
கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும். இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு கால்குலேட்டர்களை தட்டுவது கூட இல்லை. இரு எண்களின் கூட்டுத் தொகை என்னவென்று கேட்டால் இந்த கைபேசி சேவகர்களே பதிலளித்துவிடுகின்றனர். நாம் கூடுதலாக சோம்பேறிகளாகிவிட்டோம் என்பதைவிட, நமது தீர்மானங்களை செயற்கை நுண்ணறிவிடம் அடமானம் வைக்கிறோம் என்பது கசப்பான உண்மை. இது எங்கே போய் முடியுமோ?
எனது ஜோதிட ஆய்வுக்குழு நண்பர் ஒருவர் சென்னையில் இருந்து அழைத்தார். அவரது வாடிக்கையாளர் கொடுத்த ஜனன நேரத்தை செயலியில் பதிவிட்டால் இருவித ஜாதகங்கள் வருகின்றன. அவற்றில் நான் எதை எடுத்துக்கொண்டு பலன் கூறுவது என்பது அவரது அங்கலாய்ப்பாக இருந்தது. ஒரு செயலி கடக லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம் நான்காம் பாதம் என்று காட்ட, மற்றோர் செயலி சிம்ம லக்னம், மகர ராசி, அவிட்டம் இரண்டாம் பாதம் என்று காட்டியது. பஞ்சாங்கத்தை எடுத்துக் கணிக்கலாம் என்றால் நான் உட்பட செயலிகளுக்குப் பழகிவிட்ட பெரும்பாலான ஜோதிடர்கள் ஜாதகம் கணிப்பதையே மறந்துவிட்டனர் என்பதுதான் கசப்பான உண்மை. இந்நிலையில் நீண்ட காலமாக நான் பயன்படுத்தும் நம்பகமான கணினி ஜாதக மென்பொருளில் அவர் அளித்த ஜனன விபரங்களை பதிவிட்டபோது சிம்ம லக்னம், மகர ராசி, அவிட்டம்-2 ஆம் பாதம் என்றுதான் காட்டியது. நட்சத்திர பாதங்களுக்கிடையே 6 மணி நேர வித்தியாசம் வரும் நிலையில் முதல் செயலி அவிட்டம் நான்காம் பாதம் என்று காட்டியது மிகத் தவறு. அவிட்டம்-3 என்று காட்டிருந்தால்கூட அது நட்சத்திர சந்தியாக இருக்கலாம். ஆனால் ராசி, லக்னம், நட்சத்திர பாதம் உட்பட அனைத்தையுமே தவறாக முதல் செயலி காட்டியதால் முதல் செயலி தவறானது என்பது தெளிவாகிவிட்டது. எனவே இரண்டாவது செயலி விபரங்கள் நான் கணித்த ஜாதகத்துடன் பொருந்திப் போவதால் இரண்டாவது செயலி ஜாதகமே சரி என்று கூறினேன். இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்கையில் பிரசன்ன ஜாதகம் ஒன்றை எச்சரிக்கையாக போட்டுவைப்பது எனது இயல்பு. புகழ் பெற்ற ஜாதக மென்பொருளான Jegannatha Hora விலும் இரண்டாவது செயலி கொடுத்த ஜாதகம் சரி என்று காட்டியதால் நண்பரிடம் தவறான முதல் செயலியை படுன்படுத்த வேண்டாம் என்று கூறினேன். எனது கணினி மென்பொருளில் கணித்த ஜாதகம் கீழே.

கடகத்தின் இறுதிப் பாகையான ஆயில்யம்-4 ஆம் பாதத்தில் லக்னம் அமைந்தால், நவாம்ச லக்னம் மீனமாக இருக்கும். ஆனால் இங்கு லக்னம் சந்தியில் அல்லாமல் 2.57 பாகையில் சிம்மத்தில் அமைந்துள்ளது. சிம்மத்தில் மகம்-1 ல் லக்னம் அமைந்தால்தான் நவாம்ச லக்னம் மேஷமாக வரும். சந்திரன் மகரத்தில் அவிட்டம்-2 ல் நின்றால்தால் நவாம்சத்தில் கன்னியில் அமையும்.
எனினும் நண்பர் அதையும் எப்படி நம்புவது? என்று கூறினார். இருவருக்குமே ஜாதகத்தை கணித்துப் பார்க்க பொறுமையில்லை. எனவே இரண்டு செயலிகள் காட்டிய ஜாதகங்களில் எது சரியான ஜாதகம்? என ஒரு பிரசன்னம் போட்டுப் பார்த்துவிடுவது என்று முடிவாகியது. மேற்கண்ட ஜாதகரின் ஜனன லக்னம், ராசி, நவாம்ச லக்னம் என்ன? என்ற கேள்வியுடன் பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.

