
இயற்கையின் மடியில், பலவகையான நாட்டு மரங்களும், பலா, அன்னாசி போன்ற கனி மரங்களும், மரமல்லிகை போன்ற பூ மரங்களும் நறுமணம் வீச… ஒரு குயில் தோப்பில் வீடு அமைத்து வாழ வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் உண்டு. அப்படி ஒரு ரம்மியமான சூழலில் வாழும்போது, கவிதையில் தமிழை ஆண்ட பாரதியாரைப் போலவே நமக்கும் கவிதை உள்ளம் பிறப்பது இயற்கைதான்.
ஆனால், மரங்கள் சூழ்ந்த தோப்பு வீடுகளில் வசிப்பது மனதிற்கு இதமளித்தாலும், சில மரங்கள் வெளியிடும் வாயுக்கள் மற்றும் அவற்றின் நிழல்கள் வீட்டின் மீது படும்போது எதிர்பாராத பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனால்தான் நமது முன்னோர்கள் ‘விருக்ஷ சாஸ்திரம்’ மற்றும் ‘வாஸ்து சாஸ்திரம்’ ஆகியவற்றில், வீடுகளில் எந்தெந்த மரங்களை வளர்க்கலாம், எவற்றைத் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் எனத் தெளிவாக வகைப்படுத்தியுள்ளனர்.
கனவு இல்லமும் எதிர்பாராத சோதனையும்
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உழைத்து, பணி ஓய்வு பெற்ற பின் கிடைத்த சேமிப்புத் தொகையில் தனது கனவை நனவாக்க, மரங்கள் சூழ்ந்த தோப்பு நிலம் ஒன்றை வாங்கினார் ஒரு பெண்மணி. அதில் ஆசையாக வீடு கட்டிக் குடியேறிய சில மாதங்களிலேயே, அவரது வாழ்க்கையிலும் ஆரோக்கியத்திலும் எதிர்பாராத சறுக்கல்களும் சிரமங்களும் சுழன்றடிக்கத் துவங்கின.
“இவ்வளவு அமைதியான சூழலில் வாழ வந்தும், இந்தத் திடீர் சிரமங்களுக்கு வீட்டின் மீது விழும் ஒரு குறிப்பிட்ட மரத்தின் நிழல்தான் (விருக்ஷ சாயா தோஷம்) காரணமா?” என்ற ஆழ்ந்த கேள்வியோடும், மனக்குழப்பத்தோடும் என்னை அணுகினார்.
வாஸ்து குறைபாடுகளையும், கண்ணுக்குத் தெரியாத கர்ம வினைகளையும் மிகத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியான ஜாமக்கோள் பிரசன்னத்தின் துணைகொண்டு இதற்கான விடையைத் தேடினோம்.
இந்த மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க நாம் பார்த்த அந்த ஜாமக்கோள் பிரசன்னமும், அதற்கான விரிவான பலன்களும் கீழே உங்கள் பார்வைக்கு…

- சொத்து விவரம்: தனுசு உதயாதிபதியே சொத்தைக் குறிக்கும் 4-ஆம் அதிபதியாகிறார். உதயத்தை 10-ஆம் இடத்திலிருந்து பூமி காரகர் செவ்வாய் திக்பலம் பெற்றுப் பார்க்கிறார். தோட்டம் என்பதைக் குறிப்பிடும் 4-ஆம் இடத்திலிருந்து இரு சனியும் (உள்வட்ட, வெளிவட்ட சனி) 10-ஆம் பார்வையாக உதயத்தைப் பார்க்கிறார்கள். 4-ஆம் அதிபதி குரு உள்வட்டத்திலும், வெளிவட்டத்திலும் கால புருஷனுக்கு 4-ஆம் இடமான கடகத்தில் உச்சம் பெற்று அமைந்து 4-ஆம் இடத்தைப் பார்க்கின்றனர். இதனால் இது சொத்தைப் பற்றிய விஷயம் என்பது தெளிவாகிறது. பிரசன்னம் இப்படி கேள்வியை சுட்டிக்காட்டிவிட்டால் பதில் காண்பது எளிது.
- கிரக நிலைகளும் பாதிப்பும்: உதயாதிபதி குரு உதயத்திற்கு 8-ல் மறைந்துவிட்ட நிலையில், உதயத்தை சனி, செவ்வாய், சூரியன் ஆகிய பாவிகளுடன் பாதகாதிபதி புதனும் பார்க்கிறார்கள். இதில் உதயத்திற்கு சூரியன் பாக்யாதிபதி என்றாலும் கூட, அவர் பாதகாதிபதி புதனுடன் இணைவு பெற்றதால் தீமை ஏதோ ஒரு வகையில் கேள்வியாளரது சொத்துக்கு ஏற்படும். பூமி காரகர் செவ்வாய் திக்பலம் பெற்றது சிறப்பென்றாலும், அவர் சனியின் பார்வையைப் பெறுவது சொத்தில் பாதிப்பு ஏற்படுவதைக் குறிக்கிறது.

