
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது அனுபவித்து வாழ்ந்தவர்களுக்குத் தெரியும். வாழ்க்கையில் கடினமான விஷயம் என்பது மனைவியை புரிந்துகொள்வதுதான் என்று ஆண்கள் நகைச்சுவையாகக் கூறுவது உண்டு. அதில் ஓரளவு உண்மையும் உண்டுதான். மனைவி என்பவள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தில் இடம் மாற்றி வளமைக்காக வளர்த்தப்படும் நாற்று. அதனால்தான் மணமாகா பெண்களை கன்னி நாத்து என்று பண்டைய கிராமங்களில் குறிப்பிடுவர். அப்படி புகுந்த வீட்டில் தனது வாழ்க்கையையும், கணவனையும் இணைத்து தனது வாழ்வை நேர்த்தியாக வாழ்ந்தாக வேண்டிய சூழல் பெண்ணுக்கு உள்ளது. இடம் மாற்றி நடப்படும் நெல்லின் உணர்வுகளை நம்மால் புரிந்துகொள்ள இயலாது. தனது பிறந்த வீட்டிலிருந்து கணவன் வீட்டிற்கு வரும் மனைவி பல மனப்போராட்டங்களை சந்திப்பவளாக இருப்பதால் மனைவியை நூறு சதவீதம் அளவிடுவது ஒரு ஆணுக்கு சாத்தியமற்ற ஒன்று. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் முழுமையாக புரிந்துகொள்வதற்கு ஒரு முழு வாழ்வையுமே வாழ்ந்தாக வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் திருமணமானவுடனே மனைவியை புரிந்துகொள்ள முயலுகையில் வெற்றி கிடைக்காதபோது அங்கே விரக்தி ஏற்படுகிறது. துணைவரை புரிந்துகொள்ள காலமாகலாம். அதுவரை சகிப்புத்தன்மை தேவை. சகிப்புத்தன்மை இல்லாதபோது அங்கே பிரிவினை ஏற்படுகிறது.
கணவரை நிமிர்ந்து பார்க்காமல் தாலி கட்டிக்கொண்ட பெண்களின் காலம் 19 ஆம் நூற்றாண்டோடு முடிந்துவிட்டது. இன்று பெண்களின் கல்விக்கும், திறமைக்கும் மதிப்பளித்து அவர்கள் பொருளாதார ரீதியாக சுயமாக நிற்க துணைபுரியக்கூடிய, தங்களை பணி புரிய அனுமதிக்கும் ஆண்களே இன்றைய பெண்களால் விரும்பப்படுகிரார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தங்களது தனிப்பட்ட சுய விருப்பு-வெறுப்புகளை மனைவியின் மீது திணித்து அவர்களை அடக்கி ஆள நினைக்கும் ஆண்கள் இன்று தனி மரமாக நிற்கிறார்கள். அப்படி தனி மரமான, அதாவது மணமுறிவுற்ற நபர் ஒருவர் தனக்கு மறுதிருமண வாய்ப்பு பற்றிய கேள்வியுடன் என்னை அணுகினார். அணுகியவர் ஜாதகத்தை வைத்திருந்தாலும் குறிப்பிட்ட விஷயத்தை ஜாதகத்தைவிட பிரசன்னம் துல்லியமான தெரிவிக்கும் என்பதால் தன்னைப் போலவே “அசைவத்தை விரும்பாத, சைவ உணவை ஏற்கும் மனைவி தனக்கு மறுமணத்திற்கு கிடைப்பாரா?” என்ற கேள்வியை முன் வைத்தார். அதற்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே நீங்கள் கீழே காண்பது.

பிரசன்னங்களை ஆராய்ந்து பதில் சொல்வது ஒரு கலை. இக்கலையில் தேர்ச்சி பெற்றோர் பிரபஞ்சத்துடன் பேசலாம். பிரபஞ்சத்திலிருந்து நமக்கு பதில் பிரசன்ன கிரகங்களாலும், நிமித்தம், சகுனம் & பிரசன்னத்தை பார்க்கும் தெய்வக்ஞரின் மன உணர்வின் மூலமாக கிடைக்கும் என்று எனக்கு இக்கலையை பயிற்றுவித்த எனது குருநாதர் கூறுவார். ஜாமக்கோள் பிரசன்னம் ஏனைய பிரசன்னங்களில் இருந்து மாறுபட்ட நுட்பமான ஒன்று என்று பலமுறை கூறியிருக்கிறேன். காரணம், ஏனைய பிரசன்னங்களில் கேள்வியை உணர முடியாது. ஆனால் ஜாமக்கோளில் கேள்வி பிரசன்னத்தில் எதிரொலிக்கும். கேள்வி பிரசன்னத்தில் தெரிந்தால் பதிலை பிரபஞ்சம் கூறிவிட்டது என்றே பொருள். இந்தப் பிரசன்னத்தில் கேள்வியாளர் தனது 2 ஆவது திருமணத்தை உணவோடு தொடர்புபடுத்துகிறார்.

