
ஜோதிடத்தில் ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்கான அமைப்புகள் சில உண்டு. அவற்றை திருமணப் பொருத்தத்தில் முக்கியமாக பயன்படுத்துவது இயல்பு. ஒரு கிரகத்தின் திரிகோணங்களில் அமையும் பிற கிரகங்கள் அதனுடன் ஒத்திசைவாக செயல்படும். ஒரு கிரகம் மற்றொரு கிரகத்திற்கு வலு சேர்க்கும் அமைப்பில் அவையிரண்டும் இணைந்து செயல்படும். உதாரணமாக ஒரு விருட்சிக ராசிக்காரரை ஒரு ரிஷப ராசிக்காரர் ஆதரிப்பார். சுபாவத்தில் விருட்சிக ராசிக்காரர் சிடுசிடுப்பு காட்டினாலும் அவரது சுபாவ குணத்தை ஏற்றுக்கொண்டு அவரை ரிஷப ராசியினர் ஆதரிப்பர். நீச்ச சந்திரன் உச்ச சந்திரனால் வலுவடைவதால் விருட்சிக ராசியினர் ரிஷப ராசியினரை மிகவும் விரும்புவர். ஒரு கிரகம் பாதிக்கப்பட்ட அமைப்பில் ஒருவரது ஜாதகத்தில் இருப்பின், உடன் இணைந்து செயல்படும் மற்றொருவரது ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட அக்கிரகத்திற்கு புத்தொளி பாய்ச்சும் வகையில் ஒரு கிரக தொடர்பு ஏற்படின் புத்தொளி பெறும் கிரக உறவு தனக்கு நற்பலனை கொடுக்கும் மற்றவரது ஜாதக உறவை விரும்புவார். இவை இரண்டும் பகையாக இருந்தாலும் அங்கே சகிப்புத் தன்மை ஏற்படும். உதாரணமாக சுக்கிரன் கேதுவுடன் துலாத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் அமைந்ததால் குடும்ப வாழ்வு பாதிக்கப்பட்ட ஒரு ஆணுக்கு மிதுனத்தில் இருந்து 5 ஆவது பார்வையாக துலாத்தை பார்க்கும் குரு அமைந்த ஒரு வாரிசு பிறந்தவுடன் மனைவியால் நிம்மதி கிடைக்கும். காரணம் காரக உறவு வந்தவுடன் தந்தையின் சுக்கிரன்+கேது சேர்க்கையின் கடுமையை புத்திரம் எனும் குருவின் பார்வை தணித்துவிடும். மேற்சொன்ன விதிகளுக்கு மாறாக ஒரு கிரகத்தை மற்றொரு கிரகம் பாதிக்கும் அமைப்பில் இருக்கும் இருவர் இணைந்து செயல்படுகையில், அங்கே இருவரும் தொடர்புகொள்ளும் நாளிலிருந்தே பாதிப்பு உண்டு என்பதையும் அறிக. இவற்றை திருமணத்தில் முக்கியமாக தம்பதி இடையே அன்னியோன்யம் எப்படி என்பதை அறிய பார்த்துப் பொருத்துவோம். இப்படி ஒருவரது வாழ்க்கை வட்டத்தில் வந்திணையும் நபர்களின் ஜாதக அமைப்புத்தான் அவர்களுக்கிடையேயான புரிதலுக்கும், விருப்பு, வெறுப்புகளுக்கும் காரணமாகிறது. ஓரிரு கிரக அமைப்புகள் இரு நபர்களை ஒருங்கிணைய வைக்கிறது எனும் சூழலில் மற்ற கிரக அமைப்புகள் அப்படி அமையாவிட்டால் அவர்கள் இருவரும் குறிப்பிட்ட அக்கிரக காரக, ஆதிபத்திய விஷயங்களில் மட்டும் ஒத்த கருத்து உடையவர்களாக இருப்பர். மற்றைய விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்படும். இதை ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வதே இன்றைய பதிவு.
கீழே ஒரு நீங்கள் காண்பது திருமணமான ஒரு பெண்ணின் ஜாதகம்.

