
வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும் கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை, காதல் என்று எதில் வேண்டுமானாலும் இத்தகைய விஷயங்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் திகைப்பை ஏற்படுத்தி இருக்கும். ஒரு தந்தை தனது கடின உழைப்பாலும் திறமையாலும் ஒரு தொழிலை வெற்றிகரகமாக ஏற்படுத்தி நடத்தியிருப்பார். அவரது புதல்வர்களில் சிலர் அவரது தொழிலை விரும்ப மாட்டார்கள். சிலர் அந்தத் தொழிலுக்கே படைக்கப்படது போல அதை ஏற்று வெற்றிகரமாக நடத்துவர். ஜாதக அமைப்புகள் ஒருவருக்கு எது எளிதில் வரும் என்றும், எது வாய்க்காது என்பதையும் துல்லியமாக சுட்டிக் காட்டிவிடும். ஆனால் தந்தையோ, தாயோ ஈடுபடுத்துகிறார்கள் என்பதற்காக புரியாத விஷயங்களில் ஈடுபட்டு பல வருடங்களை வீணாக்கிய பிறகே, பலர் அது தங்களது திறமைக்கானது அல்ல என்பது புரிந்து வேறு விஷயங்களில் ஈடுபட விளைகிறார்கள் பலர். கல்வி, தொழில் விஷயங்களில் மட்டுமல்ல வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு விஷயமும் அது தனிப்பட்ட ஒருவருக்கு அது எந்த அளவுக்கு பயனுள்ளதாக அமையும் என்று அடையாளம் காண வேண்டியது அவசியம். ஜாதக அமைப்பிற்கேற்ற விஷயங்களில் ஈடுபட்டால் அது ஒருவருக்கு பொதுவாக நன்மை என்று கூறப்பட்டாலும் ஒருவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் அவரது ஜாதக கொடுப்பினைகளை புறந்தள்ளி இயங்க வைக்கும். லக்னமோ, லக்னாதிபதியோ பலம் பெற்றவர்கள் தங்கள் விருப்ப விஷயங்களில் எத்தகைய கடும் போராட்டங்களை சந்தித்தாலும் அவற்றை முறியடித்து வாழ்வில் வெல்கிறார்கள். ஆனால் லக்னமோ, லக்னாதிபதியோ பலமிழந்தவர்கள் குறிப்பிட்ட அத்தகைய விஷயங்களில் மாட்டிக்கொண்டு வெளியேற வழி தெரியாது விழிக்கிறார்கள். ஜோதிடத்தில் யோகங்களும் சரி, தோஷங்களும் சரி நம்மைத் தேடி வரும். நாம் அவற்றை எப்படிக் கையாள்கிறோம் என்பதில்தான் வாழ்வின் வெற்றி, தோல்விகள் அமைகின்றன. இப்பதிவில் சிலருக்கு ஜாதக அமைப்பின்படி இயல்பாக அமையும் தொழில் சூழல்களை குறிப்பிட்ட ஒரு பாவக அமைப்பில் ஆராய்வோம். குறிப்பிட்ட பாவகமாக இங்கு 12 ஆம் பாவகத்தை எடுத்துக்கொண்டு ஆராய்வோம்.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

தனுசு லக்னாதிபதி குருவும், 4 ஆமிடத்தில் ஜீவன காரகர் சனியும் வக்கிரமாகியுள்ளனர். மிதுனத்தில் 3 கிரகங்கள் நின்று லக்னத்தையும், லக்னாதிபதி குருவையும் பார்க்கிறார்கள். மிதுனாதிபதி புதன் உயர்கல்வி பாவகமான 9 ஆமிடத்தில் அமைந்துள்ளார். இதனால் இவர் உயர் கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டம் படித்துள்ளார். 1௦ ஆமிட ராகு கன்னியில் ஹஸ்தம்-3 ல் நின்று, திருவாதிரை-2 ல் நிற்கும் 7 ஆமிட சந்திரனுடன் நட்சத்திரப் பரிவர்த்தனை ஆகியுள்ளார். இதனால் பரிவர்த்தனையாகி 1௦ ஆமிடத்திற்கு வரும் சந்திரனை மீனத்திலிருந்து சனி பார்க்கிறார். இதனால் இவர் சுய தொழில் செய்யவே விரும்புவார். ஜாதகரது தொழிலில் சந்திரனின் ஆதிக்கம் நிச்சயம் இருக்கும். ஜாதகத்தில் 12 ஆமிடம் என்பது இரவையும், உறக்கத்தையும் குறிப்பிடும் பாவகமாகும். தொழில் ஸ்தானத்தை விருப்பங்களைக் குறிப்பிடும் 5 ஆமதிபதி செவ்வாய் பார்ப்பதால், செய்யும் தொழிலை விருப்பமுடனும் உறுதியுடனும் செய்வர். உறக்கத்தை குறிப்பிடும் 12 ஆமதிபதியாகவும் செய்வாய் இருந்து 1௦ ஆமிடத்தை பார்க்க, கால புருஷனுக்கு தூக்கத்தை குறிப்பிடும் மீனத்தில் இருந்து இருள் கிரகங்களான கேதுவும், சனியும் பார்ப்பதால் இவர் உறக்கத்தை கைவிட்டு இரவில் பணி செய்ய விரும்புவார் எனலாம். இதற்கு லக்னத்திலிருந்து வக்கிரமாகி 12 ஆமிடமான விருட்சிகத்தை நோக்கித் திரும்பியிருக்கும் லக்னாதிபதி குருவும் காரணமாக இருப்பார்.

