
90-களின் இறுதிக்கட்டம் வரை நடுத்தர வர்க்கத்தினரின் எட்டாக்கனவாகவும், வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாகவும் இருந்தது ‘அரசு வேலை’ மட்டுமே. ஒரு அரசு உத்தியோகம் கிடைத்துவிட்டால், வாழ்நாள் முழுமைக்குமான பாதுகாப்பு கிடைத்துவிட்டதாகவே சமூகம் கருதியது. ஆனால், காலச்சக்கரம் சுழலச் சுழல, கணினி மற்றும் மென்பொருள் துறையின் அசுர வளர்ச்சி அந்தப் பிம்பத்தை மெல்ல உடைத்தெறிந்தது.
இன்று, அரசு வேலையை விடப் பல மடங்கு வருமானமும், உலகளாவிய அங்கீகாரமும் ஐ.டி துறையில் சாத்தியம் என்ற நிலை உருவாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, மென்பொருள் துறையில் ஒருவரின் தனிப்பட்ட திறமைக்கு மட்டுமே முழுமையான முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
திறமையா? சிபாரிசா?
தனியார் மென்பொருள் நிறுவனங்களில் சாதி, மதம், அரசியல் கட்சி அனுதாபம், லஞ்சம் போன்ற எந்தப் பாகுபாடுகளுக்கும் இடமில்லை. ஆனால், அரசுப் பணிகளில் நிலைமை இன்றும் தலைகீழாகவே தொடர்கிறது. பெயரளவுக்குச் சீர்திருத்தங்களும், வெளிப்படைத்தன்மையும் கொண்டுவரப்படுகிறதே தவிர, ஊழலையும் சிபாரிசுகளையும் இன்னும் முழுமையாக வேரறுக்க முடியவில்லை என்பதே மறுக்க முடியாத நிதர்சனம்.
இந்தச் சூழலில் எழும் சில அடிப்படை கேள்விகள்:
- திறமையை விடப் பின்புலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?
- நேர்மையாகப் பணியாற்றுபவர்களுக்கான பணிப்பாதுகாப்பு எங்கே செல்கிறது?
- பல ஆண்டுகளாகப் பணியாற்றுபவர்களின் வாழ்வாதாரம் திடீரெனக் கேள்விக்குறியானால் அவர்களின் மனநிலை என்னவாகும்?
வேலையைத் தக்கவைக்கப் போராடும் ஆசிரியை
இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான மற்றும் பதற்றமான சூழலில்தான், அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மிகுந்த மன உளைச்சலுடன் என்னைத் தொடர்புகொண்டார். பல ஆண்டுகளாகத் தன் பணியைச் செவ்வனே செய்து வரும் அவர், தற்போது திடீரெனத் தன் வேலையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அரசு அறிவித்துள்ள தகுதித் தேர்வை எழுதியிருக்கும் அவர், “இந்தத் தேர்வில் நான் தேர்ச்சி பெறுவேனா? என் வேலை தப்புமா? அல்லது இத்தனை கால உழைப்பும் வீணாகிவிடுமா?” என்ற மிகப்பெரிய கேள்வியோடும், தன் எதிர்காலம் குறித்த பயத்தோடும் வந்திருந்தார். ஒருவருடைய வாழ்வாதாரமே ஊசலாடும் போது ஏற்படும் வலி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
கிரகங்கள் காட்டும் பாதை என்ன?
ஒருவருடைய ஜீவன ஸ்தானமான பத்தாம் இடமும், உத்தியோகத்தைக் குறிக்கும் கிரகங்களும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகின்றன? தற்போதைய தசாபுத்தியும், கோச்சாரமும் அவர் சந்திக்கப்போகும் சவால்களைத் தாண்டி அவருக்குச் சாதகமாகச் செயல்படுமா?
இந்தச் சிக்கலான சூழலில் அவருக்கு ஜாதக ரீதியாக நான் ஆராய்ந்து அளித்த விரிவான பலன்களும், இந்தத் தகுதித் தேர்வில் அவர் சந்திக்கப்போகும் முடிவுகளும் இனி தொடரும் பதிவில் விரிகிறது…
கீழே நீங்கள் காண்பது ஆசிரியையின் ஜாதகம்.

சிம்ம லக்னம் பொதுவாகவே அரசாங்கத்துடன் தொடர்புடையது. இந்த லக்ன ஜாதகர்களுக்கு இயல்பாகவே நிர்வாகத்திறன், அரசு காரியங்களுடன் தொடர்பு ஏற்படும். லக்னமும், ராசியும் 6/8 ஆக அமைந்துள்ளது போராட்டமான வாழ்வைத் தரும். லக்னாதிபதி சூரியனும், ராசியாதிபதி சனியும் பகைவர்கள் என்பதுடன், இவர்கள் ஒன்றாக இணைந்ததும் இவர்களது காரக விஷயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் அமைப்பாகும்.
அரசாங்கத்தைக் குறிக்கும் சூரியன், வேலையைக் குறிப்பிடும் 6-ஆம் அதிபதியும், ஜீவன காரகருமான சனியுடன் இணைவு பெற்றுள்ளது, ஜாதகிக்கு அரசு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் அமைப்பாகும். ஜாதகத்தில் சூரியன் நீசமாகி, உடன் இணைந்த உச்ச சனியால் வலுப்பெறுகிறார். நீதிமன்றத்தைக் குறிக்கும் துலாம் ராசியில் இவர்களது இணைவு, அரசுப்பணியில் ஏற்படும் பாதிப்பிற்காக ஜாதகி நீதிமன்றம் செல்வது தவிர்க்க இயலாத நிலையை ஏற்படுத்தும்.
