
அன்னை சாரதா தேவியுடன் நிவேதிதா தேவி.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி”
என்று மகாகவி பாரதி அன்று முழங்கியது இன்று நினைவாகிவிட்டது. ஆணுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இன்று கோலோச்சுகிறார்கள். 75 ஆவது சுதந்திர தின ராணுவ அணி வகுப்பில் பெண்கள் படையின் சாகசங்களை காண்கையில் அந்த மகாகவியின் கனவு நினைவானது கண்டு நெஞ்சம் நெகிழ்கிறது. கற்ற ஒரு பெண் இந்த உலகிற்கே ஒளிவிளக்காக திகழ்வாள். ஏன் பாரதிக்கே கல்கத்தாவில் சகோதரி நிவேதிதா தேவியே பெண்களின் முன்னேற்றம் தேசத்திற்கு எவ்வளவு முக்கியம் என்று உரைத்த பின்பே உறைத்தது என்பர். ஒருவர் பல்துறை வித்தகராக விளங்க ஜாதகத்தில் புத-ஆதித்ய யோகம், சரஸ்வதி யோகம், பாரதி யோகம், விஷ்ணு லக்ஷ்மி யோகம் போன்ற யோகங்கள் முக்கியமானவை. மாறுபட்ட பல்வேறு துறைகளில் ஒரு ஜாதகருக்கு அறிவுத் திறமையை ஏற்படுத்தும் யோகங்கள் இவை. இது பற்றி ஒரு பெண்ணின் ஜாதகம் மூலம் ஆராய்வதே இன்றைய பதிவு.

இந்த ஜாதகம் ஒரு பெண்ணுடையது. ஜாதகத்தில் லக்னாதிபதி புதன், சுக்கிரனுடன் பாக்ய ஸ்தானத்தில் இணைந்து விஷ்ணு-லக்ஷ்மி யோகம் ஏற்படுகிறது. 10 ல் திக்பலம் பெற்ற சூரியன் நேர் பார்வையாக வித்யா ஸ்தானம் 4 ஐ பார்ப்பது சிறப்பு. 11 ல் உள்ள மூன்று கிரகங்களும் நன்மை செய்யும் அமைப்பில் உள்ளன. பாக்யாதிபதி சனி 11 ல் நீசம் பெற்றாலும் நவாம்சத்தில் உச்சமாகி நீசபங்கமடைகிறார். 8 ஆமிடத்தோடு ராகு-கேதுக்கள் தொடர்பாவது ஆய்வுக் கல்விக்கு சிறப்பாகும். விஷ்ணு லக்ஷ்மி யோகமானது ஜாதகத்தில் ராகு-கேதுக்கள் உள்ளிட்ட இதர கிரகங்கள் தரும் தோஷத்தை செயல்படாது தடுத்துவிடும் யோகமாகும்.
2,5,11 க்குடையவர்கள் நவாம்சத்தில் நவாம்ச லக்னாதிபதி தொடர்பில் அமைந்து, நவாம்ச லக்னம், லக்னாதிபதி வலுவடைவது பாரதி யோகமாகும். ராசியின் 5 ஆவது இடத்தில் நவாம்ச லக்னம் அமைந்து, அங்கு ராசியின் பாக்யாதிபதி சனி உச்சம் பெற்றுள்ளார். நவாம்ச லக்னாதிபதி சுக்கிரனும் உச்சம். உச்ச சுக்கிரன் வீட்டில் செவ்வாய் அமைந்ததால் பாதிப்பில்லை. மனோ காரகரும் கால புருஷ வித்யா ஸ்தானம் கடகத்தின் அதிபதியுமான சந்திரனுக்கு ராசியிலும் நவாம்சத்திலும் குரு பார்வை ஏற்படுவது மிகச் சிறப்பு. இவை ஜாதகத்தில் உள்ள பாரதி யோகத்தை சிறப்பாக செயல்பட வைக்கும்.
ராசியில் சுபர்களான குரு, சுக்கிரன் புதன் ஆகியோர் கேந்திர, கோணங்களிலும் நட்பு வீட்டில் ஆட்சி, உச்ச கிரகங்களுடன் நல்ல நிலைபெற்று அமைந்திருப்பது சரஸ்வதி யோகமாகும். இது ஒரு மிகச் சிறந்த யோகமாகும். ஒரு ஜாதகரை பல்துறை வித்தகராக, பெரும் புகழுடன் கௌரவமும், மதிப்புமாக வாழ வைக்கும் அமைப்பாகும். இந்த ஜாதகத்தில் சரஸ்வதி யோகமும் உள்ளது. கவனிக்க, ஒரு ஜாதகத்தில் பல யோகங்கள் இருந்தாலும் கல்வி, கலைகளுடன் கூடிய ஒரு சில யோகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு இங்கு ஆராய்கிறோம்.