தொழிலை ஆராயப் பயன்படும் தசாம்சத்தில் மீனச் சனி வர்கோத்தம் ஆகியுள்ளார் என்றால், ராசியில் ராகுவுடன் நட்சத்திரப் பரிவர்த்தனையாகி கன்னிக்கு வந்த சந்திரனும் தசாம்சத்தில் அதே கன்னியில் நின்று வர்கோத்தமமாகியுள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். தசாம்சத்திலும் இப்படி சனியும் சந்திரனும் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்வதால் ஜாதகர் சுயதொழில் எண்ணம் மிக்கவர். 1௦ ஆமிடமான விருட்சிகத்தில் சூரியனும் செவ்வாயும் திக்பலம் பெறுவதால் சுய தொழிலில் தனிப்பட்ட ஆளுமையுடன் சுதந்திரமாகச் செயல்படுபவர் எனலாம். மேலும் தசாம்சத்திலும் லக்னாதிபதி சனி கால புருஷனுக்கு உறக்கத்தை குறிப்பிடும் மீனத்தில் நின்று இரவை ஆளும் சந்திரனின் பார்வையை பெறுவதால் ஜாதகர் தொழில் ரீதியாக இரவில் இயங்கவே விரும்புவார் எனலாம்.
இந்த ஜாதகர் இரவு உணவகம் நடத்துகிறார். அதை விருப்பமுடனும் சுதந்திரமாகவும் செய்கிறார். தசாநாதரும் ஜீவன காரகருமான சனி, வர்கோத்தமம் பெற்ற உணவு காரகரும், இரவை ஆளும் கிரகமுமான சந்திரன் தொடர்பில் இருந்து தசை நடத்துவதால் உணவகத் தொழில் செய்கிறார். ஜாதக அமைப்பு தனது தொழிலை மகிழ்வாக நடத்த வைக்கிறது.
கீழே மற்றொரு ஜாதகத்தை கவனியுங்கள்.

துலாம் லக்ன ஜாதகத்தை இரவை ஆளும் சந்திரனும் இரவை குறிக்கும் 12 ஆமதிபதி புதனும் பார்க்கிறார்கள். இது இந்த ஜாதகியை இயல்பாகவே இரவில் இயங்க வைக்கும் சூழலை ஏற்படுத்தும். ஆனால் லக்னத்தை பார்க்கும் இரு கிரகங்களும் சுப கிரகங்களே. முந்தைய ஜாதகத்தைப் போல பாவக்கிரகங்களில்லை. இதனால் இவர் சம்பாத்தியம் நிமிர்த்தம் இரவில் இயங்கினாலும் அதில் அதிக சிரமங்களற்ற ஒரு சொகுசான நிலை இருக்கும். இந்த ஜாதகத்திலும் ஜீவன காரகர் சனி கால புருஷனுக்கு தூக்கத்தை குறிக்கும் மீனத்தில்தான் அமைந்துள்ளார். இவருக்கு தூக்கத்தை குறிப்பிடும் 12 ஆமிட ராகு தசை நடக்கிறது. இதனால் இவர் இரவில் இயங்க வேண்டிய சூழல் ஏற்படும். பகலை குறிப்பிடும் ஒளி கிரகம் சூரியன், தசாநாதர் ராகுவின் திரிகோணத்தில் லக்னத்திற்கு 8 ல் ரிஷபத்தில் மறைந்துள்ளதை கவனிக்க. இதனால் இவர் ராகு தசையில் தனது செயல்களை இரவில் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். ராகு நிற்பது கால புருஷனுக்கு வியாதி ஸ்தானமான கன்னியாகும். இதனால் இவர் ஆரோக்கிய விஷயங்களுடன் இரவில் பணி செய்வார் எனலாம். சுக ஸ்தானத்தில் குரு நீசம் பெற்று 6 ஆமிட சனியுடன் பரிவர்த்தனை ஆகிறார். அப்படி 6 ஆமிடத்திற்கு பரிவர்த்தனை ஆகிச் செல்லும் தன காரகர் குரு தசா நாதர் ராகுவுடனும் கேதுவுடனும் தொடர்பாகிறார். மீனத்தை செவ்வாய் 8 ஆம் பார்வையாக பார்ப்பதால் இவரது பணியில் செவ்வாயின் காரகங்களின் தொடர்பும் இருக்கும். இரவு ராசியான மீன ராசியில் சனி தொடர்பு இந்த ஜாதகி வேலைக்குச் சென்றால் அது இரவு வேலையாக இருக்கும் என்பதை குறிப்பிடுகிறது. செவ்வாய் மற்றும் 4 , 6 ஆகிய பாவகங்கள் பரிவர்த்தனை தொடர்பானது வீடு, வாகனங்கள் போன்ற தனது வாழ்க்கை வசதிகளை பெருக்கிக்கொள்வதற்காக வேலைக்குச் சென்று பொருளீட்டுவார். இங்கு சனிக்கு சந்திரன் தொடர்பு இல்லாததாலும், தசாநாதர் ராகு 6 ஆமிடத்தை பார்ப்பதாலும் சுய தொழில் எண்ணம் ஜாதகிக்கு இருக்காது. மாறாக வேலைக்கு செல்லும் எண்ணமே இருக்கும். இதை மேலும் விரிவாக தசாம்சத்தில் காண்போம்.

