
உலகப் பொருளாதாரம் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து இன்னும் முழுமையாக விடுபடாத சூழலில் ரஷ்ய-உக்ரேனிய போர் பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் கொண்டு வந்துள்ளது. இலங்கை, நேபாளம் போன்ற சுற்றுலாவை முக்கியமாக நம்பியுள்ள சிறு நாடுகள் தவிக்கின்றன. அமெரிக்கா தனது மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை காண்பிக்க வட்டி விகித அடிப்படையில் தனது பண மதிப்பை மாற்றி வருகிறது. இதனால் டாலரில் வர்த்தகம் புரியும் பல நாடுகளும் தங்களது பண மதிப்பை வட்டி விகிதத்தை மாற்றி அமைத்து, சரிவை குறைத்து வருகின்றன. இந்திய பங்குச் சந்தையும் சரிவுக்கு தப்பவில்லை. இது முதலீட்டாளர்களை மட்டுமல்ல நூறு, ஆயிரத்தை கடந்துவிட்ட பெட்ரோல், எரிவாயு விலை உயர்வால் சாமானியர்களும் பாதிக்கப்படுகிறார்கள். டாலருக்கேற்ப தங்கள் நாணய மதிப்பை சீரமைக்காத ஜப்பான் போன்ற வளமையான பொருளாதாரம் கொண்ட நாடுகளின் நாணய மதிப்பு முன் எப்போது இல்லாத அளவு சரிந்துள்ளது. இதற்கு பல்வேறு உலகியல் சூழல்கள் காரணமாக கூறப்பட்டாலும் அனைத்து நிகழ்வுகளுக்கும் கிரகங்களின் சஞ்சாரங்களே காரணமாகும். இந்தப்பதிவில் ஜோதிட ரீதியாக உலகப் பொருளாதாரம் இனி எப்படி இருக்கும் என்பதை ஆராய்வோம்.
உலகியல் நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் கிரகங்களில் கால புருஷனின் லக்னாதிபதியான செவ்வாயின் பங்கு மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. செவ்வாய் போர் குணத்திற்கு உரிய கிரகம் ஆகும். செவ்வாயை அடுத்து சிம்ம ராசி அதிபதி சூரியன் அரசியல் நிகழ்வுகளுக்கு முக்கியமாக கவனிக்கப்படுகிறார். மக்களின் மனோ பாவத்தை சந்திரனின் நிலைகொண்டு ஆராய்கிறோம். இம்மூன்று கிரகங்களும் வருட கிரகங்களை சார்ந்தே செயல்படுகின்றன. உலக நிதி நிலைமை, தங்கத்தின் விலை, விலை பொருட்களுக்கு உரிய விலை, நாடுகளுடனான நல்லுறவு ஆகியவை குருவின் நிலைகொண்டே கணிக்கப்படுகின்றன. மக்களின் பணப்புழக்கம் சுக்கிரனின் நிலைகொண்டு ஆராயப்படுகிறது. அடித்தட்டு மக்களின் நிலை, உழைக்கும் தொழிலாளர்களின் நிலை, தாங்கும் சக்தி, பாதுகாப்பு ஆகியவை சனியின் நிலைகொண்டே ஆராயப்படுகிறது. ராகுவின் நிலைகொண்டு போர், தீவிரவாதம், எதிர்பாராத திடீர் நிகழ்வுகள், பேரழிவுகள், பெரும் நோய்கள், நவீன மின்னணு, கணினி, விண்வெளி சார்ந்த விஷயங்களை ஆராயலாம். கேதுவின் நிலைகொண்டு ஆன்மீக நிலை, மருத்துவ வசதிகள், சட்டத்தின் மீதான மதிப்பு ஆகியவற்றை ஆராயலாம். இந்த 8 கிரகங்களையும் ஒருங்கிணைக்கும் அதி முக்கிய பணி புதனுடையது. புதன் தூதுவர்களை, சமாதான பேச்சுவார்த்தை, ஒருங்கிணைப்பு, உடன்பாடுகள் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும். தனிப்பட்ட முறையில் கல்வி, சுகாதார கட்டமைப்பு, தகவல் தொடர்பு போன்றவற்றை குறிக்கும்.
இந்த ஆண்டு ஏப்ரல் துவக்கத்தில் ராகு-கேது பெயர்ச்சி. சுப கிரகமான சுக்கிரனின் ரிஷபத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருந்த ராகு, செவ்வாயின் மூலத்திரிகோண வீடான மேஷத்திற்கு வருகிறார். மேஷ ராகு செவ்வாயின் போர்க்குணத்தை பிரதிபலிக்கும். தூது கிரகமான வாயு கிரகம் புதன், நெருப்பு ராசியில் ராகுவோடு இணையும்போது நாடுகளுக்கிடையே நட்புறவு பாதிக்கப்படும். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது என்ற நிலையை இது குறிக்கிறது. கால புருஷ லக்னாதிபதி செவ்வாய் லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் உடன் இணைந்துள்ள சுபர்களும் பொருளாதார கிரகங்களுமான குரு, சுக்கிரனுடன் பாவ கர்த்தாரி யோகத்தில் அமைகிறார். இதனால் நாடுகளுக்கிடையேயான இணக்கமற்ற போர்ச்சூழல் ஏற்படுவதால் பொருளாதாரம் சீர்குலைவதை இது குறிக்கிறது. சட்டக்கிரகம் கேது நீதி ராசியான துலாத்திற்கு வருவதால் பல பொருளாதார மோசடிகள் வெளிச்சத்திற்கு வரும். நிதி மட்டுமல்ல சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்ட அனைத்து வகை மோசடிப் பேர்வழிகளும் சட்டத்தின் முன் கைகட்டி வாய்பொத்தி நிற்கும் காலம் என்பது ஒரு நல்ல விஷயம். பல ஆண்டுகள் சட்டத்தின் பிடியில் இருந்து நழுவிச் சென்றவர்களுக்கு இது இரக்கமற்ற தண்டனைக்காலம்.
