
இன்றைய சூழலில் உலகில் ஒருவரை ஒருவர் சாராமல் வாழ இயலாது. நம்மோடு இணைந்து வாழ்வில் பயணிப்பவராகட்டும், தொழிலில் கூட்டாளியாக இணைபவராகட்டும் இணக்கமானவராகிவிட்டால் அந்த கூட்டணி சிறக்கும். இணக்கமற்று ஆதாயத்தை மட்டுமே முக்கியமாகக்கொண்டு அமையும் கூட்டணிகள் அரசியல் கூட்டணிகள் போல. காலை வாரிவிட தகுந்த நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் என்பதே உண்மை. தகுந்த நேரம் என்பது தகுந்த தசா-புக்திகள் என்று எடுத்துக்கொள்ளலாம். கூட்டணி என்பதை குறிக்கும் பாவகம் ஜாதகத்தில் 7 ஆவது பாவகமாகும். திருமணத்திற்கு ஆராய்வது போலவே நவாம்சத்தை தொழில் கூட்டாளிக்கும் ஆராயலாம். வாழ்க்கை துணைவருக்கு களத்திர காரக கிரகங்களை முக்கியமாகக்கொண்டு ஆராய வேண்டும். தொழில் கூட்டிற்கு 7 ஆம் பாவகத்துடன் புதனை முக்கியமாக ஆராயவேண்டும். நவாம்ச 7 ஆம் பாவகமும் புதனும் தொழில் கூட்டாளியின் சுபாவ குணத்தை கூறும். தசாம்ச புதனின் நிலை கூட்டாளியின் தொழில் ரீதியான ஒத்துழைப்பு எந்த அளவு லாபகரமானதாக இருக்கும் என்பதை கூறும்.
தொழில் கூட்டிற்கு பொதுவான சில ஆலோசனைகள்:
உபய லக்ன ஜாதகர்களுக்கு 7 ஆம் பாவகமே பாதக ஸ்தானமாக வருவதால், அவர்களுக்கு பொதுவாகவே தொழில் கூட்டு பாதகத்தை ஏற்படுத்தும். ஒருவரின் 1, 7, 10, 11 ஆமதிபதிகள் கூட்டாளியின் ஜாதகத்தில் கெடாமல் இருப்பது அவசியம். ஒருவரின் சந்திரன், சனி மீது மற்றவரின் ராகு, கேதுக்களோ 8, 12 ஆமதிபதிகளோ அமையாமல் இருப்பது நன்று. மாறாக மற்றவரின் குருவோ சுக்கிரனோ அமைவது மிகுந்த நன்மை. ஒருவரின் தசா கிரகத்திற்கு மற்றவரின் தசா கிரகம் பகையாக இல்லாமல் இருப்பது நன்று. ஒருவரின் சனி மீது மற்றவரின் புதன் இருந்தால் அந்தக்கூட்டணியில் தொழில் இணக்கமாக செல்வதுபோல தோன்றினாலும் ஒருவர் மற்றவரை தனது புக்தி கூர்மையால் நிச்சயம் ஏமாற்றுவார். ஒருவரின் சனி மீது மற்றவரின் சூரியன் அமைந்தால் அங்கு சூரியன் அமைந்த ஜாதகர் முதன்மையாக செயல்பட்டாலும், இருவருக்கும் இடையே நிர்வாகத்தில் இணக்கம் இல்லாமல் தொழில் பாதிப்படையும்.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

உபய லக்ன ஜாதகம். தன ஸ்தானத்தில் அமைந்த சுக்கிரன் தனது காரக வகை வருமானத்தை, தனது தசா-புக்தி காலங்களில் ஜாதகருக்கு ஏற்படுத்துவார். 7 ஆமதிபதி புதன் கேதுவோடு இணைந்து விரையத்தில் விரையாதிபதி சனி பார்வையில் இருக்கிறார். இவர் தொழில் கூட்டு வைத்தால் கூட்டாளி வகையில் பாதகம், விரையம் ஏற்படும் என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. லக்னாதிபதி குருவும் 6 ஆமதிபதி சூரியனும் பரிவர்த்தனை. தொழிலில் கடன் ஏற்படும் என்பதை இது குறிப்பிடுகிறது. 10 ஆமதிபதியும் சனியும் ராகு தொடர்பு பெறுவது சிறப்பல்ல. இதனால் தொழிலில் பாதிப்பு ஏற்படும். ஆனால் குருவும் சனியும் வக்கிரமான நிலையில் ராகு தொடர்பு பெற்று ராகுவின் காரக தொழில் செய்வது பெரிய பாதகத்தை தராது. காரணம் 6 ஆமிடம் பாவிகளுக்கு சிறப்பு என்பதுதான். 2, 9 அதிபதி செவ்வாயும் வக்கிரமாகி ராகு, சனி தொடர்பு பெறுவதை கவனியுங்கள். இப்படி வக்கிர கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பாவது ஜாதகர் பிடிவாதமான சில கொள்கைகளை உடையவர் என்பதை குறிப்பிடுகிறது. லக்னத்தில் அமைந்த சூரியன் நிர்வாகம் செய்ய எண்ணத்தை ஏற்படுத்துவார். ஆனால் 6 ஆமிடத்தில் அதிக கிரகங்கள் அமைந்ததால் இத்தகைய ஜாதகர்கள் 6 ஆமிடம் குறிப்பிடும் பணிக்கு செல்வதே சிறப்பைத்தரும்.