தனுசு லக்னாதிபதி குரு 8 ல் கடகத்தில் மறைந்துவிட்டார். அவர் உச்சமானால் மறைவு ஸ்தான பாதிப்பு குறையும். ஆனால் 8 ல் மறைந்து உச்சமாகி வக்கிரமும் ஆகிவிட்டதால் குரு தனது உச்ச வலுவை இழந்துவிடுகிறார். குரு வக்கிரமடைந்தது உடனிருக்கும் கேதுவால் பாதிப்பு ஏற்படாவண்ணம் தவிர்க்கும். ஆனால் 8 ல் மறைந்தது வலுவிழந்த அமைப்பே. லக்னாதிபதி சென்று அமையுமிடம் ஜாதகரே சென்று அடைக்கலம் தேடுமிடம். லக்னாதிபதி 8 ல் மறைந்து வலுவிழந்துவிட்டதால் இனி 8 ஆமதிபதி சந்திரன் வலுப்பெற்றால் மட்டுமே ஜாதகிக்கு ஓரளவு நன்மைகள் ஏற்படும். சந்திரன் தனுசு லக்னத்திற்கு அஷ்டமாதிபதி என்பதால் நன்மைகளை செய்ய மாட்டார். எனவே இந்த ஜாதகிக்கு சந்திரன் குறிப்பிடும் உறவுகளான தாய், மாமியார் மூலம் நன்மைகள் ஏற்பட வழியில்லை. கடக ராசிக்கு கடும் பாவிகளான சனி, ராகு பார்வை கிடைப்பதாலும், கேது கடகத்தில் அமைந்ததாலும் ஜாதகி திருமணமாகி மாமியார் வீடு சென்றால் தாயார் நிம்மதிப் பெருமூச்சு விடுவார். ஆனால் மாமியார் பாதிப்பை சந்திப்பார். லக்னாதிபதியின் வலுவே சந்திரனான மாமியாரை சார்ந்துதான் உள்ளது என்பதுடன் சந்திரனின் கடக ராசி கடுமையாக பாதிக்கப்படுவதாலும் மாமியார் இவரை அன்போடு அணுக வழியில்லை.
ஒருவரது சுபாவ குணம் என்பது வேறு. செயல்பாடு என்பது வேறு. சுபாவ குணத்திற்கு காரக கிரகத்தையும், செயலுக்கு காரக பாவகத்தையும் ஆராய வேண்டும். தாயை குறிக்கும் சந்திரனது ராசி ஜாதகத்தில் பாதிக்கப்படுவதால் ஜாதகியின் தாயின் சுபாவம் சிறப்பானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் தாயை குறிக்கும் மாத்ரு பாவகம் எனும் 4 ஆமிடத்தில் உச்ச சுக்கிரன் அமைந்துள்ளதால் ஜாதகி பிறந்த பிறகு தாயாருக்கு சிறப்புகள் சேர்ந்திருக்கும். ஜாதகத்தில், ராசியிலும் நவாம்சத்திலும் கன்னியிலே அமைந்து சந்திரன் வர்கோத்தமம் பெறுவதும் இதற்கு மற்றொரு காரணம். இப்படி வர்கோத்தமம் பெற்ற சந்திரனை 4 ஆமிடத்திலிருந்து உச்ச சுக்கிரன் பார்ப்பது சந்திரனுக்கு மேலும் சுபத்துவத்தை கூட்டும் அமைப்பாகும். இது முந்தய பத்தியில் குறிப்பிட்டதற்கு மாறுபட்ட அமைப்பாகும். சுக்கிரன் 4 ஆமிடத்தில் திக்பலத்துடன் உச்சமாகியுள்ளார் என்பதால் 4 ஆமிடம் அதீத வலுப்பெறுகிறது. இவ்வமைப்பால் ஜாதகி பிறந்த தாயாருக்கு வளர்ச்சியை அள்ளித்தரும். இதை உணரும் தாயும் ஜாதகியை தனது சுபாவ குணத்தை மீறி நேசித்திருப்பார். தற்போது ஜாதகி திருமணமாகி சென்றுவிட்ட பிறகு சந்திரனுக்கு சுபத்துவ அமைப்புகள் விடுபடுவதால் தாயாருக்கு நற்பலன்கள் குறையும்.
இப்போது மாமியாரின் நிலையை ஆராய்வோம். தாயை குறிக்கும் சந்திரனேதான் மாமியாருக்கும் காரக கிரகமாகிறார். ஆனால் மாமியாரை குறிக்கும் பாவகம் மாறுபடுகிறது. கணவனின் தாயாரே ஜாதகிக்கு மாமியார் என்ற அடிப்படையில் 7 க்கு 4 ஆமிடமான 1௦ ஆமிடமே மாமியாரை குறிக்கும் பாவகமாகும். இந்நிலையில் மாமியாரை குறிக்கும் 1௦ ஆமிடத்திற்கும், காரக கிரகம் சந்திரனுக்கும் உச்ச திக்பல சுக்கிரனின் சுபப் பார்வை கிடைப்பதால் தாயாருக்கு கிடைத்த நல்ல பலன்கள் தற்போது மாமியாருக்குக் கிடைக்கும். இதனால் மாமியாரும் ஜாதியை விரும்புவார். காரக கிரகத்தின் ராசி பாதிக்கப்பட்டுள்ளதால் குறிப்பாக கடகத்தில் கேது அமைந்ததால், ஜாதகியின் திருமணத்திற்கு முன் மாமியார் மன உழைச்சலில் இருந்திருக்க வேண்டும். ஜாதகியின் வரவு மாமியாரின் மன உழைச்சலை போக்கியிருக்கும். வர்கோத்தம சந்திரன் மாமியாருக்கு வலு கூட்டுமென்பதால் மாமியார் ஜாதகியை மனதார நேசிப்பார் எனலாம்.
