
வாழ்வில் ஒவ்வொருவருக்கும் பல்வேறு அடையாளங்கள் உள்ளன. இனம், மதம், மொழி, கலாச்சாரம், தொழில் அடிப்படையில் இந்த அடையாளங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால் இயற்கை உருவாக்கிக் கொடுத்துள்ளது இரு வகை அடையாளங்கள் மட்டுமே. அது பாலின அடிப்படையிலானது. மற்ற பிரிவுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. “மனிதன் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால் ஓடும் நீரில் மிதக்கும் சிறகாக இரு” என்று ஜென் தத்துவம் கூறுகிறது. ஆனால் மனிதன் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகள் சமுதாய ஒழுங்கமைவிற்காக என்று காரணம் கூறப்படுகிறது. மனித சமூகம் பண்படாத காலத்தில், பல்வேறு நிலப் பகுதியில் வாசித்தோர் தங்களுக்கேற்றபடி இத்தகைய கட்டுப்பாடுகளை தங்கள் சமூக நலன் கருதி விதித்து அவற்றை இன்று வரை ஏற்றுச் செயல்படுகின்றனர். பண்பட்ட சமுதாயமாக இன்று வளர்ந்துவிட்ட காலத்திலும் அத்தகைய கட்டுப்பாடுகள் மீது நமக்கு எழும் கேள்வி “இன்று இது தேவையா?” என்பதாக இருக்கிறது. துவக்க கால சமூக அமைப்பில் இருந்து பல காலம் கடந்து வந்துவிட்ட இன்றைய நிலையிலும், இன்னும் சரியான கல்வியறிவு கிடைக்காமையாலும், வறுமையாலும், அடக்கு முறையாலும் பண்படாத இனங்கள் இருக்கவே செய்கின்றன. இவற்றுக்குள் இன்று எழும் மோதல்களே உலக அமைதிக்கு வேட்டு வைக்கும் காரணிகளாக உள்ளன. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் “கண்ணால் காண முடியாத கடவுளுக்காக கட்டிப்பிடித்து வெட்டிக்கொண்டு மரணிப்பது” மனித இனத்தில் இன்றும் தொடரும் கொடுமை. இன்றைய உலகில் பல்வேறு சமூக அமைப்புகள் உள்ளன. இவற்றுக்கிடையே கலப்பு ஏற்படும்போது அத்தகைய கலப்பின வாரிசுகள் தங்கள் தாய்-தந்தை இருவரில் யாருடைய சமூக அமைப்பை ஏற்பது என்றொரு குழப்பம் வரும். பொதுவாக பெரும்பாலான சமூக அமைப்புகள் ஆண் ஆதிக்கம் கொண்டவையே. ஆனால் தாய் வழி சமூக அமைப்பை மாறிக் கடைபிடிப்போரும் உண்டு. இதில் குழம்பி நின்று “நான் எந்த சமூக அமைப்பை கடைபிடிக்க? என்ற கேள்வியுடன் என்னை அணுகிய நபரின் ஜாதகம் இதற்கான பதிலாக இன்றைய பதிவாக வருகிறது.

ஜாதகர் ஒரு ஆண். சிம்ம லக்ன ஜாதகம். கோட்சார லக்னமும் சிம்மமாகவே அமைந்தது இதை உறுதி செய்கிறது. சமூக கட்டமைப்புகளை குறிப்பிடும் காரக ராசி கடகமாகும். அதன் அதிபதி சந்திரன் இதன் காரக கிரகமாகும். லக்னத்திற்கு 4 ஆம் பாவகம், அதன் அதிபதி ஆகியோரைக்கொண்டும் ஒருவரது சமூக கட்டமைப்பை மதிப்பிடலாம். சமூக அங்கீகாரத்தை குறிப்பிடுவது 9 ஆம் பாவகமும் அதன் அதிபதி குருவுமாகும். காரக ராசி குருவின் மூலத்திரிகோண ராசியான தனுசுவாகும். ஒருவரது வழிபாடு தொடர்பான விபரங்களை 5 ஆமிடம் மூலம் அறியலாம். தான் சார்ந்த சமூக அமைப்பிற்கு எதிராக ஒருவர் செயல்பட 9 க்கு விரையமான 8 ஆம் பாவகமும் அதன் அதிபதியும் செயல்படுகின்றனர். மேற்கண்ட ஜாதகத்தில் சிம்ம லக்னத்திற்கு அஷ்டமாதிபதியான குருவே லக்னத்தில் வந்து அமைந்ததால் தான் சார்ந்த சமூக அமைப்புக்கு எதிராக ஜாதகர் செயல்பட முனைவார். அதாவது ஜாதகர் தனது சொந்த மதம், ஜாதி அமைப்பிற்கு எதிராக செயல்படுவார் என்று கூறலாம். பாரம்பரியத்தை குறிப்பிடுபவை நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம், தனுசுவாகும். அதன் அதிபதிகள் செவ்வாய், சூரியன், குரு மூவரும் பாரம்பரியத்தை பேணும் கிரகங்களாகும். குரு பாரம்பரிய குல ஆச்சாரங்களை குறிப்பிடும் கிரகமாகும். ராகு-கேதுக்கள் ஆகிய நிழல் கிரகங்கள் அனைத்து வகை பாரம்பரியத்திற்கும் எதிரான கிரகங்களாகும்.