கேள்விக்கான விளக்கம்
கேள்வியாளர் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய தோப்பில், சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டியுள்ளார். “அந்த வீட்டில் புளிய மரத்தின் நிழல் விழுவதுதான் தனது உடல், மன நல பாதிப்புகளுக்கு காரணமா?” என்று கேட்கிறார்.
- வீட்டின் நிலை: 4-ஆம் இடத்தில், 4-க்கு விரையாதிபதியான (3-ஆம் அதிபதி) சனி அமைந்து செவ்வாயின் பார்வையைப் பெறுவது வீட்டிற்குப் பாதிப்பு உள்ளதைத் தெளிவாக்குகிறது. ஆனால், உதயாதிபதியும் 4-ஆம் அதிபதியுமான குரு 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால், அங்கு சனி மற்றும் செவ்வாயால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது.
- ஆரூடம் மற்றும் கவிப்பு: ஆரூடம் 4-ன் விரைய பாவகமான கும்பத்தில், செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் அமைந்தது வீட்டிற்குப் பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருப்பதை உணர்த்துகிறது. ஆரூடத்துடன் இணைந்து நிற்கும் கவிப்பு, உதயாதிபதியும் 4-ஆம் அதிபதியுமான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் அமைந்தது, வீட்டிற்கு ஏற்படும் பாதிப்பு கேள்வியாளரையும் நேரடியாகப் பாதிக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது.
புளிய மர நிழல் பாதிப்பா?
புளிய மரத்தின் காரக கிரகம் ராகு ஆவார் (சில நூல்களில் சனி என்றும் குறிப்பு உண்டு). பிரம்மாண்டமாக நீண்டு வளரக்கூடியது என்பதாலும், தீய வாயுக்களை இரவு நேரத்தில் அதிகமாக வெளிப்படுத்தும் என்பதாலும் புளிய மரம் ராகுவின் காரகத்துவத்திற்குள் வருகிறது.
பாதிப்பின் வகையைக் கவிப்பு சுட்டிக்காட்டினால், அதன் காரணத்தை ஆரூடம் சுட்டிக்காட்டிவிடும். இங்கு ஆரூடமும், கவிப்பும் நிழலைக் குறிப்பிடும் ராகுவுடன் இணைந்து நிற்பதால், புளிய மர நிழல் வீட்டின் மீது விழுவது தீமையே என்பது உறுதியாகிறது.
ஆரோக்கியப் பாதிப்பிற்கான உண்மையான காரணம்
இங்கு கேள்வியாளரது பாதிப்பிற்கு வேறு சில முக்கிய காரணங்களும் உள்ளன. 4-ஆம் இடம் ஆரோக்கிய ஸ்தானம் எனும் நிலையில், 3-ஆம் இடத்தில் ஆரூடமும் கவிப்பும் அமைந்ததால் கேள்வியாளரின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. உதயாதிபதி உச்சம் பெற்றது பொருளாதார வகையில் அவர் சிறப்பானவர் என்பதைக் குறிப்பிட்டாலும், அவர் 8-ல் உச்சம் பெற்றது கேள்வியாளரது ஆரோக்கியத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பானது, எளிதில் சரி செய்ய இயலாத நாள்பட்ட நோய் (குறைபாட்டு வியாதி) என்பதைக் குறிக்கிறது.
இனிப்பைக் குறிக்கும் குருவும் சுக்கிரனும், தீராத வியாதியைக் குறிக்கும் 8-ஆம் இடத்தில் பாதகாதிபதியும் கால புருஷ ரோகாதிபதியுமான புதனுடன் இணைந்ததால், கேள்வியாளருக்குச் சர்க்கரை வியாதி (Diabetes) உள்ளதை அறிய முடிகிறது. மேலும், உள்வட்ட குரு சனியின் பூச நட்சத்திரத்தில் நிற்பதால், நீண்ட நாட்களாகச் சர்க்கரை வியாதிக்காகக் கேள்வியாளர் எடுத்து வரும் மருந்துகளின் வீரியமுமே அவரது ஆரோக்கியக் குறைவிற்கும், மன நிம்மதியின்மைக்கும் முக்கிய காரணம் என்பதைப் பிரசன்னம் காட்டுகிறது.
வீட்டின் மீது விழும் புளிய மர நிழல் வீட்டிற்குப் பாதிப்புதான் என்றாலும், மரத்தை அகற்றுவதால் மட்டும் கேள்வியாளர் முழுமையாகத் தனது ஆரோக்கியப் பாதிப்புகளிலிருந்து வெளிவர மாட்டார் என்பதை இது உணர்த்துகிறது.
தீர்வு
இதனால் புளிய மரக் கிளைகளை வெட்டி நிழல் விழாமல் அகற்றுவதோடு, முறையான மருத்துவ சிகிச்சையுடன், சில வாழ்வியல் மாற்றங்களும் ஆன்மீகப் பரிகாரங்களும் கேள்வியாளருக்குப் பரிந்துரைக்கப்பட்டன.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் உங்களைச் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துகளுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்
கைபேசி: +91 8300124501










