
ஒருவரின் வாழ்வில் எத்தகைய சூழலில், என்னவித கர்மங்களில் ஈடுபடுவார் என்பவை யாவும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவை என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுவதுண்டு. தசா-புக்திகளும், கிரகப் பெயர்ச்சிகளும் மனித வாழ்வில் மாற்றங்களை கொண்டு வருவதை ஜாதக ரீதியாக ஆராயும்போது இது தெரிய வரும். காலம் சம்பவங்களை கடத்திக்கொண்டே இருக்கும் ஒரு மின்னம்பலம் என்று கூறுலாம். காலம் மாற வாழ்வும் மாறும். மாற்றங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. மாற்றங்கள் நன்மையோ தீமையோ அவற்றை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். கடந்த காலங்களின் நிழலிலேயே நின்றுகொண்டு நிகழ்காலத்தை இழந்துவிடலாகாது. ஆனால் பலருக்கு இது சாத்தியமில்லை.
அன்பர் ஒருவர் எனை நேரில் காண வந்திருந்தார். ஜாதகத்தை கொண்டு வந்திருந்தார் என்றாலும், ஒருவரது ஜாதகத்தை ஆராயுமுன் பிரசன்ன ஜாதகத்தை கவனிப்பது எனது வழக்கம். ஜாதகம் தவறாக இருந்தாலும் பிரசன்னம் கைவிடாது என்ற எச்சரிக்கையே இதற்குக் காரணம். அது ஒரு திங்கள்கிழமை, திருவோண நட்சத்திர நாள். வந்தவர் சனி ஓரையில், சனி உப ஓரையில் வந்திருந்தார். வேலையில் மாற்றத்தை எதிர்நோக்குபவர்கள்தான் இதுபோன்ற நேரத்தில் ஜோதிடரிடம் வருவர். கிழமை நாதர் சந்திரன் சொந்த நட்சத்திரத்தில் சனியின் வீட்டில் நிற்க, சனி மீனத்தில் ராகுவுடனும், உச்ச சுக்கிரனுடனும் இருந்த நாள் அது. வந்தவரிடம் “வேலையில் உங்களுக்கு திருப்தியின்மை உள்ளது. நல்ல மாற்றத்தை எதிர்பார்த்து ஆலோசனை கேட்க வந்துள்ளீர்கள் என்றேன்”. பிரசன்னமே பார்க்காமல் வந்தவரிடம் இதைக் கூற அவர் அதிசயத்து “உண்மைதான் சார். விளக்கமாக எனக்கு வழிகாட்ட முடியுமா?” ஏனெனில் உங்கள் பதிலைக்கொண்டுதான் நான் அடுத்த முடிவை எடுக்க வேண்டும் என்று கூறினார். அவருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.

மிதுன உதயத்தில் குருவும் சுக்கிரனும் அமைந்துள்ளார்கள். மிகச் சிறந்த அமைப்பு இது. குரு ஆசீர்வாதம் உள்ளதை இது குறிப்பிடுகிறது. சுக்கிரனும் ஏழாம் அதிபதியும் உதயத்தில் அமைந்துள்ளதால் மனைவி மீது பிரியம். இல்லற நாட்டம் ஆகியவற்றையும் இது குறிப்பிடும். ஆரூடம் 1௦ ஆமிடமான மீனத்தில் அமைந்து, கவிப்பு இரண்டில் அதன் அதிபதியான நீசம் பெற்ற செவ்வாயுடனும் உதயாதிபதி புதனுடனும் கடகத்தில் அமைந்தது கேள்வியாளருக்கு தொழில் சம்பாத்திய வகையில் கேள்வி இருப்பதை உறுதி செய்கிறது. ஜீவன காரகர் சனி 1௦ ல் உள்வட்டத்தில் ராகுவுடனும் சேர்க்கை பெற்றது சிறப்பல்ல. அதே சனி வெளிவட்டத்தில் 11 ல் நீசமாகி உள்வட்ட உதயதிபதி புதனுடன் மேஷத்தில் அமைந்தது ஜீவன வகை சார்ந்த கேள்வியை பிரசன்னம் உறுதி செய்கிறது.

