
ஜனனமும், மரணமும் பிரம்ம ரகசியம் என்பர். ஆயுள் பற்றிய கேள்விகள் வந்தால் கேள்வி கேட்பவர் நிலையறிந்து ஜோதிடர் பதிலளிப்பது உத்தமம். பல வேளைகளில் அவசியமற்றதாக அது இருக்கும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன் வயோதிக உபாதைகளால் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தால் அவர் பிழைக்க வாய்ப்புகள் எத்தனை சதவீதம் உள்ளது? என்றொரு அன்பர் கேட்டிருந்தார். மருத்துவர்கள் முயன்று பார்க்கலாம். ஆனால் பிழைக்க 25% வாய்ப்புகளே உள்ளன என்று கூறியிருந்தனர். அறுவை சிகிச்சைக்கான செலவு ஒரு கணிசமான தொகை. தந்தைக்கு செலவு செய்ய பணமும், மனமும் மகனுக்கு இருந்தது. அதற்காக பார்க்கப்பட்ட பிரசன்னத்தில் உதயத்திற்கு அடுத்த வீட்டில் மாந்தியுடன் கவிப்பு இருந்தது. அறுவை சிகிச்சை செய்தால் தந்தை உடனடியாக மரணித்துவிடும் நிலை இருந்தது. அதனால் அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டது. முதியவரின் உடல் வேதனைகளை குறைக்க சில பரிகாரங்களை அப்போது கூறியிருந்தேன். அதன் பிறகு அந்த முதியவர் சில மாதங்கள் கழித்து மரணித்தார். அறுவை சிகிச்சை செய்திருந்தால் உடனடி மரணம் ஏற்பட்டிருக்கும்.
அதே போன்று தற்போது அறிமுகமான வட்டத்திலிருந்து ஒரு பெண்மணி தனது தந்தையின் ஆயள் பற்றி கேட்டார். 194௦ ல் பிறந்த தனது வயோதிகத் தந்தையின் ஆயுள் பற்றி கேள்வி. முதியவர் ஆரோக்கியக் குறைவால் படுக்கையில் இருக்கிறார். உணவு திரவங்களாக மட்டுமே கொடுக்கப்படும் நிலையில், எந்நேரமும் எதுவும் நடக்கும் என்ற நிலையில் தனது தந்தை இருப்பதாக அப்பெண்மணி கூறினார். கேள்வி கேட்ட பெண்மணியின் மகளுக்கு அதாவது முதியவரின் பேத்திக்கு திருமணம் ஒரு மாதத்தில் நடக்க இருக்கும் வேளையில், தனது தந்தையின் நிலையால் அவரது பேத்தி திருமணம் தடைபடுமா? என்று மகள் கேள்வி கேட்டார். பொதுவாக இத்தகைய நிலைகளில் சுப விஷேசங்களை தள்ளி வைப்பதே உத்தமம். ஆனால் திருமணதிற்கு சில லட்சங்களில் கல்யாண மண்டபத்தை முன் பதிவு செய்தது உட்பட, பல செலவுகள் ஏற்கனவே செய்யப்பட்ட நிலையில் திருமணத்தை ஒத்தி வைப்பது அவர்களுக்கு கடினமாக இருந்தது. எனவே இதன் பொருட்டு பிரசன்னம் பார்ப்பது என முடிவு செய்யப்பட்டு பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.

ரிஷப உதயத்தை கடந்து சென்ற கிரகங்களுள் ஒன்றான ஆயுள் காரகர் சனி உதயத்திற்கு 12 ல் மேஷத்தில் நீசமான நிலையில், ஆயுள் ஸ்தானாதிபதி குருவும் அங்கு ராகுவுடன் இணைந்துள்ளனர். இது கேள்விக்குரிய நபர் ஆயுளுக்கு பாதிப்பான நிலையில் படுக்கையில் இருக்கிறார் என்பதை குறிக்கிறது. உதயாதிபதி சுக்கிரனே 6 ஆமதிபதியுமாகி அவர் கால புருஷ 6 ஆமதிபதி புதனுடன் இணைந்து சுகஸ்தானமான 4 க்கு விரையத்தில், மூன்றில் அமைந்தது கேள்விக்குரிய நபர் ஆரோக்கிய குறைவில் உள்ளதை குறிப்பிடுகிறது.
