உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

இன்றைய கால மனிதர்கள் அதிக அறிவு, அதிக சம்பாத்தியம் என்று அனைத்திலும் அதீதத்தை நாடுவதன் காரணமாக, சின்னச் சின்ன விஷயங்களின் மகிழ்வை இழக்கிறார்கள். வாழ்க்கை என்பது பல சிறிய மலர்களைக் கொண்டு தொடுக்கப்படும் மாலையாக இருக்க வேண்டும். எளிய விஷயங்களில் நிறைவைக் காணும் நபர்களின் வாழ்க்கைப் படகு, எந்தப் புயலையும் எதிர்த்துப் பயணித்துக் கரை சேர்ந்துவிடும்.

 

மெத்தப் படித்தவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் அறிவுசார் தேடல்கள், கவலைகள் மற்றும் சமூக அந்தஸ்தைப் பேணும் நெருக்கடிகளுக்குள்ளேயே சுழல்கிறது. ஆனால், ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை இந்தச் சிக்கல்களுக்கு அப்பாற்பட்டு, இயல்பான மகிழ்ச்சியையும் மனநிறைவையும் மையமாகக் கொண்டது. அதிகப் படிப்பு சில நேரங்களில் மிகையான சிந்தனைகளையும் (Overthinking), வாழ்வின் எளிய தருணங்களை ரசிக்க விடாத மனத்தடையையும் உருவாக்கிவிடுகிறது. மாறாக, சராசரி மனிதர்கள் அன்றாட உழைப்பு, குடும்ப உறவுகள் மற்றும் சிறிய வெற்றிகளில் பெரும் திருப்தியைக் காண்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகள் எதார்த்தமானவை என்பதால், ஏமாற்றங்கள் அவர்களைப் பெரிதாகப் பாதிப்பதில்லை. சுருக்கமாகச் சொன்னால், மெத்தப் படித்தவர்கள் வாழ்க்கையை “ஆராயப்” பழகுகிறார்கள்; சராசரி மனிதர்கள் வாழ்க்கையை “வாழப்” பழகுகிறார்கள். இதுவே சராசரி வாழ்க்கையை அதிக சுவாரஸ்யமானதாகவும் அழுத்தமற்றதாகவும் மாற்றுகிறது. இது பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு.

 

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

 

 

கணிதத்தைக் குறிக்கும் புதனின் மிதுன லக்னத்தில், இரண்டாமிடத்து அதிபதி சந்திரன் ராகுவின் திருவாதிரையில் நிற்கிறார். லக்னத்திற்கு முதல் திரிகோணமான துலாத்தில், கணித ஆய்வுக்கான காரக கிரகம் செவ்வாயும் ராகுவின் சுவாதியில் நிற்கிறார். லக்னத்தின் மூன்றாவது திரிகோணமான கும்பத்தில், தன காரகர் குருவின் பூரட்டாதியில் தணிக்கையை (Audit) குறிப்பிடும் கேது நிற்கிறார்.

 

லக்னாதிபதி புதன் மூன்றாமிடத்தில் வக்கிரம் பெற்று ராகுவுடனும், கேது சாரம் மகத்தில் நிற்கும் சூரியனுடனும் இணைந்துள்ளார் (ராகு-கேதுக்கள் இரண்டுமே தணிக்கையின் காரக கிரகங்களாகும்). மறைபொருள் அறிவை (Occult Knowledge) குறிப்பிடும் எட்டாமிடத்தில் வக்கிரம் பெற்று நிற்கும் குரு தசையில், ஜாதகி கணக்குத் தணிக்கையாளர் (CA) தேர்வில் ஒரே முயற்சியில் வெற்றி பெற்றார்.

 

எட்டாமிடத்துக் குரு, மீனச் சனியுடன் பரிவர்த்தனையாகி பத்தாமிடம் செல்கிறார். பரிவர்த்தனைக்கு முன் தசா நாதர் குரு, தாய்நாட்டைக் குறிக்கும் சந்திரனின் சாரம் திருவோணத்தில் இருந்தார். பரிவர்த்தனைக்குப் பிறகு மீனத்தில் புதனின் ரேவதிக்குச் செல்கிறார். இதனால் ஜாதகிக்குத் தாய்நாடான இந்தியாவில் வங்கிப் பணிக்கு வந்த வாய்ப்புகளை விடுத்து, ஐரோப்பா சென்று தனது உயர்கல்வியைத் தொடர்ந்தார்.

 

ஜாதகத்தில் பரிவர்த்தனையான குருவும் சனியும் வக்கிரமாகியுள்ளதைக் கவனிக்கவும். இதனால் ஜாதகி வெளிநாடு சென்று கல்வியைத் தொடர முடிந்ததே தவிர, நல்ல சம்பாத்தியமுள்ள வேலையை அமைத்துக்கொள்ள இயலவில்லை. தன காரகர் குரு வக்கிரமானதால், ஜாதகி சாதாரணமான சம்பாத்தியத்தில் வேலை செய்ய விரும்பவில்லை; உயர்ந்த தகுதிமிக்க வேலையையே விரும்புவார். சனி வக்கிரமானதால் ஜாதகிக்குத் தொழில் அறிவு அதிகம்; இதனால் எளிய வேலையில் வெளிநாட்டில் பணிபுரிய மனமின்றி உள்ளார். இதன் விளைவாக, வெளிநாட்டில் பணிக்கும் செல்ல முடியாமல், இதர சாமான்ய மனிதர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட இயலாமல், அதிகம் படித்தும் தனிமையில் தவிக்கிறார்.

 

கற்ற கல்வி பயன்படாமல் போன நிலையில், வாழ்வின் பொருளாதார நிலையில் உயர முடியவில்லையே என்ற வருத்தத்தில் திருமண காலத்தைக் கடந்துவிட்ட ஜாதகி, திருமணம் பற்றிச் சிந்திக்கவே எண்ணமின்றி உள்ளார். வயதுக்குரிய வாழ்வை அனுபவிக்க இயலாதபோதும் வாழ்வு நகர்ந்து கொண்டே இருக்கும். சாதாரண மனிதர்கள் இச்சூழலில் வயதுக்குரிய வாழ்வை வீணாக்காது அனுபவிக்கிறார்கள்; உயர்வை நோக்கிய பாதையிலும் பயணிக்கிறார்கள். சாமான்யர்கள் வாழ்வைத் தவறவிடுவதில்லை, ஆனால் மெத்தப் படித்தவர்கள் தவறவிடுகிறார்கள். இங்குதான் சாமான்யர்கள் மெத்தப் படித்தவர்களை விடச் சிறப்பாக வாழ்கிறார்கள். அதீத அறிவுடையோர் வாழ்வை அனுபவிக்க உன்னத விஷயங்கள் தேவைப்படுகின்றன; ஆனால் வாழ்வில் அனைத்துமே அனைவருக்கும் உன்னதமாக அமைந்துவிடுவதில்லை.

 

 

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துகளுடன்,

 

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

 கைபேசி: +91 8300124501

 

Leave A Comment

WhatsApp