
வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியாவின் பங்குச்சந்தை, இன்று அனைவரையும் ஈர்க்கும் ஒரு காந்தமாக மாறியுள்ளது. உள்ளங்கையில் உலகத்தைச் சுருக்கும் எளிய ஸ்மார்ட்போன் செயலிகளும், டிஜிட்டல் கட்டமைப்புகளும் பங்கு வர்த்தகத்தைச் சாமானியர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்துவிட்டன. இதனால், தினசரி செய்திகளைப் பார்த்துவிட்டு ஆர்வத்துடன் சந்தையில் நுழைவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஆனால், தகவல் தொழில்நுட்பம் கொட்டிக் கொடுக்கும் செய்திகளை மட்டுமே வைத்துக்கொண்டு, எந்தப் பங்கு எகிறும், எது சரியும் என்பதைத் துல்லியமாகக் கணித்துவிட முடியுமா? இதுதான் இன்றைய முதலீட்டாளர்களுக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால்!
பொறுமையே லாபத்தின் திறவுகோல்
இன்றைய புதிய முதலீட்டாளர்களில் பலரும் நினைப்பது, “சந்தையில் பணத்தைப் போட்டால் மாதாமாதம் ஒரு நிலையான வருமானத்தை எடுத்துவிடலாம்” என்பதுதான். ஆனால், தற்போதைய ஏற்ற இறக்கம் மிகுந்த உலகப் பொருளாதாரச் சூழலில் இது அவ்வளவு எளிதல்ல. பங்குச்சந்தை முதலீடு என்பது ஒரு விவசாயி தன் பயிரை வளர்ப்பது போன்றது:
- சரியான தேர்வு: தரமான பங்குகளை ஆராய்ந்து விதையாக விதைப்பது.
- கூர்மையான கவனிப்பு: சந்தையின் பருவநிலைக்கு ஏற்பத் தேவைப்படும் போது மட்டும் முதலீட்டை மாற்றியமைப்பது.
- நீண்டகாலப் பொறுமை: சந்தையின் தற்காலிக வீழ்ச்சிகளைக் கண்டு அஞ்சாமல், மரம் வளரும் வரை காத்திருப்பது.
இந்தத் தெளிவான திட்டமிடலும் பொறுமையும் இருந்தால் மட்டுமே நீண்டகால அடிப்படையில் பெரும் லாபத்தை அறுவடை செய்ய முடியும்.
பங்குச்சந்தையும் ஜோதிடத்தின் பரிணாம வளர்ச்சியும்
“பொருளாதாரத்திற்கும் ஜோதிடத்திற்கும் என்ன சம்பந்தம்?” என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஒரு முதலீட்டாளரின் வெற்றியைத் தீர்மானிப்பது சந்தை நிலவரம் மட்டுமல்ல; அவருடைய மனநிலையும் (Mindset), அவரை இயக்கும் ஜாதக அமைப்புமே ஆகும்.
- ஒருவருக்கு எந்த மாதிரியான முதலீடு கைகொடுக்கும்?
- சந்தை சரியும்போது பயந்து விற்கத் தோன்றுமா அல்லது புதிய வாய்ப்பாகக் கருதி வாங்கத் தோன்றுமா?
- தினசரி வர்த்தகம் (Intraday) செட் ஆகுமா அல்லது நீண்டகால முதலீடு (Long-term) லாபம் தருமா?
இவற்றையெல்லாம் ஒருவரின் ஜாதகக் கட்டங்கள் தெள்ளத்தெளிவாகக் காட்டிவிடும். வேலை, திருமணம், ஆரோக்கியம் என்று மட்டுமே பயணித்துக் கொண்டிருந்த பாரம்பரிய ஜோதிடம் இன்று திசை மாறுகிறதா என்றால், ‘காலம் அனைத்தையும் மாற்றியமைக்கிறது’ என்பதே நிதர்சனம். காலத்தின் தேவைக்கேற்ப ஜோதிடமும் இன்று ஒரு சிறந்த பொருளாதார வழிகாட்டியாக உருமாறியுள்ளது.
பங்கு வர்த்தகத்தைத் தீர்மானிக்கும் கிரகங்களும் பாவகங்களும்
ஜோதிட பாவக அடிப்படையில் அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் 5-ஆம் இடமும், உடல் உழைப்பற்ற அதிர்ஷ்ட வருவாயைக் குறிக்கும் 8-ஆம் இடமும் பங்குச்சந்தைக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
- சுக்கிரன்: சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையையும், நிதி மேலாண்மையையும் குறிக்கும் கிரகம்.
- புதன்: பங்கு வணிகத்தைத் தரவுகள் (Data) மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் இயக்கும் கிரகம்.