உதயம் செவ்வாயின் மிருகசீரிஷத்தில் அமைந்து செவ்வாய் நீசமாகி புதனுடன் கடகத்தில் இருக்க, ஜாமச் செவ்வாய் (வெளிவட்ட செவ்வாய்) உதயத்திற்கு 5 ஆமிடத்தில் ராகுவின் சுவாதியில் நின்று நீச சனியின் பார்வையை பெறுகிறார். இது கேள்வியாளரின் தொழிலில் செவ்வாய்-சனியின் காரகங்கள் இருக்கும் என்பதை குறிப்பிடும். உதயத்தில் குரு இருப்பதால் குருவின் காரகம் சார்ந்த ஆன்மிகம், பொருளாதாரம் போன்ற வகை தொழிலாக இருக்கும். ஆனால் உதயத்தில் சுக்கிரனும் இருப்பதாலும் 6 ஆமதிபதி செவ்வாய் 5 ஆமிடமான சுக்கிரனின் துலாத்தில் ராகு சாரம் பெற்றதால் கேள்வியாளர் கணினி சார்ந்த துறையிலும் ஜீவித்திருக்க வாய்ப்புண்டு. தொழில் பாவகமான மீனமும், 6 ஆமதிபதி செவ்வாய் கடகத்திலும் நிற்பதால் கேள்வியாளர் சென்னையில் பணிபுரிபவராக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் 1௦ ஆமதிபதியும் ஆன்மீக கிரகமுமான குரு உதயத்தில் திக்பலத்தில் நிற்பதால் ஜாதகர் ஆன்மிக தொடர்பு இருக்கலாம். அப்படி இருந்தால் உதயத்தில் நிற்கும் சுக்கிரனே 1௦ ல் உச்சம் பெற்று நிற்பதால் கேள்வியாளர் பெண் தெய்வத்தை வழிபடுபவராக இருப்பார். 6 ஆமதிபதி செவ்வாய் உள்வட்டத்தில் சனி சாரத்தில் நீசமாகி இருப்பதால் ஜாமச் செவ்வாய் ராகு சாரத்தில் இருப்பதாலும் அந்த குறிப்பிட்ட பெண் தெய்வம் ரௌத்ர தேவதையாக அதாவது காளி, பாகவதி போன்ற தெய்வ அம்சமாக இருக்கலாம். உதயாதிபதி புதன் செவ்வாயின் வீட்டில் மேஷத்தில் நீசச் சனியுடன் நிற்க வெளிவட்டத்தில் செவ்வாயுடன் 2 ல் நிற்பதால் கேள்வியாளர் அம்மன் கோவில் வழிபாடு தொடர்புடைய அதாவது அர்ச்சகர், பூசாரி போன்றவராக இருக்கலாம். வந்தவர் ஆன்மீகவாதிக்கான உடை அணியாமல் சட்டை, பேண்ட்டுடன் வந்திருந்தார். ஆனால் முகத்தில் தாடி இருந்தது ஆன்மீகவாதிகளுக்கான அடையாளமாகவும் இருந்தது. இதனால் சற்று கவனமாக ஆராய வேண்டி வந்தது. ஏனெனில் மிதுனமும் மீனமும் இரட்டை ராசிகள் இதனால் கேள்வியாளர் ஒரு தொழில் நிரந்தரமாக இருக்க முடியாது. ஏனெனில் மிதுனமும் மீனமும் உபய ராசிகள். இதனால் கேள்வியாளர் கணினி வல்லுனரா? அல்லது கோவிலில் பணிபுரிபவரா?. உதயமும் 1௦ ஆமிடமும் இரட்டை ராசிகள் என்பதால் இரு தொழிலையும் செய்கிறாரா? என்ற கேள்வி எழுந்தது. இதில் கிரக வலுவை அளவிட்டேன். ஆன்மிகம், பொருளாதாரம் இவற்றை குறிக்கும் குரு மோட்சத்தை குறிப்பிடும் உதயத்தின் 12 ஆமிடாதிபதி சுக்கிரனுடன் இணைந்து மிதுனத்தில் நிற்கிறார். சுக்கிரன் கணினிக்குரிய கிரகமென்றாலும் உதயத்தில் திக்பலம் பெற்ற குருவே அதிக வலுப்பெற்றவராகிறார். இதனால் வந்தவர் ஆன்மீகத்துறை சார்ந்தவராக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. வேண்டுமானால் கணினிக் கல்வி படித்திருக்கலாம் என்ற அனுமானத்திற்கு வந்தேன்.
வேலை தொடர்பான பிரசன்னம் என்று கூறிவிட்டதால் கேள்வியாளருக்கு பணியில் உயர்வை வழங்கும் தகுதியுள்ள சூரியனின் நிலையை கவனிக்க வேண்டும். ஏனெனில் சூரியன் ஜோதிடத்தில் முதலாளி, அரசு போன்றவற்றை குறிப்பிடும் கிரகமாகும். இந்த மிதுன உதயத்திற்கு 7 ஆமிடமும், பாதக ஸ்தானமுமான தனுசில் சூரியன் நின்று, உள்வட்டத்தில் 12 ல் மறைவு பெற்றதால் கேள்வியாளருக்கு பணிபுரியும் இடத்தின் முதலாளியிடமோ அல்லது அரச கெளரவமோ கோர முடியாது. கேட்டாலும் கிடைக்காது. ஆனால் சூரியன் உதயாதிபதி புதனுக்கு நட்பு என்ற வகையிலும், 7 ல் நின்று உதயத்தை பார்ப்பதாலும் நிர்வாகத்தின் ஒரு அங்கமாக கேள்வியாளர் இருப்பதை சூரியன் தடுக்க மாட்டார்.