தசாம்சத்தில் 6 ஆமதிபதி புதன் லக்னத்தில் திக்பலம் பெற்று அமர்வதாலும், லக்னாதிபதி சனி 6 ஆமிடத்தில் லக்ன புதனுடன் பரிவர்த்தனை பெற்று அமர்ந்திருப்பதாலும், ஜாதகி வேலைக்குத்தான் செல்வார். இவர் செய்யும் வேலையில் புதனின் காரகம் நிச்சயம் இருக்கும். ஜாதகிக்கு நடப்பது ராகு தசை என்று கூறினேன். பாவியான ராகு இங்கு 5 ஆமிடத்தில் அமர்ந்துள்ளதால் தசை நடத்துவதால் செய்யும் வேலை கடினமானதாக இருக்காது. ராகு இங்கு சந்திரனின் ரோஹிணி-1 ல் நிற்க, சந்திரன் உறக்கத்தை குறிப்பிடும் 12 ஆமிடத்தில் அமைந்துள்ளதால் இந்த ஜாதகி வேலைக்கு சென்றால் அது இரவுப்பணியாக அமைவது உறுதி. ராகு 4 ஆமதிபதி செவ்வாயுடன் இணைந்து அமைந்துள்ளதாலும், ராகு கால புருஷ 4 ஆமதிபதி சந்திரனின் சாரத்தில் நிற்பதாலும் இவர் ராசியில் குறிப்பிட்டது போல வீடு, வாகனங்கள் போன்ற தனது வாழ்க்கை வசதிகளை பெருக்கிக்கொள்ளும் பொருட்டே வேலைக்குச் செல்வார் எனலாம்.
இந்த ஜாதகி மருத்துவமனையொன்றில் வரவேற்பாளராக பணிபுரிகிறார். பணி பெரும்பாலும் இரவுப் பணியாகவே அமைகிறது. புதன், ராகு, செவ்வாய் தொடர்பு மருத்துவத்துடன் தொடர்புடைய இடத்தில் பணி என்பதை குறிக்கிறது. இரண்டாமிடம் வரவேற்பை குறிப்பிடும் பாவகமாகும். ராகு கால புருஷனுக்கு இரண்டாமிடமான ரிஷபத்தில் அமர்ந்து தசை நடத்துவதால் இவர் வரவேற்பாளராக பணிபுரிகிறார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் முதலில் இவருடன் பதிந்த பிறகே சிகிச்சைக்கு செல்ல வேண்டும். பதிவை லக்ன புதன் குறிக்கிறார். இவர் ஜாதகம் குறிப்பிடுவது போலவே தனது வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்ளவே, குறிப்பாக தன் குடும்பத்திற்கு வீடு வேண்டும் என்பதற்காகவே வேலைக்குச் செல்கிறார்.
மேற்சொன்ன இரவுப்பணி அமைப்பு இல்லாதோர் அது தொடர்பான பணியில் ஈடுபட்டால் வெகு காலம் அங்கு நீடிக்க இயலாது. அதற்கு 4, 8, 12 ஆமிடத்துடனும் சனி, ராகு-கேதுக்கள் போன்ற இருள் கிரகங்கள் தொடர்புள்ள தசா-புக்திகள் நடப்பில் இருக்க வேண்டும். பகலை ஆளும் கிரகமான சூரியன் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது 8 ன் பாவத் பாவமான 3 ஆமிட திசா புக்திகள் நடந்தால், சில காலம் மட்டும் இரவுப் பணி செய்வதை அல்லது இரவில் இயங்குவதை காண முடிகிறது. எதற்காக இரவில் இயங்குகிறார்கள் என்பதை தொடர்புடைய கிரகங்களும், ராசிகளும், பாவகங்களும் சுட்டிக்காட்டிவிடும்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: +91 8300124501