- ரிஷபம் & மிதுனம்: பங்கு வணிகத்தை ஆளுமை செய்யும் ராசிகள்.
ஒரு ஆண் ஜாதகரின் உதாரணத்தைக் கொண்டு இதை விளக்குகிறேன்.

மேற்கண்ட ஜாதகத்தில் தனுசு லக்னத்திற்கு 5-ஆம் இடமான மேஷத்தில், கனவுகளின் காரகரான சூரியன், பங்கு வணிகத்தின் காரக கிரகங்களுள் ஒன்றான புதனுடன் இணைந்து ‘புதாதித்ய யோகம்’ பெற்றுள்ளார். இது ஜாதகர் பங்கு வணிகத்தில் தனமீட்ட பெரும் கனவுகளுடன் உள்ளதைக் குறிக்கிறது. சுக்கிரன் உச்சமாகி, 10-ஆம் இடத்தில் இருக்கும் குருவால் பார்க்கப்படுவது ஜாதகரின் பொருளாதார ஆசைகள் பெரியது என்பதை வெளிப்படுத்துகிறது.
தசாநாதரான குரு தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்தில் வக்கிரமாகியுள்ளார். இதனால் தொழிலில் இவர் உறுதியற்ற நிலையிலேயே செயல்படுவார். குரு, 8-ஆம் அதிபதியான சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்தில் நிற்கிறார். சந்திரன் தனது மூலத்திரிகோண வீட்டில் வலுவாக நிற்கும் சனியுடன், 8-க்கு 8-ஆம் இடமான கும்பத்தில் இணைந்துள்ளார். இதனால் ஜாதகர் பங்கு வணிகத்தில் ஈடுபடுவார் என்பது உறுதியாகிறது.
ஆனால், தனகாரகரான குரு வக்கிரமாகியுள்ளதால், குரு காரக வழியில் வருத்தங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. பொருளாதார வகையில் அதீத யோகங்களோ அல்லது அதீத சிரமங்களோ எது ஏற்பட்டாலும், அதுவும் இவருக்குக் குரு வக்கிரமாகும் காலங்களில்தான் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னாதிபதி/தனகாரகர் குரு 10-ஆம் இடத்தில் வக்கிரமானதால், தொழில் விஷயங்களில் ஜாதகர் உறுதியற்ற நிலைப்பாடு உடையவராக இருப்பார். ஆனால், 4-ஆம் இடத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன், 10-ஆம் இடத்தில் உள்ள வக்கிர குருவைப் பார்ப்பதால், ஜாதகரின் தொழில் சிரமங்களை மனைவி ஏற்றுக்கொள்வார். மனைவி ஜாதகரின் தொழில் நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றுவார். எனினும், வக்கிர குரு பொருளாதார விஷயங்களில் ஜாதகரைத் தன்னிச்சையாகத்தான் முடிவெடுக்க வைக்கும்.
தசாநாதரான குருவைச் சுக்கிரன் பார்ப்பதால், கோசாரத்தில் குருவும் சுக்கிரனும் தொடர்புகொள்ளும்போது முதலீடுகளில் நல்ல லாபம் பார்க்கலாம். அதுவும் குரு வக்கிரக் காலமாக இருக்க வேண்டும். பார்வை, சேர்க்கை, நட்சத்திரத் தொடர்பு என்ற வகையில் இத்தொடர்பு அமையலாம்.
திருமணத்திற்குப் பின் மலர்ந்த வர்த்தக யோகம்
ஜாதகருக்குக் குரு தசை 2014-இல் தொடங்கியபோது, கோசார குரு மிதுனத்திலிருந்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் சிம்மத்தில் (ராசிக்கு 7-ஆம் இடத்தில்) வந்தபோது, ஜாதகருக்கு 2016-இல் திருமணம் நடைபெற்றது.

ஆசையின் காரக கிரகம் சுக்கிரன் என்பதால், சுக்கிரனின் காரக உறவான மனைவி வந்ததும், நண்பர் அறிமுகத்தில் பங்கு வணிகத்தில் எவ்வித முன் அனுபவமும் இன்றி ‘Trading’ செய்யத் தொடங்கினார். முதலீட்டுத் தொகை இரண்டு வாரங்களில் 10-இல் ஒரு பகுதியாகக் குறைந்ததும், மீதமிருந்த தொகையை வைத்து வர்த்தகம் செய்தார். இம்முறை ஒரே நாளில் 20 மடங்கு லாபம் பார்த்தார்!