ஜாதகத்தில் 2-ஆம் இடத்து செவ்வாயும், 4-ஆம் இடத்து புதனும் பரிவர்த்தனை ஆகியுள்ளனர். இதனால் 4-ஆம் இடம் குறிப்பிடும் உடல் ரீதியான பாதிப்பிற்கான வெகுமதியாக 2-ஆம் இடக் காரகம் செயல்படும். ஜாதகி போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. பரிவர்த்தனைக்குப் பிறகு 2-ஆம் அதிபதி புதன், தன ஸ்தானத்தில் வந்து உச்சமடைகிறார். இதனால் அங்கு நீசமாகியுள்ள 3, 10-ஆம் அதிபதியான சுக்கிரன் நீசபங்கம் அடைகிறார். வித்யாகாரகர் புதன், 10-ஆம் அதிபதி சுக்கிரனுடன் 2-ல் இணைவதால் ஜாதகிக்குக் கல்வித்துறையில் ஆசிரியை பணி கிடைத்துள்ளது.
அதே சமயம் உடலின் கட்டமைப்பைக் குறிப்பிடும் 4-ஆம் இடத்திற்குச் செல்லும் 4, 9-ஆம் அதிபதியான செவ்வாய் அங்கு கேதுவுடன் இணைவதால் உடலமைப்பு குறைபடுகிறது. லக்னாதிபதி சூரியன் நீசமாகி, கால்களைக் குறிக்கும் சனியோடு இணைவதால் ஜாதகி நடக்க இயலாத போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவார்.
இந்த ஜாதகிதான் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் ஆசிரியை வெற்றி பெற்று தனது பணியைத் தக்கவைத்துக் கொள்வாரா? என்பதை அதற்குரிய வர்க்கச் சக்கரமான தசாம்சத்தில் விரிவாகக் காண்போம் வாருங்கள்.
தசாம்சச் சக்கரப் பகுப்பாய்வு

தசாம்சத்தில் விருச்சிக லக்னாதிபதி செவ்வாய் 7-ல் நின்று தனது வீட்டை நேர் பார்வையில் வைத்துள்ளார். செவ்வாய் 10-ஆம் இடமான சிம்ம ராசியை 4-ஆம் பார்வையாகவும், 2-ஆம் இடமான தனுசை 8-ஆம் பார்வையாகவும் பார்க்கிறார். இதனால் ஜாதகிக்கு சிம்ம ராசி குறிப்பிடும் அரசு வேலையும், தனுசு ராசி குறிப்பிடும் ஆசிரியை வேலையும் கிடைத்துள்ளது.
10-ஆம் அதிபதி சூரியன் 2-ஆம் இடத்தைப் பார்ப்பது வருமானம் அரசு வகையில் ஏற்படும் என்பதைக் குறிப்பிட்டாலும், 8-ஆம் இடத்திலிருந்து சூரியன் பார்ப்பதால் அதில் ஒரு குறைபாடு இருப்பது தவிர்க்க இயலாதது. 2-ஆம் இடத்தைச் சூரியன், செவ்வாயுடன் குருவுடனான பரிவர்த்தனைக்கு முன் சனியும் பார்ப்பதைக் கவனிக்க. இதனால் வருமானத்தில் சனி குறிப்பிடும் தடை தாமதங்களும், 8-ஆம் இடத்து சூரியன் குறிப்பிடும் அரசு வகை அவமானங்களும் இருக்கும். சனி 2-ஆம் இடத்தைப் பார்ப்பது அவமானங்களுடன் கூடிய வருமானத்தையும் குறிப்பிடும். ஆனால், செவ்வாய் 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் வருமானத் தடை நீங்கும்.
ஜீவன ஸ்தானமான 10-ஆம் இடத்தில் ராகு அமைந்துள்ளது, 10-ஆம் அதிபதி 8-ல் மறைந்தது ஜாதகி பணியில் வழக்கு வகை பாதிப்புகளை எதிர்கொள்வார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
தற்போதைய தசா புத்தியும் இறுதி முடிவும்
தற்போது ஜாதகியின் கேள்விக்கு வருவோம். ஜாதகி தற்போது குரு தசையில் உள்ளார். தசாம்ச குரு 4-ஆம் இடத்திலிருந்து 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். குரு இங்கு ராகு-கேதுவுடன் தொடர்பாகி தசை நடத்துவதால் வழக்கை எதிர்கொள்வார். பாக்கியாதிபதி சந்திரனின் புக்தி நடப்பில் உள்ளது. இதனால் தனது பாக்கியமான அரசுப்பணியைத் தக்கவைத்துக்கொள்ளத் தேர்வு எழுதியுள்ளார்.
குரு இங்கு சனியோடு பரிவர்த்தனையாவதைக் கவனிக்க. 5-ஆம் இடம் வழக்கு வெற்றியைக் குறிப்பிடும் பாவகமாகும். இதனால் சனியுடன் பரிவர்த்தனையாகி மீனம் செல்லும் குரு வழக்கை ஏற்படுத்தி அதில் வெற்றியையும் தருவார். மீன குரு லக்னத்தை தனது விசேஷமான 9-ஆம் பார்வையால் பார்ப்பதால், வழக்கால் ஜாதகிக்கு வெற்றி உறுதியாகி தனது வேலையைத் தக்கவைத்துக்கொள்வார்.
தற்போது இதுபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதியுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குழுவாக இணைந்து, இந்தத் தேர்வு சட்ட விரோதம் என்று அறிவித்து முடிவுகளை வெளியிடக் கூடாது என்று வழக்கு தொடுத்துள்ளனர். ஜாதக அமைப்பு ஜாதகிக்கு வேலையைத் தக்கவைத்துக்கொள்ளச் சாதகமாகவே உள்ளது.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501