தாயும் மாமியாரும் இப்பெண்ணின் ஜாதகத்தால் எப்படி பலனடைகின்றனர் என்பது ஒருபுறமிருக்க, சந்திரனின் அம்சமான இவர்களால் ஜாதகி என்ன சூழலை எதிர்கொள்வார் என்பதை ஆராய்வோம். ஜாதக அரசவையில் சுக்கிரன் பகலுக்கு ராணி என்றால் சந்திரன் இரவுக்கு ராணி. இவையிரண்டும் சம அந்தஸ்துள்ள ஒன்றுக்கொன்று பகையான கிரகங்கள் என்பதால்தான் ஒரு வீட்டில் இரு அதிகார கிரகங்களின் மோதலே மாமியார் எனும் சந்திரனுக்கும் மருமகள் எனும் சுக்கிரனுக்கும் இடையேயான சண்டைக்கு காரணம். இவற்றில் அதிக வலுப் பெற்ற கிரகமே வெல்லும். ஆனால் இப்படி சம அந்தஸ்துகொண்ட இப்பகை கிரகங்கள் இரண்டும் எந்தச் சூழ்நிலையில் இணைந்து செயல்படும் என்பதை காண்போம். ஜாதகத்தில் ரோஹிணி-4 ல் அமைந்த செவ்வாயும், சித்திரை-2 ல் அமைந்த சந்திரனும் நட்சத்திரப் பரிவர்த்தனை பெறுகிறார்கள் என்பதை கவனிக்க. நட்சத்திரப் பரிவர்த்தனையால் கன்னிக்கு வந்து செவ்வாய் திக்பலம் பெறுகிறார். அதே சமயம் சந்திரன் தனது மூலத் திரிகோண வீடான ரிஷபத்திற்கு வந்து உச்சமடைகிறார். இதனால் இரு கிரகங்களும் அதீத வலுப் பெறுகிறார்கள். பரிவர்த்தனையாகி ரிஷபத்திற்கு வரும் சந்திரனின் வீட்டதிபதி சுக்கிரன் திக்பலத்துடன் உச்சமடைவதால் சந்திரனுக்கு மேலும் வலு கூடுகிறது. தனது வீட்டில் சந்திரன் உச்சமாவதால் ஏற்கனவே உச்சமும் திக்பல வலுவையும் அடைந்த சுக்கிரன் மேலும் வலுவடைகிறார். இவை இரண்டும் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று வலுவை பரிமாறிக்கொள்கின்றன. எனவே சுக்கிரனான மருமகளும் சந்திரனான மாமியாரும் மிக இணக்கமாக இணைந்து செயல்படும் நிலைக்கு வந்துவிடுகின்றனர். உச்சத்துடன் திக்பலம் பெற்ற சுக்கிரனின் நேர் பார்வையில் பரிவர்த்தனையால் கன்னிக்கு வந்தமரும் செவ்வாய் திக்பலம் பெறுவதால் ஜாதகிக்கு திருமணமானவுடன் ஜாதக அமைப்பு கணவரை வாழ்வில் உயர்த்தும். அதே சமயம் மாமியார் ஜாதகி வருகையால் தனது பல சிரமங்களிலிருந்து விடுபட்டு மிகச் சிறந்த பலனை அடைவார். மாமியாரை குறிக்கும் சந்திரன் தனது வீட்டில் உச்சம் பெறுவதால் சுக்கிரன் கூடுதல் பலம் பெறுவதால் மருமகளும் மாமியாரை மிக நேசிப்பார். பரிவர்த்தனையானது காரக உறவுகளான கணவன் எனும் செவ்வாயும், மாமியார் எனும் சந்திரனும் வந்தபின்தான் செயல்படும் என்பதை அறிக.
செவ்வாயும் சுக்கிரனும் திக்பலம் பெற்று நேர் பார்வை பார்ப்பது கணவன் மனைவிக்கிடையே மிகுந்த அன்னியோன்யத்தை ஏற்படுத்தக்கூடியது என்பது இயல்பானது. ஆனால் சம அந்தஸ்து உள்ள பகை கிரகங்களான சுக்கிரனும் சந்திரனும் வலுப்பெறுவதால் இரு கிரக காரக உறவுகளுமே வலுவடைகிறார்கள் என்பதால் மாமியாரும் மருமகளும் ஒருவரை ஒருவர் மிக நேசிப்பார். நேசத்தின் அளவு இந்த ஜாதகத்தில் எந்த அளவு சென்றது என்றால், கணவரின் பணி நிமிர்த்தம் வெளிநாடு சென்ற மருமகள், மாமியாரை பிரிந்திருக்க முடியாமல் கணவரை வற்புறுத்தி மீண்டும் கணவரின் ஊருக்கே அழைத்து வந்துவிட்டார். என்னே கிரக அதிசயங்கள்.
மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501