
“தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழி” என்ற பழமொழி எல்லாக் காலகட்டங்களிலும், எல்லாக் குடும்பங்களிலும் நிஜமாகிவிடுவதில்லை. ஒவ்வொரு ஆன்மாவும் இப்பூமியில் ஜனிக்கும்போதே தனக்கான தனித்துவமான கர்மவினையோடும், தனித்துவமான கிரக அமைப்புகளோடும் தான் பிறக்கிறது. பெற்றோர்களின் ஆசைகள் எவ்வளவுதான் நியாயமானதாக இருந்தாலும், பிள்ளைகளின் ஜாதகக் கட்டங்கள் அதற்கு அனுமதி தராவிட்டால், காலத்தின் ஓட்டம் வேறு ஒரு பாதையைத்தான் காட்டும்.
சமீபத்தில் மதுரையிலிருந்து என்னை நாடி வந்த ஒரு அன்பரின் சந்திப்பு இதற்கு மிகச்சிறந்த உதாரணம். அவர் நம் நாட்டின் எல்லையைக் காத்த ஒரு முன்னாள் ராணுவ வீரர். தன் மகனையும் தன்னைப் போலவே ஒரு கம்பீரமான ராணுவ அதிகாரியாகப் பார்க்க வேண்டும் என்ற பெருங்கனவோடு, கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு மகனை என்னிடம் அழைத்து வந்திருந்தார்.
ஆனால், அந்த மகனின் ஜாதகத்தை ஆராய்ந்தபோது அங்கே ராணுவப் பணிக்குரிய கிரக அமைப்புகள் தென்படவில்லை. மாறாக, திரவப் பொருட்கள் மற்றும் எரிபொருள் சார்ந்த ‘பெட்ரோலியத் துறை’ (Petroleum Sector) மற்றும் வளைகுடா நாடுகளில் (Gulf Countries) சென்று பணிபுரியும் யோகமே வலுவாக இருந்தது. வெளிநாடு செல்லும் ஆசை மகனுக்கும் இருந்தது என்றாலும், அவரிடம் முறையான திட்டமிடல் இல்லை.
“என் மகன் ஏன் ராணுவத்திற்குச் செல்ல முடியாது?” என்று அந்தத் தந்தை ஆரம்பத்தில் இந்த ஜோதிடப் பலனை ஏற்க மறுத்தார். ஒரு முன்னாள் ராணுவ வீரரின் தவிப்பும், பிடிவாதமும் அதில் நியாயமானதே. எனினும், அவருக்கு உண்மையை உணர்த்த வேண்டியது ஒரு ஜோதிடராக என் கடமையாயிற்று.
ஒருவருக்கு ராணுவப் பணி அமைய வேண்டும் என்றால் ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக அமைய வேண்டும். சனி – செவ்வாய் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு பெற்றிருப்பது காவல் மற்றும் சீருடைப் பணி (Uniformed Services) ஆகியவற்றைக் கொடுக்கும். ஆளுமையான அரசு வேலை அமைய வேண்டுமானால் சூரியன் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். தந்தைக்கு இருந்த அத்தகைய அமைப்புகளால்தான் அவர் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். ஆனால், அவருடைய மகனுக்கு அந்த அமைப்புகள் இல்லை என்பதை எடுத்துக்கூறி புரியவைத்தேன்.
மேலும், தசா-புக்தி தொடர்புகள் ராணுவப் பணிக்குச் செல்ல எவ்வளவு முக்கியம் என்பதை, கல்வியை முடித்தவுடன் ராணுவத்திற்குச் சென்ற எனது ஆவணக் காப்பகத்தில் இருந்த மற்றொரு இளைஞனின் ஜாதகம் மூலம் விளக்கினேன். அந்த ஜாதகமே, இது போன்ற கேள்விகளைச் சுமந்துகொண்டிருக்கும் பலருக்கும் பயன்படட்டும் என்ற நோக்கில் இன்றைய பதிவாக வருகிறது.

ராணுவப் யோகத்திற்கான உதாரண ஜாதகம்:
இது ரிஷப லக்னத்தைச் சேர்ந்த, 25 வயதே ஆன ஓர் இளைஞனின் ஜாதகம். வேலை வாய்ப்புகளை ஆராய 2, 6, 10 ஆகிய பாவகங்களையும், அதனோடு தொடர்புடைய கிரகங்களையும் ஆராய்வது முக்கியம். இவை ஒருவருக்கு வருமானம் வரும் வழியைச் சுட்டிக்காட்டும். இவற்றுடன் ஜீவன காரகரான சனியின் நிலையையும் ஆராய வேண்டும்.