நவாம்சத்தில் லக்னத்திற்கு 10 ல் செவ்வாய் திக்பலம் பெற்றது சிறப்பே என்றாலும் அவர் வக்கிரம் பெற்றதால் தொழிலில் மன உறுதியுடன் ஜாதகர் செயல்படமாட்டார். ஆனால் செவ்வாய்க்குரிய பிடிவாதகுணம் மட்டும் இருக்கும். கூட்டாளி பாவகத்தில் இருந்து சந்திரன் லக்னத்தை பார்ப்பது சிறப்பே என்றாலும், காம ஸ்தானமான 7 ல் சலன காரகரான உணர்ச்சி கிரகம் சந்திரன் அமைவது சலன புத்தியால் ஜாதகர் பாதிக்கப்படுவதையும் குறிப்பிடும். தொழிலில் கூட்டாளியை குறிக்கும் புதன் விரையாதிபதியாகி அவர் 8 ல் வர்கோத்தமம் பெற்று விரைய ஸ்தான குருவின் பார்வையை பெறுவது இந்த ஜாதகர் தொழில் கூட்டு வைத்துக்கொண்டால் கூட்டாளியால் விரையமும் அவமானமும் ஏற்படும் என்பதை கூறுகிறது. சூரியன் நவாம்சத்தில் நீசமானது ஜாதகருக்கு ஆளுமைத்திறன் போதாது என்பதை உணர்த்துகிறது. சனியும் சுக்கிரனும் இணைந்து குரு பார்வை பெறுவது மிகச் சிறந்த அமைப்பே ஆகும். ஜாதகருக்கு சுக்கிரனின் காரக தொழிலை செய்ய விருப்பமிருப்பதை இது கூறுகிறது. ராகு-கேதுக்கள் உச்சம் பெற்றுள்ளது இந்த ஜாதகர் ராகு-கேதுக்கள் தொடர்புடைய தொழிலை செய்தால் சிறப்படைவார் என்பதை கூறுகிறது. அவற்றின் தசா-புக்திகள் மிகுந்த நன்மை செய்யும்.

தசாம்சத்தில் கூட்டாளியை குறிக்கும் புதன் பாதக ஸ்தானத்தில் அமைத்தது இவர் கூட்டாளியால் பாதகத்தை சந்திப்பதை உறுதி செய்கிறது. சனியும் சுக்கிரனும் நவாம்சத்தில் தொடர்பானது போலவே இங்கும் பரிவர்த்தனை மூலம் தொடர்பாகின்றனர். இதனால் முன்பு குறிப்பிட்டது போல இந்த ஜாதகர் சுக்கிரனின் காரக தொழிலை செய்ய சிறப்பு நிச்சயம் ஏற்படும். லக்னத்தை பரிவர்த்தனைக்குப் பிறகு சுக்கிரனே வலுவாக பார்க்கிறார். பரிவர்த்தனை ஜாதகர் செய்யும் தொழில் இடமாற்றத்திற்கு பிறகு சிறப்படைவதை குறிக்கிறது. லக்னத்தை ஆட்சி பெற்று பார்க்கும் சுக்கிரன் தனது காரகத்தை ஜாதகரின் மேல் செலுத்துவார். ராகுவும் லக்னாதிபதி செவ்வாயும் லாப ஸ்தானத்தில் இணைந்துள்ளது தொழிலில் கடன் ஏற்பட்டாலும் லாபம் உறுதி என்பதை தெரிவிக்கிறது. 10 ஆமதிபதி சூரியன் கால புருஷனுக்கு 12 ல் லக்னத்திற்கு 5 ல் கேது தொடர்பு பெற்று நிற்பது இவர் தொழில் ராகு-கேதுக்கள் குறிக்கும் நவீனத்துவம் சார்ந்தது என்பதுடன் அதில் கடன் அல்லது வழக்கில் பாதிப்படைந்து ஜாதகர் மீழ்வார் என்பதையும் குறிப்பிடுகிறது.