மகர உதயம் 7 ஆமதிபதியும் உணவு காரகருமான சந்திரனின் திருவோணத்தில் அமைந்துள்ளது. உதயாதிபதி சனி வெளிவட்டத்தில் கடகத்தில் நிற்கிறார். இது கேள்வியின் சூழலை அதாவது திருமணம் மற்றும் உணவு ஆகிய இரண்டையும் உதயமே குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. உதயத்தில் 4, 11 ஆமதிபதி செவ்வாய் உச்சமாகி நிற்கிறார். உதயத்தில் செவ்வாய் உச்சம் பெற்று நிற்பதால் கேள்வியாளர் தனது கோரிக்கையை உத்தரவாக முன்வைப்பார். இழப்பு பாவமான 12 ஆமிட ஆரூடத்தை தாண்டி உதயம் அமைந்துள்ளது. தனுசு ஆரூடம் உதயத்தின் 8 ஆமதிபதி சூரியனின் உத்திராடத்தில் நிற்பது திருமணத்தில் கேள்வியாளர் ஏற்கனவே சந்தித்துவிட்ட இழப்பை குறிப்பிடுகிறது. உதயாதிபதி சனி வெளிவட்டத்தில் 7 ஆமிடமான கடகத்தில் நின்று 2 ல் நிற்கும் சந்திரனுடன் பரிவர்த்தனை பெறுகிறார்.
4 ஆமிடம் மறு திருமணத்தை குறிப்பிடும். உதயத்தில் 4 ஆமதிபதி செவ்வாய் நிற்கும் நிலையில், ஜாம உதயாதிபதி சனி கால புருஷ 4 ஆமிடமான கடகத்தில் நின்று, கும்பத்தில் நிற்கும் சந்திரனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். இது தனது மறு திருமணத்திற்கு கோரிக்கையாக 2 ஆமிடமும், சந்திரனும் குறிப்பிடும் உணவுப் பழக்கத்தை கேள்வியாளர் முன் வைப்பதை குறிப்பிடுகிறது. சுபர்களும், வளர்பிறைச் சந்திரனும் சைவ உணவை குறிப்பிடுபவர்கள். இங்கு சந்திரன் 2 ஆமிடமான கும்பத்தில் பரிவர்த்தனைக்கு முன்னும் பின்னும் சனி மற்றும் மாந்தி தொடர்பு பெறுகிறார் என்பதோடு ராகுவின் சதய நட்சத்திரத்தில் நிற்கிறார். இவை கேள்வியாளரின் கோரிக்கைக்கு சாதகமான அமைப்பல்ல. 7 ல் அமைந்த கவிப்பு கேள்வியாளரின் கோரிக்கைகேற்ற பெண் கிடைக்க வாய்ப்பு இல்லாததை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
கேள்வியின் நுட்பத்தை 10 ஆமிடம் மூலம் அறியலாம். உதயத்தின் 10 ஆமதிபதி சுக்கிரன் நீசமானது முதல் மனைவியை கேள்வியாளர் பிரிந்துவிட்டதையும், இரண்டாவது வாய்ப்பு என்பதன் காரக கிரகம் புதனுடன் நீச சுக்கிரன் பரிவர்த்தனை பெறுவது இரண்டாவதாக அமையும் மனைவியை பற்றியும் குறிப்பிடுகிறது. நீச சுக்கிரன் பரிவர்த்தனைக்குப் பிறகு துலாத்தில் புதன் நிற்கும் ராகுவின் சுவாதியிலேயே ஆட்சி பெறுவார். ராகுவும் அசைவ உணவை குறிப்பவர் என்பதால் கேள்வியாளருக்கு பதில் சாதகமாக இல்லை.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.