மேற்கண்ட ஜாதகத்தில் லக்னாதிபதியும் 6-ஆம் அதிபதியுமான சுக்கிரன், 11-ஆம் இடமான மீனத்தில், 2-ஆம் அதிபதி புதனுடன் இணைந்து, 8-ல் மறைந்த 7, 12-ஆம் அதிபதியான செவ்வாயின் பார்வையைப் பெறுகிறார். கால புருஷ தத்துவப்படி பண வரவைக் குறிக்கும் 2-ஆம் இடமான ரிஷபத்தில், பணத்தைக் குறிப்பிடும் குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனை மூலம் தொடர்பு கொள்கிறார்கள். இதனால் ஜாதகர் சுக்கிர தசையில், கணக்கன் என்று அழைக்கப்படும் புதனின் புக்தியில் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் (B.Com) படித்தார். ஜாதகத்தில் 5-ஆவது பாவகம் இளங்கலை பட்டத்தைக் குறிப்பிடும் என்பதால், 5-ஆம் இடத்தைப் பார்க்கும் சுக்கிர தசையில், 5-ஆம் அதிபதி புதன் புக்தியில் இவர் வணிகவியல் படித்தார்.
சுக்கிர தசையை அடுத்து வந்த, லக்ன விரய ஸ்தானத்தில் (12-ல்) நிற்கும் சூரிய தசையில் ஜாதகரால் உயர் கல்வியைத் தொடர முடியவில்லை. ஆனால், செவ்வாயின் வீட்டில் நின்ற சூரிய தசை தொடங்கியதும், இவர் இளங்கலை கல்வியை முடித்த கையோடு ராணுவப் பணிக்குச் சென்றுவிட்டார். அதற்கான அமைப்பு என்ன என்பதை, அதற்குரிய வர்க்கச் சக்கரமான தசாம்சத்தில் (D-10) ஆராய்வோம் வாருங்கள்!
தசாம்சச் சக்கர ஆய்வு (D-10 Chart Analysis):

தசாம்சத்தில் மீன லக்னத்திற்கு 6-ஆம் அதிபதியான சூரியன், 2-ஆம் இடமான மேஷத்தில் (உச்சம் பெற்று) சந்திரனுடன் நிற்கிறார். இதன் பொருள், ஜாதகருக்கு சூரிய தசை தொடங்கியதும் அரசாங்கப் பணி கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது. சூரியனுடன் சந்திரன் நிற்பதால், கிடைக்கும் பணி விரைவாகவும், சந்திரனின் காரகத்துவங்களோடு தொடர்புடையதாகவும் அமையும் என்பதைக் குறிக்கிறது.
இந்த வர்க்கத்தில் செவ்வாய் 10-ஆம் இடத்தில் திக்பலம் பெற்று, 10-ஆம் அதிபதி குருவால் மிதுனத்தில் இருந்து பார்க்கப்படுகிறார். இதிலிருந்து இவர் செவ்வாய் குறிக்கும் பாதுகாப்புத் துறையோடு தொடர்புடைய பணியில் ஈடுபடுவார் என்பது புரிகிறது.
ஜீவனாதிபதியான சனி 12-ஆம் இடத்தில் குருவின் சாரமான பூரட்டாதியில் ஆட்சி பெற்று, குருவால் பார்க்கப்படுகிறார். இந்த அமைப்பு இவர் கப்பல் படைக்குத் (Navy) தேர்ந்தெடுக்கப்படக் காரணமானது. லக்னம் நீர் ராசியாகி, 12-ஆம் இடத்துச் சனியோடு நீர் கிரகமான குருவின் தொடர்பு ஏற்படுவதால், இவர் இந்திய கப்பல் படைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், சனி பகவான் செவ்வாயின் இரு வீடுகளையும் பார்ப்பதால், ஜாதகர் சீருடைப் பணி புரிவார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
காரணமின்றி யாரும் ஒரு பணியில் அமர்ந்துவிட இயலாது. அதற்கு அவர்களது ஜாதகக் கர்மாவும், கொடுப்பினையும் அனுமதிக்க வேண்டும் என்பதை இதன் மூலம் அறியலாம்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துகளுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்
கைபேசி: +91 8300124501










