான மிதுனத்தில் நிற்பதால் இவருக்கு இத்தகைய மருந்துகளின் விற்பனையால் நல்ல தனம் சேருகிறது என்பதை குறிப்பிடுகிறது. சனி வக்கிரமானது இவரது தொழிலில் இவருக்கு உள்ள நுட்பமான அறிவை குறிப்பிடுகிறது. சனி ராகு-கேது அச்சை விட்டு விலகி நிற்பதை கவனிக்க. இது இத்தகைய வாடிக்கையாளர்களுக்காக ஜாதகர் தனியாக ஒரு மருந்தகத்தை ஊரைவிட்டு விலகியுள்ள இடத்தில் நடத்துகிறார் என்பதை குறிப்பிடுகிறது. கால புருஷனுக்கு 12 ஆமிடம் மீனம் இரவை குறிப்பிடும் என்பதால் இத்தகைய விஷயங்களுக்காக ஜாதகருக்கு இரவில்தான் அதிக மருந்து வியாபாரம் நடக்கிறது. இதை இன்னும் நுட்பமாக தொழிலுக்கான தசாம்சம் சுட்டிக்காடுகிறதா? என்று காண்போம்.

மேஷ லக்னாதிபதி செவ்வாய், லக்னத்திற்கு 12 ல் பள்ளியறை ராசியான மீனத்தில் அதன் அதிபதி குருவுடன் இணைவு பெற்றிருப்பது ஜாதகரின் தொழில் ஈடுபாடு எதில் இருக்கும் என்பதை பறை சாற்றுகிறது. சந்திரன் சுக்கிரனுடன் முதல் காமத் திரிகோணமான மிதுனத்தின் இணைந்து சனியை பார்ப்பது இவரது மனம் தொழில் ரீதியாக எப்படிச் சிந்திக்கும் என்பதை குறிப்பிடுகிறது. ராசிச் சக்கரத்தைப் போன்றே தசாம்சத்திலும் சந்திரன் புதனுடன் பரிவர்த்தனை பெற்று சனியுடன் தொடர்பாவது இல்லற இன்பங்களுக்கான வியாபாரத்தில் ஜாதகர் ஜொலிப்பதை குறிக்கிறது. சூரியன் ராசிச் சக்கரத்தைப் போன்றே இங்கும் சிம்மத்திலேயே அமைந்து வர்கோத்தமம் பெற்றதாலும், 1௦ ஆமிடத்தில் ராகு அமைந்து புதன் பார்வை பெறுவதாலும் ஜாதகர் மருந்து விற்பனையில் ஈடுபட்டு பொருளீட்டுவது இங்கு உறுதிப்படுகிறது. 9 ஆமிட சனி சுக்கிரனின் பூராடத்தில் நின்று மிதுனச் சுக்கிரனின் பார்வையை பெறுவது, இவர் தொழில் வியாபாரத்தில் இல்லற இன்பத் தொடர்பு ஏற்படுவதை குறிப்பிடுகிறது.
விடலைப் பருவத்தில் சிட்டுக்குருவி லேகியம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது ஒரு கதை என்று பல காலம் எண்ணிய எனக்கு 1௦ வருடங்களுக்கு முன்பு அப்படி ஒன்று மெய்யாலுமே இருப்பதை ஒரு மருந்தகத்தில் பார்த்தபோது நம்ப முடியவில்லை. சிட்டுக்குருவிகள் பாவம்யா. அலைபேசிக் கோபுரங்களால் சிட்டுக்குருவிகளை காணமுடிவதில்லை என்பது ஒருபுறம் இருக்க, சிட்டுக்குருவிகளை விட்டுவிட்டு நடிகர் பாக்கியராஜ் கூறிய முருங்கைக்காயை வாலிப வயோதிகர்கள் முயற்சிக்கலாமே.
மீண்டும் உங்களை விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501.