
வாழ்க்கைப் போராட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கட்டத்தில் தனக்கான அடையாளத்தைத் தேடிப் பயணிக்கத் தொடங்குகிறான். வேறொருவரின் கனவுகளுக்காக உழைப்பதைக் காட்டிலும், தனது சொந்த உழைப்பும் திறமையும் நேரடிப் பலன் தரவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது ஒரு வெற்றியின் முதல் படி.
இதனைத்தான் நம் முன்னோர்கள் “வினைத் தூய்மை” என்றும், “தன் கையே தனக்கு உதவி” என்றும் போற்றினார்கள். ஒருவரிடம் பணியாளராக இருந்து தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட பிறகு, அந்த அனுபவத்தைக் கொண்டு சுயமாகப் பீடுநடை போட விரும்புவது இயற்கையான பரிணாம வளர்ச்சி.
மனப் போராட்டமும் மாற்றமும்
ஒருவர் தனது முதலாளியைப் பிரிந்து தனியாகத் தொழில் தொடங்க முற்படும்போது, அங்கே பல தார்மீகக் கேள்விகள் எழுகின்றன:
- நேரம் கூடி வந்துவிட்டதா? – கற்றுக்கொண்ட வித்தை இப்போது கைகொடுக்குமா?
- விசுவாசம் vs வளர்ச்சி: – இத்தனை காலம் வாழ்வளித்த முதலாளியைப் பிரிவது தார்மீக ரீதியாகச் சரியா?
- சவால்களை எதிர்கொள்ளும் துணிவு: – லாப-நஷ்டங்களைத் தாங்கும் மனவலிமை இருக்கிறதா?
ஜோதிடப் பார்வையில் சுயதொழில்
ஜோதிட ரீதியாக, பத்தாம் இடம் (தொழில்) மற்றும் ஏழாம் இடம் (கூட்டுத் தொழில்/சமூகம்) முக்கியப் பங்கு வகிக்கின்றன. அடிமைத் தொழிலைக் குறிக்கும் 6-ம் இடத்தின் பிடியிலிருந்து விடுபட்டு, சுய ஆளுமையைக் குறிக்கும் லக்னமும், லாபத்தைக் குறிக்கும் 11-ம் இடமும் வலுப்பெறும்போது ஒருவன் ‘முதலாளி’ ஆகிறான்.
பல்லாண்டுகளாகத் தனது முதலாளியின் தொழில் சாம்ராஜ்யத்தில் ஒரு அங்கமாக இருந்து, வளமான நிலையில் இருக்கும் ஒருவர், “தனித்துத் தொழில் செய்ய கிரக நிலைகள் சாதகமாக இருக்கிறதா?” என வினவினார். அதற்கான ஜாமக்கோள் பிரசன்ன ஆய்வு இதோ:

கிரகங்களின் வழிகாட்டல்
1. அமைப்பும் தொடர்பும்: கடக உதயத்திற்கு 7-ல் ஆரூடம் அமைந்துள்ளது. இது இருவர் கூட்டாகச் செயல்படுவதைக் குறிக்கும். உதயத்தைக் கேள்வியாளர் எனக் கொண்டால், 7-ம் இடத்தை முதலாளி எனக் கொள்ளலாம். கூட்டாளியைக் குறிக்கும் 7-ஆம் அதிபதி சனி, உள்வட்டத்திலும் வெளிவட்டத்திலும் முதலாளியைக் குறிக்கும் 9-ஆம் இடத்தில் அமைந்துள்ளது, இது முதலாளி அல்லது வழிகாட்டியின் மீதான பிரசன்னம் என்பதை உறுதி செய்கிறது.
2. முதலாளியின் நிலை: பாவக ரீதியாக 9-ம் இடம் முதலாளி என்றால், காரக ரீதியாகச் சூரியன் முதலாளி. வருமான ஸ்தானாதிபதி (2-ஆம் அதிபதி) சூரியன் 9-ல் அமர்ந்திருப்பது, கூட்டாளி மூலம் நல்ல வருமானம் வருவதைத் தெளிவாக்குகிறது.

3. தற்போதைய நிலை: உதயத்தில் உதயாதிபதி சந்திரன் ஆட்சி பெற்றுள்ளார். அங்கு 6, 9-க்கு உடைய குரு உச்சம் பெற்றது சிறப்பு. 6-ம் இடம் (சேவை) மற்றும் 9-ம் இடம் (முதலாளி) ஆகியவற்றுக்குரிய குரு உதயத்தில் அமர்ந்திருப்பது, கேள்வியாளர் தற்போதும் முதலாளியின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதைக் காட்டுகிறது. இதனால் அவருக்கு நல்ல வருமானமும் கிடைத்து வருகிறது. ஜாமச் சந்திரன் 7-ல் நிற்பதால், அவர் இன்னமும் முதலாளியையே நம்பிச் செயல்படுகிறார்.
4. மாற்றத்திற்கான எண்ணம்: வேலை மற்றும் சேவையைக் குறிக்கும் 6-க்கு விரையமான 5-ஆம் இடத்தில் கவிப்பு அமைந்துள்ளது. இது, கேள்வியாளர் இனி முதலாளியிடம் பணிசெய்யவோ அல்லது கூட்டாக இணைந்து செயல்படவோ தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது.
5. சவால்களும் தடைகளும்: உதயம் விழுந்த நட்சத்திராதிபதி புதன், உள்வட்டத்தில் 8-ல் (கும்பம்) 10-ஆம் அதிபதி செவ்வாய் மற்றும் ராகுவுடன் இணைந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். ஜாம புதனும் 12-ல் மறைந்துள்ளார். இதனால் தொழிலில் இணைந்து செயல்படும் வாய்ப்பு குறைகிறது. செவ்வாய் மற்றும் சந்திரனின் தொடர்பால், கேள்வியாளர் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை எடுக்க வாய்ப்புண்டு. உதயத்தை அடுத்து நிற்கும் கேது, அவர் அவசரப்பட்டுத் தனியாக இயங்கினால் வருமானத்தைத் தடை செய்யும் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
முடிவு:
தற்போதைய நிலையில் நல்ல வருமானம் வருவதால், இப்போதே பிரிவது வருமானத் தடையை ஏற்படுத்தும். உதயத்தைக் கேது கடந்து செல்லும் வரை பொறுமை காப்பதே நலம்.
இந்தத் தெளிவை வழங்கியபோது, “தற்போதைய உலகச் சூழல் சாதகமாக இல்லாவிட்டாலும், எப்போது தனியாக இயங்குவது என்ற காத்திருப்பின் விரக்தி என்னைத் தூண்டியது. நீங்கள் தெளிவுபடுத்தாவிட்டால் அவசரப்பட்டு முடிவெடுத்திருப்பேன்” என்று கூறி ஆலோசனையைப் பெற்றுச் சென்றார்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501
![]()










