ஒருவர் தனது கனவுத் தொழிலைத் தேர்ந்தெடுக்கும்போது, அதற்குரிய சமூக அங்கீகாரமும் குடும்ப ஆதரவும் கிடைக்காத சூழலில் மிகுந்த மன அழுத்தத்தைத் பெறுகிறார். குறிப்பாக, வருமானம் மற்றும் பாதுகாப்பு நிறைந்த மரபுவழித் தொழில்கள் மட்டுமே மதிப்போடிருந்த கடந்த தலைமுறையிறைத் தொழில்கள் இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த வேலையில் எதிர்காலம் இருக்கிறதா?’ என்கிற மற்றவர்களின் கிண்டல் பேச்சுகளும், உற்றார் உறவினர்களின் அவநம்பிக்கையும் அந்த நபரின் தன்னம்பிக்கையைச் சிதைக்கக்கூடும். இருப்பினும், இத்தகைய தடைகளையும் மீறிச் செயல்படுபவர்கள் மட்டுமே, தங்கள் திறமையால் காலப்போக்கில் அந்த எதிர்ப்புகளைப் பாராட்டுக்களாக மாற்றும் வலிமையைப் பெறுகிறார்கள். நானே ராஜா, நானே மந்திரி எனும் பாரம்பரியத் தொழில்களுக்கு சுய மதிப்பு என்பது எப்பொழுமே உண்டு என்றாலும் தனது முன்னோர்களுக்கு பொருளாதாரத்தை அள்ளி வழங்கிய தொழில் என்னை ஏன் கைவிட்டது? என்று புலம்புவோர் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கின்றனர். இத்தகையோர் எளிய வாழ்க்கையில் நிம்மதியடையலாம். ஆனால் இன்றைய தேவைகளுக்கான பொருட்களையோ, சேவைகளையோ வழங்க முடியாதவர்கள் பெரிய அளவில் முன்னேற முடியாது என்பது நிதர்சனம்.
இந்த நிலையில் தனது தந்தை கோலோச்சிய தொழிலை தொடர்கிறேன். அதனால் வேதனைகள்தான் அதிகம். எனக்கு வழிகாட்டுங்கள் என்று வந்த அன்பரின் ஜாதக ஆய்வே இன்றைய பதிவாக வருகிறது.

மிதுன லக்னத்தில் வேலையைக் குறிக்கும் 6 ஆமதிபதி செவ்வாய் வருமானத்தை குறிக்கும் 2 ஆமதிபதி சந்திரனுடன் இணைந்து அமர்ந்துள்ளார். இது பணிபுரிய வைக்கும் ஜாதக அமைப்பு. ஜாதகர் தந்தையின் தொழிலை தொடர்வதாகக் கூறினார். தொழில் ஸ்தானமான 10 ஆமிடத்தில் நிர்வாக கிரகம் சூரியன் திக்பலம் பெற்றுளதால் இவர் இயல்பாகவே நிர்வாகம் செய்ய விரும்புவார். லக்னாதிபதி புதன் நீசமானதால் உடன் இணைந்த சூரியனின் திக்பல வலுவை தனதாக்கிக்கொண்டு ஜாதகர் வலுப்பெற முயல்கிறார். இதுவே ஜாதகர் தந்தையின் தொழிலை தொடரக் காரணம். தந்தை தேங்காய் மொத்தக் கொள்முதல் வியாபாரம் செய்தவர். தந்தை மறைந்துவிட்டார். இதனால் அவர் ஏற்படுத்தி வைத்த சாம்ராஜ்ஜியத்தை தொடர்வதாக கூறுகிறார். புதனுக்கும் சூரியனுக்கும் வீடு கொடுத்த 10 ஆமதிபதி குரு, தனவரவை குறிப்பிடும் 2 ஆமிடம் கடகத்தில் உச்சம் பெற்று வக்கிரமடைந்ததால் நீசத்திற்கு ஒப்பான நிலையில் கேதுவுடன் இணைந்துள்ளார். குரு பலகீனமானதால் குரு வீட்டிலமர்ந்த புதனும் சூரியனும் பலகீனமாகிறார்கள். ராகுவுடன் இணைந்த சனியின் 3 ஆம் பார்வையும் 10 ஆமிடத்தின் மீது விழுவதால் நிர்வாக கிரகம் சூரியன் பெருமளவு வலுவிழந்தவராகிறார். ஏற்கனவே நீசமான புதன் மேலும் பாதிக்கபடுகிறார். இத்தகைய ஜாதக அமைப்பினருக்கு தந்தையின் தொழில் கடும் பாதிப்பை வழங்கும். இந்நிலை ஜாதகரை சுய தொழில் நிர்வாகத்தில் தவறாக முடிவெடுக்க வைக்கும். மாறுதலாக கடக உச்ச குரு வக்கிரமாகாமல் இருந்தால் அங்கு கேதுவுடன் இணைந்திருந்தாலும் சுய தொழில் நிர்வாகத்தில் சமாளித்து மீண்டுவிடுவர். இங்கு குருவின் வக்கிரம் சூழலை மாற்றியமைக்கிறது. இத்தகையவர்கள் சுய தொழில் அன்றி பிறருக்காக பணிபுரிகையில் நிர்வாகத்தில் பிரகாசிக்கிறார்கள். குடும்ப ஸ்தானமான 2 ஆமிடத்தில் குரு வலுவிழந்த நிலையில் கேதுவுடன் இணைவு பெற்றுள்ளதால் ஜாதகருக்கு குடும்பத்தொழில் கைகொடுக்காது. தந்தையின் குடும்பத் தொழில் (தேங்காய் மண்டி) ஜாதகருக்கு உதவவில்லை எனும் சூழலில் என்ன தொழில் உதவும் என்ற அறிய விரும்பினேன்.