ராசிச்சக்கரத்தில் சுக்கிரன் லக்ன சூரியனின் கார்த்திகை-1 ல் அமைந்துள்ளார். இதனால் சுக்கிர தசையில் ஜாதகர் சுக்கிரனின் காரக தொழிலான வீட்டு அலங்கார நிறுவனம் நடத்தி சிறந்த சம்பாத்தியம் பெற்றார். சூரியனும் குருவும் ராசி பரிவர்த்தனையாகியுள்ளனர். சூரியனும் சனியும் நட்சத்திர பரிவர்த்தனை பெற்றுள்ளனர். இந்த அமைப்பால் சுக்கிர தசையில் சனி புக்தி தொடங்கியதும் ஜாதகர் சொந்த ஊரை விட்டு தலைநகருக்கு வந்தார். சனி புக்தியை அடுத்து வந்த புதன் புக்தியில் உறவினர் ஒருவரை கூட்டாளியாகக்கொண்டு நிறுவனத்தை விரிவுபடுத்தினார். கூட்டாளியை குறிக்கும் பாதகாதிபதியான புதன் விரையத்தில் கேதுவோடு இணைவு பெற்று அமைந்துள்ளார். ஜாதகருக்கு சந்திரன் காம ஸ்தானாதிபதி புதனின் ஆயில்யத்தில் அமைந்துள்ளார். புதன் படுக்கை பாவகமான 12 ல் கேதுவோடு இணைவு பெற்றதன் காரணமாக ஜாதகருக்கு மனச்சலனம் ஏற்பட்டது. ஜாதகரின் சலனத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட கூட்டாளி ஜாதகரிடமிருந்து கணிசமான ஒரு தொகையை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். உறவினரான கூட்டாளியை பிற்பாடு கண்டுபிடித்தாலும் தனது சலனங்களை எங்கே தனது குடும்பத்தாரிடம் சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில் அவரை பார்ப்பதை ஜாதகர் தவிர்க்கிறார். 8 ஆமதிபதியான சுக்கிரன் 2 ல் நின்றதால் ஜாதகரின் பெண் சபலமே அவமானத்தை தேடித்தந்தது. அதை மறைக்க பல லட்சங்களை கூட்டாளியிடம் இழந்துவிட்டார். சுக்கிர தசை முடிந்து தற்போது சூரிய தசையில் பணக்காரர்களின் வீடுகளில் குட்டி திரையரங்கம் (Home Theatre) அமைக்க தேவையான மின்னணு உபகரணங்களை வெளிநாட்டிலிருந்து தருவித்து வழங்கும் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாளியாக பணிபுரிகிறார். சுய தொழிலை விட்டுவிட்டார். சுக்கிர தசையில் ஏற்பட்ட இழப்புகளையும், கடன்களையும் சரிசெய்துவிட்டார். தற்போது செய்வது ராகு-சுக்கிரனின் காரகத்தொழில்தான் என்றாலும் சுக்கிர தசை கடந்துவிட்டதால் பழைய தவறுகளை மனதில் கொண்டு எச்சரிக்கையாக செயல்படுகிறார்.
சுய தொழிலை விட்ட பிறகு பணிபுரிந்துகொண்டே சில தொழில்களை தனிப்பட்ட முறையில் நண்பர்களின் உதவியுடன் தற்போதும் செய்து வருகிறார். அவற்றில் நண்பர்களுடன் எழுத்து முறையில் ஒப்பந்தம் போடப்பட்டு செய்யும் அனைத்து தொழில்களிலும் பாதிப்பு வருவதாக கூறுகிறார். ஒப்பந்தமற்று இணைந்து செயல்படும் தொழில் கூட்டில் பாதிப்பு இதுவரை வந்ததில்லை என்கிறார். ஒப்பந்தத்தை குறிக்கும் புதன் பாதகாதிபதி என்பதுதான் இதற்கு காரணம். பாதகாதிபதியின் காரகத்தில் ஈடுபடாமல் செய்யும் செயல்களில் பாதிப்பு வர வாய்ப்பு குறைவு என்பதை உணர்க.
விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
உங்கள் ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501