ராகு-கேது பெயர்ச்சியை அடுத்து வந்த குரு பெயர்ச்சியில் குரு மீனத்திற்கு செல்கிறார். இப்போதும் குருவிற்கு பாவ கர்த்தாரி யோகம் கடுமையாக அமைகிறது. சனி தனது மூன்றாம் பார்வையாக குருவை பார்ப்பது குருவை இன்னும் பலவீனப்படுத்துகிறது. குருவை நோக்கி வரும் ராகுவின் நிழல் குருவின் மீது விழுகிறது. இதனால் உலகப் பொருளாதாரம் தடுமாறுகிறது.
குருப்பெயர்ச்சியை பெயர்ச்சியை அடுத்து வந்த சனிபெயர்ச்சியில், சனி கால புருஷ லக்னாதிபதி செவ்வாயுடன் பாதக ஸ்தானத்தில் இணைந்து கால புருஷ லக்னத்தில் உள்ள ராகு, சூரியனை பார்க்கிறது சாதகமற்ற அமைப்பே. சனி தனது மூலத்திரிகோண வீட்டிற்கு வருவது சிறப்பு என்றாலும் அவர் செவ்வாயோடு இணைந்து ராகுவின் நிழலை பெறுவது நல்ல அமைப்பல்ல. அடித்தட்டு மக்கள் வாழ்வை சுமுகமாக நடத்துவதற்கான லாப வரவுகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாவதை அனுபவத்தில் இதன் விளைவாக தற்போது காண்கிறோம். கும்ப சனியின் செயல்பாடுகள் வெளிப்படையானதாக இருக்காது என்பதால் நாடுகளுக்கிடையேயான உறவுகள் வெளியே ஒன்றும் உள்ளே வேறு மாதிரியாகவும் அமையும். கும்பம் வாயு ராசி என்பதால் அது சூழலைப்பொருத்து மாறுதலையும் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலை:
உலகியல் ஜோதிடத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, இந்தியாவை கும்ப மகர ராசிகளாக மதிப்பிடுகிறார்கள். இந்தியாவை பண்டைய காலம் முதல் மகர ராசியில் உள்ள திருவோண நட்சத்திரமாக அளவிடுகிறோம். சீனாவை கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரமாக நான் எடுத்துக்கொள்கிறேன். சனி மகரத்தை கடந்து தற்போது தனது மூலத்திரிகோண ராசியான கும்பத்தில் உள்ளார். இதனால் இந்தியா சீனா ஆகிய நாடுகளுக்கு தற்போது ஏழரை சனி நடந்தாலும், சனி மூலத்திரிகோண வலுவுடன் உள்ளதால் சனியின் அம்சமான நாடுகளுக்கு பாதிப்பு இருந்தாலும் அதை மீறி முன்னேறுவதை யாராலும் தடுக்க இயலாது என்பது தெளிவாகிறது.
இந்திய பங்குச் சந்தை:
இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதால் இந்தியாவின் ராசி அமைப்பை வைத்து மட்டும் இந்திய பங்குச் சந்தையின் போக்கை அளவிடுவது தவறானதாகும். இந்தியாவின் எதிர் ராசியான கடகம், இந்தியாவின் முதலீட்டாளர்களை குறிக்கும். கடகத்திற்கு அஷ்டம சனி நடப்பதாலும், சனி ஆட்சியில் உள்ளதால் இந்தியா தனது நலன்களை முன்னிலைப்படுத்தியே பங்குச்சந்தையை கையாளும். நீண்ட காலப்போக்கில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு கடிவாளமிடும் நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் என்பது உறுதி. இதனால் இந்தியாவின் வளமையான சந்தையை விட்டு விலக முடியாமலும், இந்தியா போன்ற வேறு வளமான சந்தைகள் இல்லாததாலும் இந்தியாவின் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவின் கட்டுப்பாடுகளுக்கு உடன்படுவார்கள். எனினும் இதற்கு சிலகாலம் பிடிக்கும். அதுவரை ஏற்றத்தைவிட இறக்கங்களே அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய பங்குச்சந்தையை பொருத்தவரை, குரு மிதுனத்திற்கு வரும் காலம் வரை அதாவது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சரிவு நீடிக்கும். தங்கத்தின் விலை, குரு ராகுவை கடக்கும் வரை வீழ்ச்சியில் இருக்கும். எனவே இந்தக்காலம் பங்குச் சந்தையை பொருத்தவரை, நல்ல பங்குகளாக நீண்ட கால முதலீடு அடிப்படையில் முதலீடு செய்ய உகந்த காலம். தங்கத்தில் தற்போது முதலீடு செய்வது உகந்தது. சந்தையின் சரிவை பொருத்து சிறிது சிறிதாக வாங்கலாம். உடனடி லாபங்களுக்கு (Intra Trading) தற்காலம் உகந்த காலமல்ல. இது தவிர ஒரு தனிப்பட்ட ஜாதக அமைப்பில் ஒருவருக்கு பங்குச் சந்தையில் பொருளீட்டும் அமைப்பு உள்ளதா? என்பதையும், எந்த வகை பங்குகள் தனி ஒருவருக்கு வளம் தரும். தங்கத்தின் மீதான முதலீடு எந்த அளவுக்கு அவருக்கு லாபகரமானதாக அமையும் என்பதையும் தசா, புக்தி ரீதியாக அறிய இயலும்.
விரைவில் மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501