உச்ச நீசக் கிரகங்கள் கேள்வியின் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் என்றபடி இங்கு செவ்வாய் மற்றும் சனி நீசம். சுக்கிரன் உச்சம். கேள்வியாளர் ஒரு அம்மன் கோவிலில் பணிபுரிபவராக இருக்க வேண்டும். 1௦ ஆமதிபதி குரு வெளிவட்டத்தில் சூரியனின் உத்திரத்தில் கன்னியில் ஆன்மீக கிரகம் கேதுவுடன் இணைந்து 1௦ ஆமிடத்தை பார்ப்பதாலும் 7 ஆமிட சூரியன் கேதுவின் மூல நட்சத்திரத்தில் நின்று உதயத்தை பார்ப்பதும் கவனிக்கத்தக்கது. 7 ஆமிட சூரியனும், 4 ஆமிட கேதுவும் நட்சத்திர பரிவர்த்தனையில் உள்ளதால் (சூரியன் – மூலம், கேது -உத்திரம்) கேள்வியாளர் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவிலோடு தொடர்புடையவராக இருக்கவே வாய்ப்புள்ளது.
மேற்சொன்னவற்றை ஆராய்ந்துவிட்டு வந்தவரிடம் நீங்கள் கணினித் துறையா? அல்லது கோவிலோடு தொடர்புடையவரா என்று கேட்டேன். வந்தவர் கணினித்துறையில் படித்து சென்னையில் கணினித் துறையில் பணிபுரிந்தேன். தற்போது அம்மன் கோவில் பூசாரியாக இருக்கிறேன் என்றார். நான் திகைத்துவிட்டேன். இரட்டை ராசியான மிதுனம் இருவித தொழிலிலும் ஈடுபடுத்துகிறது. மேலும் அவர் கூறுகையில் தந்தை பரம்பரை கோவில் பூசாரியாக இருந்தார். தந்தையின் வயோதிகத்தின் காரணமாக அவரது பொறுப்பை நான் ஏற்க வேண்டி வந்தது. தற்போது காளியம்மன் கோவில் பூசாரியாக இருக்கிறேன் என்றவர், அரசுப் பொறுப்பில் கோவில் இருப்பதால் எனக்கு அரசு சம்பளம் கிடைக்குமா? என்று கேட்டார். தந்தையை குறிக்கும் சூரியன் கேதுவுடன் நட்சத்திரப் பரிவர்த்தனையில் இருப்பதை பார்த்தோம். இது தந்தையின் ஆன்மீகப் பொறுப்பு கேள்வியாளருக்கு இடம் மாறுவதை குறிக்கிறது. சூரியன் பாதக ஸ்தானத்தில் நிற்பதால் கேள்வியாளருக்கு தற்போதைக்கு அரசு சம்பளம் கிடைக்காது என்றேன். ஆனால் அதே சமயம் முறையான அரசு சம்பளம்தான் கிடைக்காதே தவிர மறைமுகமாக அரச சலுகை, சம்பளம் கிடைக்கும் என்றேன். சூரியனுக்கு கேது தொடர்பு குறுக்கு வழி அரசு சலுகையை குறிப்பதால் இப்படி குறிப்பிட்டேன். கேள்வியாளரும் தற்போதுவரை அப்படித்தான் சம்பாத்தியம் வருகிறது என்றார். ஆனால் குறுக்கு வழியில் கேள்வியாளருக்கு பக்தர்கள் வழியில் போதுமான பொருளாதாரம் வரும் என்று கூறினேன். உண்மைதான் என்றார்.
கேள்வியாளருக்கு பிரசன்னத்தில் பதில் தெரிந்தாலும் அவரது இதர கேள்விகளுக்காக அவர் கொடுத்த ஜாதகத்தை ஆராய்ந்து பதிலளித்தேன். ஜாதகமும் இவரது தொழில் தொடர்புகளை எதிரொலித்தது. ஏனெனில் ஜாதகத்திலும் பிரசன்னத்தை போலவே இருந்த பரிவர்த்தனை தந்தையின் வேலை ஜாதகருக்கு கிடைப்பதை குறிப்பிட்டது. வந்தவரின் பெயரிலேயே காளி இருந்தது குறிப்பிடத்தக்கது. அன்னை காளி தனக்கான பூசாரியை தானே தேர்ந்தெடுக்கிறாள். அவர் கணினி வல்லுனராக இருந்தாலும் கூட உரிய நேரத்தில் தனது சேவைக்கு அழைத்துக்கொள்கிறாள்.
மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன் பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501