மேற்கண்ட ஜாதகத்தில் சமூக அமைப்பை குறிப்பிடும் 4 ஆமதிபதியும், சமூக அங்கீகாரத்தை குறிப்பிடும் 9 ஆமதிபதியுமான செவ்வாய் அஸ்தங்கமாகியுள்ளார். 2, 11 அதிபதி புதனும் அஸ்தங்கமாகியுள்ளார். 9 ஆமிடத்தில் கால புருஷ 4 ஆமதிபதி சந்திரன் அமைந்துள்ளார். சந்திரன் சிம்ம லக்னத்திற்கு விரையாதிபதியாகி பாதக ஸ்தானமான மேஷத்தில் நிற்கிறார். இதனால் இவர் தனது சுய சமூகம் சார்ந்த விஷயங்களில் மாறுதலை விரும்புவார். அதற்கு குருவின் நிலையும் காரணமாகிறது.
இனி இவர் ஏன் இப்படி ஒரு எண்ணத்தை கொண்டிருக்கிறார் என ஆராய்வோம். கோட்சார கிரக நிலைகள் இதை தெளிவாக்குகிறது. லக்னத்திற்கு 9 ஆமிடமான மேஷத்தில் ஜனன கால சந்திரன் மீது கோட்சார சூரியன், ராகு, ஆகியோருடன் வக்கிரம் பெற்ற புதனும் உள்ளார். சூரியன் இங்கு லக்னாதிபதி என்பதுடன் குரு குல வழிபாட்டை கூறும் 5 ஆமதிபதி என்பதை நினைவில் கொள்க. 2 , 1,1 அதிபதி புதன் 9 ஆமிட செவ்வாயோடு கோட்சாரத்தில் பரிவர்த்தனையாகியுள்ளார். 9 ஆமிடமும், குருவும் ராகுவுடன் தொடர்பானதால் தந்தை காலத்தில் இவரது குல வழிபாடு மாறியுள்ளது தெரிகிறது. செவ்வாய்-புதன் கோட்சார பரிவர்த்தனை தந்தையார் தனது குல வழிபாட்டை, தனது சுய சமூக அங்கீகாரத்தை தான் விரும்பி அடைத்துக்கொண்ட குடும்ப உறவுக்காக உதறியவர் என்பது தெரிகிறது. சிம்ம லக்னத்திற்கு 2,11 அதிபதி புதன் குடும்ப பாவாதிபதி என்பதுடன் அவர் சுய விருப்பம் நிறைவேறுதலை குறிக்கும் 11 ஆம் பாவக அதிபதியும் கூட என்பதுடன் அவர் காதலின் காரக கிரகம் என்பதை நினைவில் கொள்க. 9 ஆம் பாவகமும் சூரியனும் தந்தையையும், ராகு காலாச்சார மாறுதலையும் குறிக்கும். தாயாரை குறிக்கும் சந்திரனோடு மேஷத்தில் இந்த கோட்சார கிரகங்கள் இணைவது, தந்தை தனது குல மரபை தாயுடனான விருப்ப திருமணத்திற்காக துறந்தவர் என்பதை குறிக்கிறது. கோட்சார சந்திரன் ஜனன கால ராகு மீது தனுசுவில் செல்வதால் தாய் இஸ்லாமிய சமூகத்தவராக இருக்கக்கூடும். ஏனெனில் மேஷத்தில் அமைந்த ஜனன சந்திரன் மீதும் இஸ்லாமியரை குறிக்கும் ராகு செல்வதால் இக்கருத்து ஏற்படுகிறது.
ஜாதகரின் மன ஓட்டத்தை கோட்சார சந்திரன் தெரியப்படுத்துகிறார். மரபு வழி வழிபாட்டை குறிப்பிடும் 5 ஆமிடத்தில் கோட்சார சந்திரன் செல்கையில் மேஷத்தில் இருந்து ராகு-தொடர்பு பெற்ற கோட்சார குரு 9 ஆம் பார்வையாக பார்ப்பதால் தந்தை வழி வழிபாட்டு மரபை ஜாதகர் எண்ணிப் பார்க்கிறார். இதனால் உண்மையில் தான் யார்?. இந்துவா? அல்லது இஸ்லாமியரா? என்று கேள்வி எழுப்புகிறார்.
ஜாதகரது ஜனன கால, கோட்சார கிரக இணைவுகள் சுட்டிக்காட்டுவது போல இவரது பெற்றோர் காதலித்து கலப்புத்திருமணம் செய்துகொண்டவர்களே. தந்தை இந்து, தாய் முஸ்லிம். இப்போது தான் எந்த வழிபாட்டு மரபை கடைபிடிப்பது என்பது இவரது கேள்வி. ஜாதகரின் லக்னாதிபதி சூரியன் கோட்சாரத்தில் ராகுவோடு இணைந்து சமூக அங்கீகாரத்தை குறிப்பிடும் 9 ஆமிடமான மேஷத்தில் நிற்கும் சூழலில், குல மரபை குறிக்கும் 5 ஆமிடத்தில் அமைந்த ஜனன கால ராகு மீது கோட்சார சந்திரன் செல்கிறார். இப்படி 5, 9 ஆம் பாவகங்கள் ராகு எனும் இஸ்லாமிய மதத்தை குறிக்கும் கிரக தொடர்பு பெறுவதால் இவரால் தனது தந்தையின் குல மரபிற்கு திரும்ப இயலாது. தந்தையின் இந்து மரபை ஏக்கத்துடன் பார்க்கும் நீங்கள் முழுமையான ஒரு இஸ்லாமியரே என கூறப்பட்டது.
மீண்டும் மற்றுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.