தசாம்சத்தில் சிம்ம லக்னத்திற்கு 2 ஆமிடத்தில் புதனின் உச்ச வீட்டில் ராகு அமைந்துள்ளார். லக்னாதிபதி சூரியன் 6 ஆமிடம் மகரத்தில் அமைந்து 12 ஆமிடத்திலமைந்த 2 ஆமதிபதியும் தகவல் கிரகமுமான புதன் மற்றும் தகவல் பாவாதிபதி (3 ஆமிடாதிபதி) சுக்கிரனின் பார்வையை பெறுகிறார். 5 ஆமிடத்திலமைந்த சனிக்கு தகவல் தொடர்பை குறிப்பிடும் மிதுனத்திலிருந்து குரு, செவ்வாயின் பார்வை கிடைப்பதால் ஜாதகர் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறையில் சம்பாதிக்க அமைப்பு உள்ளது. 6 ஆமிட சனி 3 ஆமதிபதி சுக்கிரனின் பூராடத்தில் நிற்பதால் இதுதான் சரி. ஜாதகர் புதன் தசை கடந்து தற்போது சனி தசையில் உள்ளார். லக்னாதிபதி சூரியன் வேலையை குறிப்பிடும் 6 ஆமிடத்தில் நின்று கடந்த தசாநாதர் புதனை பார்த்ததால் ஜாதகர் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்தார். தற்போதைய தசாநாதர் சனி நெருப்பு ராசியான தனுசில் நின்று தசை நடத்துவதால் ஜாதகருக்கு நிர்வாகம் செய்யும் எண்ணம் வந்துள்ளது புரிகிறது.
ராசிச் சக்கரத்தில் 10 ஆமிட புதன் நீசம் பெற்றாலும் பிற கிரகங்களைவிட அதிக பாகை பெற்று நிற்பதால் ஜாதகர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவதுதான் சிறப்பு. ஜாதகர் ஏற்கனவே தந்தையின் மறைவுக்கு முன் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி கற்று மென்பொருள் துறையில் நல்ல பொறுப்பில் பணிபுரிந்ததாக கூறினார். அதை விட்டு சொந்த ஊர் வந்தது முதல் தந்தையின் தொழிலால் கடனும், குடும்ப பாதிப்பும் மிகக் கடுமையாக தன்னை தாக்குகிறது என்று கூறினார். தற்போதைய உலகச் சூழல் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் தற்காலத்தின் தேவைக்கேற்ற வகையில் உங்களை மேம்படுத்திக்கொண்டால் மீண்டும் அத்துறையே உங்களை அரவணைக்கக் காத்துள்ளது என்று கூறினேன்.
இந்த ஜாதகருக்கு ஏன் இந்நிலை ஏற்பட்டது. இவரது கர்மாதான் என்ன? என்று அறிய அதற்குரிய வர்க்கச் சக்கரமான சஷ்டியாம்சத்தை ஆராய்ந்தேன்.

சஷ்டியாம்சத்தில் சிம்ம லக்னாதிபதியும் தந்தையை குறிக்கும் கிரகமுமான சூரியன் 12 ஆமிடமான கடகத்தில் மறைந்துவிட்டார். தந்தையை குறிக்கும் 9 ஆமதிபதியும், பங்காளிகளை குறிக்கும் கிரகமுமான செவ்வாயும் 12 ல் நீசம் பெற்ற நிலையில், 2 ஆமதிபதி புதனும் மாந்தியுடன் 12 ல் மறைந்துள்ளனர். 12 ஆமிடம் ஜாதகத்தில் சாபத்தை குறிப்பிடும் பாவகமாகும். அங்கு அமைந்த கிரகங்கள் ஜாதகருக்கு சாபத்தை வழங்கக் கூடியது என்பதுடன் அங்கு மாந்தியும் அமைந்துள்ளதால் சாபம் உயிர்ப்பலியையும் வாங்கக்கூடியதாக இருப்பது புரிகிறது. சனி உச்சம் பெற்றுள்ளதால் ஜாதகருக்கு கர்மா அதிகம். சனி லக்னாதிபதி சூரியனை தனது 10 ஆம் பார்வையால் பார்ப்பதால் கர்மா ஜாதகரை பாதிக்கிறது. சனி 7 ஆமதிபதி என்பதாலும், களத்திர ஸ்தானமான 7 ஆமிடத்தில் எட்டாமதிபதி குரு வக்கிரம் பெற்று அமைந்த நிலையில், மனைவியை குறிப்பிடும் சுக்கிரன் 8 ஆமிடத்தில் இனைந்துவிட்டதால் ஜாதகரின் தந்தையையே பெண் சாபமும், பங்காளி வகை சாபமுமே வீழ்த்தியுள்ளது புரிகிறது. ஜாதகரின் மனைவியும் உயிரிழந்துள்ளார். ஆனால் 2 ல் கேது அமைந்து, 10 ஆமதிபதி சுக்கிரன் ராகுவுடன் இணைவு பெற்றது ஜாதகர் தகவல் தொழில்நுட்பத் துறையில் சம்பாதிக்க தடை செய்யாது.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: +91 8300124501