ஒரு ஜாதகருக்கு சிறப்பு சேர்க்கும் கல்வி, கலைகள், வித்தைகளை சதுர்விம்சாம்சம் மூலம் ஆராய்ந்து அறியலாம். கல்வி விஷயங்கள் ஒருவருக்கு சிறப்பாக அமைய வேண்டுமானால் அவர் ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசி வித்யா காரகர் புதனுடன் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும். சதுர்விசாம்ச லக்னம் புதன் உச்சமாகும் கன்னியாகும். லக்னத்திற்கு 9 ல் புதன் நட்பு பெற்று சிறப்பாக அமைந்துள்ளார். 2 ஆமிடம் ஒருவர் கல்வி கற்க அவரது குடும்ப பொருளாதாரம் எப்படி ஒத்துழைக்கும் என்பதை காட்டும். இங்கு 2 ஆமிடமான துலாத்தில் சுக்கிரன் தனது மூலத் திரிகோண வீட்டில் ஆட்சி பெற்று அமைந்திருப்பது மிகச் சிறந்த அமைப்பு. வித்யா ஸ்தானமான 4 ஆமிடத்தில் பாவிகள் சனி, ராகு-கேதுக்கள் அமைவது சிறப்பே ஆகும். கால புருஷ 9 ஆமிடமான தனுசில் அமைந்த இவர்களை 10 ஆமிட குரு பார்ப்பது சிறந்த பலன்களை வழங்கும். 12 ஆமதிபதியான பாவர் சூரியன் 6 ல் நிற்பது நன்மையான அமைப்பே. ஆனால் 12 ல் லாபாதிபதியும் பயண காரகருமான சந்திரன் அமைந்தது, இவர் தான் கற்கும் கல்வி மற்றும் வித்தைகளுக்காக மேற்கொள்ளும் பயணங்களை குறிக்கிறது. கல்விக்காக ஜாதகர் செய்யும் செலவுகளையும், கல்விக்கான வெளிநாட்டு தொடர்புகளையும் 12 ஆமிட சந்திரன் இங்கு குறிப்பிடுவார். சிந்தனை ஸ்தானமான 5 ஆமிடத்தில் வைராக்ய காரகரும், ஆய்வு ஸ்தானமான 8 ஆமிடாதிபதி செவ்வாய் உச்சம் பெற்று அமைந்திருப்பது கற்கும் கல்வியில் ஜாதகி காட்டும் ஆய்வு நுட்பத்தையும், பிடிவாதமான மன நிலையையும் குறிப்பிடுகிறது.
சதுர்விம்சாம்சத்தில் அதிக வலுப்பெற்ற கிரகம் கல்வி விஷயத்தில் ஒருவரை வழிநடத்தும். இங்கு செவ்வாய் உச்சம் என்பதால் ஜாதகி கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலையில் செவ்வாய் குறிப்பிடும் இயற்பியல் படித்தார். கேது சுக்கிரன் தொடர்பும் இயற்பியலை குறிப்பிடும். வித்யா ஸ்தானமான 4 ல் நிற்கும் கேது சுக்கிரனின் பூராடத்தில் நிற்பதுவும் ஜாதகி இயற்பியலை ஏற்றுக்கொள்ள முக்கிய காரணம். கல்லூரிக் காலத்தில் ஜாதகி குரு தசையில் இருந்தார். இதனால் இவர் முதுகலை இயற்பியலில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கமும் பெற்றார். தங்கம் குருவின் காரகத்தில் வருவது குறிப்பிடத்தக்கது என்பதுடன் ராசியில் குருவுடன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் இணைந்துள்ளதாலும் ஜாதகி சிறப்பாக தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார். 5 ல் உச்சம் பெற்றமைந்து 8 ஆமிடமான மேஷத்தை 4 ஆம் பார்வையாக பார்க்கும் செவ்வாய், லாப ஸ்தானமான 11 ஆமிடதையும் நேர் பார்வை பார்க்கிறார். இதனால் சனி தசையில் தற்போது தனது ஆய்வுக் கல்வியை (PhD) ஜாதகி தொடர்ந்துகொண்டுள்ளார். சனி வீட்டில் உச்சம் பெற்ற செவ்வாயால் தசாநாதர் சனியும் வலுவடைவார் என்பது குறிப்பிடத்தக்கது.
2 ல் ராகு-கேதுக்கள் அமைந்தால் ஒருவர் தாய் மொழியுடன் பிற மொழிகளையும் எளிதாக கற்றுக்கொள்வார். ராசிக்கட்டத்தில் 2 ல் ராகு அமைந்து, 2 ஆமதிபதி சந்திரன் ராகுவின் சுவாதியில் அமைந்து, லக்னாதிபதி புதன் கும்பத்தில் ராகுவின் சதயத்தில் அமைந்ததாலும், சதுர் விம்சாம்சத்தில் 2 ல் ஆட்சி பெற்ற சுக்கிரன் ராகுவின் சுவாதியில் அமைந்துள்ளதாலும் ஜாதகிக்கு 5 மொழிகள் தெரியும்.
கலைகளில் இசைக் கலையும் மனித வாழ்வில் முக்கியமான ஒன்று. பொதுவாக இசை, நாட்டியம், நடனம் ஆகிய கலைகளுக்கு புதனும் சுக்கிரனும் காரக கிரகங்களாகும். 3 ஆமிடம் இசையை குறிப்பிடும் பாவகமாகும். சதுர் விம்சாம்சத்தில் 9 ல் அமைந்த புதன் 3 ஆமிடத்தை பார்க்க, 2 ல் மூலத்திரிகோண வலுவுடன் ஆட்சி பெற்ற சுக்கிரன் அமைந்ததால் ஜாதகி முறைப்படி கர்நாடக சங்கீதமும் பயின்றவர்.
ஜாதக அமைப்பு புதிது புதிதான பல்வேறு துறைகளில் ஜாதகியை ஈடுபடுத்துகிறது. ஜாதகத்தில் அதற்கேற்றார்போல அமைந்த யோகங்கள் ஜாதகியை உந்தித் தள்ளுகின்றன.
மீண்டும் ஒரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501