வக்கிரமான தனகாரகர் குருவுடன் கோசாரத்தில் இணைந்த பிரம்மாண்ட கிரகமான ராகு, பொருளாதார வகையில் பல மடங்கு லாபம் கிடைக்க உதவியுள்ளார். ஜனன காலத்திலேயே குரு-சுக்கிர தொடர்பு உள்ள நிலையில், கோசார குரு சிம்மத்தில் சுக்கிரனின் பூர நட்சத்திரத்தில் வந்து வக்கிரமானதால், ஜனன சுக்கிரனின் வலுவைப் பெற்ற கோசார குரு, ஜனன காலத்தைப் போலவே வக்கிரமான காலத்தில் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளார்.
Option Buying vs Option Selling: ஜோதிட ரீதியான ரகசியம்
ஏழரை சனியில் பல சிரமங்களைச் சந்தித்தாலும், தற்போதும் ஜாதகர் Trading-இல் ஈடுபட்டுக்கொண்டுதான் உள்ளார். முன்பு ‘Buying’ செய்தவர், தற்போது ‘Selling’ செய்கிறார். Selling-இல் தான் ஓரளவு கட்டுப்பாட்டுடன் லாபம் பார்க்க முடிவதாகக் கூறுகிறார்.
Buying மற்றும் Selling இரண்டிற்கும் ஜோதிட ரீதியான காரணம் என்னவென்று காண்போம்:
- 2-ஆம் இடம்: பொருளை வாங்குவதைக் குறிக்கும் பாவகம்.
- 4-ஆம் இடம்: வாங்கியதை நிலையாக வைத்துப் பாதுகாப்பதைக் குறிக்கும் பாவகம்.
- 3-ஆம் இடம்: வாங்கியதை விற்பதைக் குறிக்கும் பாவகம் (4-ஆம் இடத்திற்கு விரைய பாவகம்).
இந்த ஜாதகத்தில் சுக்கிரன் 4-ஆம் இடத்தில் உச்சமானாலும், அவர் பாதகாதிபதியும் அஸ்தங்கமும் ஆன புதனின் ரேவதி நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். இதனால் இவரால் வாங்கியதை நீண்டகாலம் தக்கவைத்து பெரிய அளவில் லாபம் பார்க்க முடியாது. 2-ஆம் அதிபதி சனி ஆட்சி பெற்றாலும், அவர் 3-ஆம் இடத்தில்தான் அமைந்துள்ளார். இதனால் இவர் வாங்கியதன் மூலம் தக்கவைத்து பெரும் லாபத்தைவிட (Option Buying), வாங்கியதை உடனுக்குடன் விற்றால்தான் (Option Selling) நல்ல லாபம் பார்க்க முடியும்.
மேலும், ஜீவன காரகர் சனி 8-ஆம் அதிபதியுடன் இணைந்துள்ளது ஜாதகரைப் பங்கு வணிகத்தில் ஈடுபடுத்துகிறது. அத்துடன், சனி-சந்திர இணைவு வாங்கியதை குறுகிய காலத்தில் விற்கும் Option Buying-ஐ விட, சற்று காலம் தாழ்த்தி விற்கும் Option Selling-கிற்கே சாதகமாக உள்ளது. இதனால்தான் இவர் Option Selling முறைக்கு மாறியுள்ளார். குறிப்பாக அதில் Positional Trading இவருக்கு கைகொடுக்கிறது.
பங்குச்சந்தையில் ஏன் அனைவராலும் லாபம் பார்க்க முடியவில்லை?
சாமானியர்களைக் குறிக்கும் சனி மெதுவாகச் சுழலும் கிரக என்பதால், பங்கு வணிகத்தில் சாமானியர்கள் விரைவாக லாபம் பார்க்க முடியாது. அதற்கு ‘பஞ்ச மகா புருஷ யோகங்களும்’, ‘திக்பலம்’ பெற்ற கிரக அமைப்பும் இருக்க வேண்டும். மேற்கண்ட ஜாதகத்தில் 4-ஆம் இடத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன், ஜாதகருக்குப் பஞ்ச மகா புருஷ யோகங்களுள் ஒன்றான ‘மாளவிய யோகத்துடன்’ திக்பல வலிமையையும் பெறுகிறார். இதனால்தான் மனைவி வந்ததும் ஜாதகருக்குப் பங்கு வணிக லாபங்கள் கூடின. மேற்சொன்ன யோக பலமற்ற சனியின் அம்சமான சாமான்யர்கள் நீண்ட கால அடிப்படையில் மட்டுமே நிதானமாக நல்ல பொருளாதார வளர்ச்சியை பெற முடியும்.
ஜாதக அமைப்பிற்கு ஏற்ப லாபமளிக்கும் பங்குச்சந்தை முதலீடுகளை அறிந்துகொள்ள விரும்புவோர் என்னைத் தொடர்புகொள்ளலாம்.
மீண்டும் உங்களை மற்றுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்
கைபேசி: +91 8300124501