விருட்சிகம் உதயமாக வந்துள்ளது. உள்வட்ட உதயாதிபதி செவ்வாய் கடகத்தில் நீசமாகவும், ஜாமச் செவ்வாய் (வெளிவட்ட செவ்வாய்) மகரத்தில் உச்சமாகவும் அமைந்துள்ளார். ஜாமக்கோள் ஆரூடத்தில் உச்ச-நீச கிரகங்களே கேள்வியின் பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கும். இங்கு உதயாதிபதி செவ்வாய் உச்ச – நீசம் பெற்றதன் பொருள் ஜாதகத்தில் செவ்வாயின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதை குறிப்பிடுகிறது. லக்னம், ராசி, நக்ஷத்திரங்களில் செவ்வாயின் ஆளுமை இருக்கும். மேலே நான் கணித்த ஜாதகத்தில், சிம்ம லக்னத்தில் செவ்வாய் அமைந்து நவாம்சத்திலும் சிம்மத்திலேயே நின்று வர்கோத்தமம் பெற்று நிற்பதுடன், நட்சத்திராதிபதியாகவும் வருவதை கவனிக்க. உதயம், ஆரூடம், கவிப்பு ஆகியவைகளே லக்னம், ராசி, நவாம்ச லக்னம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். கவிப்பு இரு சூரியன்களுடன் இணைந்திருப்பத்தைக் காண்க. இதனால் சூரியனின் வீடான சிம்மமே லக்னம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. ஆரூடம் மகரத்தில் அவிட்டம்-2 லும் அங்கு அமைந்த ஜாமச் செவ்வாய் அவிட்டம்-4 லும் அமைத்திருப்பதை காண்க. சந்திரன் மகரத்தில் அவிட்டம்-2 ல் இருப்பதாக ஒரு செயலியும், மற்றொரு செயலியில் அவிட்டம்-4 ல் நிற்பதாகவும் குறிப்பிட்டிருந்ததை நினைவு படுத்தக் கடமைப்பட்டுள்ளேன். .

ஆரூடம் அவிட்டம்-2 ல் நி ற்பது ஜாதகச் சந்திரன் மகரத்தில் அவிட்டம்-2 ல்தான் நிற்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆரூடத்திற்கு வெளியே செவ்வாய் அவிட்டம்-4 ல் நிற்பது, ஒப்பிடப்படும் மற்றொரு ஜாதகத்தில் சந்திரன் கும்பத்தில் அவிட்டம்-4ல் உள்ளதாக தவறாக சித்தரிக்கப்படுவதை குறிப்பிடுகிறது. உதயம் விருட்சிகத்தில் அமைந்துள்ளதை கவனிக்க. இதனால் மீதம் உள்ள நவாம்ச லக்னம் செவ்வாயின் வீட்டில்தான் அதாவது மேஷம் அல்லது விருட்சிகத்தில்தான் அமைய வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. நவாம்ச லக்னம் மீனமாகவோ அல்லது மேஷமாகவோதான் அமைய வாய்ப்புள்ளது என்பதால் நவாம்ச லக்னம் மேஷத்தில்தான் உள்ளது என்பதை உதயம் அடையாளம் காட்டுகிறது.
பொதுவாக கேள்வியை துல்லியமாக கேட்டால் பிரசன்னத்தில் பதிலும் துல்லியமாகக் கிடைக்கும். ஆனால் இங்கு கேள்வி எது சரியான ஜாதகம்? என்பதுதான் என்றாலும், லக்னம், ராசி, நவாம்ச லக்னம் ஆகிய கேள்வியின் உப அமைப்புகளையும் குறிப்பிட்டுக் கேள்வி எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஜாமக்கோள் பிரசன்னம் மிகத் தெளிவான பதிலைக் காட்டியது. இப்படி கேள்வியை உப அமைப்புகளுடன் இணைந்துக் கேட்பது எனக்கு இதுவே முதன் முறை என்பதால் பிரசன்னம் காட்டிய பதில்களால் பிரம்மித்துப் போனேன். இக்கலையை எனக்கு அருளிய எனது குருநாதருக்கு மனமார நன்றி கூறிக்கொண்டேன்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501