உதயத்திற்கு 7 ல் விருட்சிகத்தில் ஆரூடம் அமைந்துள்ளது. கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகத்தில் ஆரூடந்து மாந்தியுடன் இணைந்து உதயத்தை பார்ப்பதால் ஆயுள் தொடர்புடைய கேள்வி என்பது உறுதியாகிறது.
கவிப்பு நோயை குறிக்கும் 6 ஆமிடம் துலாத்தில் அமைந்துள்ளதும் கேள்விக்குரிய நபர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை குறிப்பிடுகிறது. 1௦ ஆமிடம் கேள்விக்கான சூழலை தெளிவாக படம் பிடித்துக்காட்டும் என்பதற்கேற்ப, அங்கு சனி நின்றது. ஆயுள் தொடர்பான விஷயம் என்பதை உறுதியாக தெரிவிக்கிறது. உச்ச-நீச்ச கிரகங்களே கேள்வியின் பின்னணியில் முக்கியமாக இயங்கிக்கொண்டிருக்கும் என்பதற்கேற்ப, ஜாமச் சனி மேஷத்தில் நீசமாகி நிற்க அதன் எதிரில் ஜாமச் செவ்வாய் கவிப்புடன் நின்று சனியை பார்ப்பது மரண ஜாமம் என்பதை தெரிவிக்கும் நிலையாகும். இது கேள்விக்குரிய நபர் மரணத்திற்குரிய கடுமையான சூழலில், பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதை தெரிவிக்கிறது. உதயத்தை கவிப்புடன் சேர்ந்துள்ள கால புருஷ 8 ஆமதிபதி செவ்வாய் தனது பாதிப்பான 8 ஆம் பார்வையாக பார்ப்பதால் கடினமான சூழலை மேலும் கடுமையாக்குகிறது.

உதயமே கால புருஷ 2 ஆமிடத்தில் அமைந்துள்ளதாலும், உதயாதிபதி உள்வட்ட சுக்கிரன் உணவை குறிக்கும் கடகத்தில் நின்றதாலும், நோயாளி திரவ உணவை மட்டுமே உட்கொள்ளும் நிலையில் இருக்கிறார் என்பது தெரிகிறது. 2 ல் நிற்கும் உதயாதிபதி சுக்கிரன் கேள்விக்குரிய நபர் உணவு எடுத்துக்கொள்ள உதவுகிறார். ஒரு நன்மையான அமைப்பு என்னவென்றால் உதயத்தை மாந்தி பார்த்தாலும், மாந்தி உதய பாகைக்கு நெருக்கமாக இல்லை என்பதும், ஆரூடம் மாந்தியை கடந்துள்ளதும் கேள்விக்குரிய நபர் மரண கண்டத்தில் இருந்தாலும், அவருக்கு உடனடி மரணத்தை இவ்வமைப்பு தெரிவிக்கவில்லை. 2 ல் நிற்கும் ஜாம உதயாதிபதி சுக்கிரன் உதயத்தை நோக்கி வருவதால், குறிப்பிட்ட நபருக்கு தாங்கு திறன் கூடும். இது கடினமான தனது நிலையை முதியவர் இன்னும் சில காலங்கள் சமாளிப்பார் என்பதை குறிப்பிடுகிறது.
மேற்கண்ட அமைப்புகளை ஆராய்ந்துவிட்டு பிரசன்னம் பார்த்த இவரது மகளிடம், உங்கள் தந்தைக்கான ஆயுள் பிரசன்னத்தில் அவர் மரணப்படுக்கையிலிருப்பதை கிரகங்கள் குறிப்பிட்டாலும் அவருக்கு உடனடி மரணத்தை காட்டவில்லை. தனது பேத்தி திருமணம் தடைபட இவரது மரணம் காரணமாக இருக்காது, எனவே திருமண விஷயங்களை நிறுத்தாமல் தொடருமாறு கூறினேன்.
பிரசன்னம் பார்த்து 5 மாதங்களுக்குப் பிறகு கேள்விக்குரிய நபர் மரணமடைந்தார். அதற்குள் திட்டமிட்டபடி அவரது பேத்தி திருமணம் நடந்து அவர் கருத்தரித்திருந்தார்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501