
நாம் உண்ணும் உணவு இறைவன் நமக்கு அளித்த கொடை என்று படைத்தவனுக்கு நன்றி கூறி உண்பது தமிழர்களின் பண்பாடு. “அன்னம் பரப்பிரம்ம ஸ்வரூபம்” என்கிறது நமது வேதம். மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு. இன்று உணவகம் என்பது வெறும் பசியைப் போக்கும் இடமல்ல; அது ஒரு கலை, ஒரு சேவை மற்றும் பெரும் லாபம் ஈட்டித் தரும் ஒரு வணிகக் களம்.
ஜோதிட ரீதியாக, ஒருவருக்குச் சுவையான உணவைச் சமைக்கத் தெரிவதும், அதைப் பிறருக்குப் பரிமாறி அதன் மூலம் செல்வம் ஈட்டுவதும் அத்தனை எளிதான காரியமல்ல. இதற்குச் சந்திரன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களின் ஆசி மிக முக்கியம்.
ஏன் கூட்டுத் தொழில்?
ஒருவர் முதலீடு செய்யலாம், மற்றொருவர் நிர்வாகத்தைக் கவனிக்கலாம், இன்னொருவர் சமையல் கலையில் வல்லுநராக இருக்கலாம். இப்படித் திறமைகளை ஒன்றிணைக்கும்போது வெற்றி எளிதாகிறது. ஆனால்,
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பது பழமொழி.
“கூட்டுத் தொழில் குட்டிச் சுவர்” என்பது அனுபவ மொழி.
இந்த இரண்டுக்கும் இடையே உள்ள மெல்லிய கோடு எது? உங்கள் ஜாதகத்தில் 7-ம் பாவம் (கூட்டுறவு) மற்றும் 10-ம் பாவம் (தொழில்) எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே இந்தக் கூட்டணியின் ஆயுள் அமைகிறது.
ஒருவர் ஜாதகத்தில் ‘தன யோகம்’ இருக்கலாம், ஆனால் ‘தொழில் யோகம்’ பலவீனமாக இருக்கலாம். அந்த இடத்தில்தான் மற்றொருவரின் கிரக பலம் கைகொடுக்கிறது. எனினும், ராகு-கேதுக்களின் ஆதிக்கம் அல்லது லக்னாதிபதிக்கும் ஏழாம் அதிபதிக்கும் இடையிலான பகைமை, ஒரு லாபகரமான உணவகத்தைக்கூடப் பாதியிலேயே மூடும் நிலைக்குத் தள்ளிவிடும்.
இந்தப் பதிவில் உணவகத் தொழிலைக் கூட்டாகத் தொடங்கும் முன் கவனிக்க வேண்டிய ஜோதிடக் காரணிகள், யாருடைய ஜாதகம் யாருக்குப் பொருந்தும் மற்றும் கிரகங்களின் கூட்டணியால் விளையும் சாதக பாதகங்களை விரிவாகக் காண்போம்!

இருபது வருட அனுபவமும் தற்போதைய சோதனையும்
இருபது வருடங்களுக்கு மேலாக ரசித்துச் செய்த உணவகத் தொழில், தற்போது கஷ்டப்படுத்துகிறது. “தொழிலும் அனுபவமும் என்னுடையது; உணவகத்தைத் தொடர்ந்து நடத்த நல்ல முதலீடு செய்யும் கூட்டாளிகள் வேண்டும். அவர்கள் அமைவார்களா?” என்ற கேள்வியுடன் வந்த ஒருவரின் ஜாதகத்தை இங்கே காண்போம்.
ஏன் உணவுத் தொழில்?
கால புருஷனுக்கு உணவைக் குறிப்பிடும் இரண்டாம் இடமான ரிஷபமே லக்னமாக அமைந்ததால், இவருக்கு உணவகத் தொழிலில் ஆர்வம் ஏற்பட்டது. லக்ன நட்சத்திராதிபதி (கார்த்திகை-4) சூரியன் 12-ல் மறைந்தாலும், அவர் உச்சம் பெற்றதால் ஜாதகர் இயல்பாகவே சுயதொழில் நோக்கம் மிக்கவராக இருப்பார். ஆனால், 12-ஆம் இடம் என்பதால் தொழிலில் அதிக அலைச்சல், வெளியூரில் தொழில் அல்லது இரவு நேரத் தொழில் அமையும்.
ஜாதகர் தனது சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவு இடம் பெயர்ந்து வந்து, தமிழகத்தின் முக்கிய வணிக மாவட்டத் தலைநகரில் உணவகம் நடத்துகிறார். 3-ல் ஆட்சி பெற்ற உணவு காரகர் சந்திரன், 10-ஆம் அதிபதி சனி சாரம் பூஷத்தில் நிற்பதால், ஜாதகருக்குச் சுயதொழில் எண்ணமும் உணவுத் தொழில் ஆர்வமும் இயல்பாகவே அமைந்தது.
சைவமா? அசைவமா?
சொந்த வீட்டில் உணவு காரகர் சந்திரன் வளர்பிறையில் அமைந்து, பாவிகள் சேர்க்கையிலோ அல்லது பார்வையிலோ இல்லை. அத்துடன் தொழில் பாவகமான 10-ஆம் இடத்தில் குரு, அந்த பாவகத்திற்கு திக்பலம் தரும் வகையில் அமைந்துள்ளார். இதன் காரணமாக ஜாதகர் சைவ உணவகமே நடத்துகிறார்; அசைவ உணவகத்தின் மீது இவருக்கு நாட்டமில்லை.
தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்துடனோ, 10-ஆம் அதிபதியுடனோ அல்லது சனியுடனோ தொடர்பற்று 1-7ல் நிற்கும் ராகு-கேதுக்கள், ஜாதகரின் ‘தொடர்புகளில்’ (Contacts) தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்களே தவிர, தொழிலில் அல்ல என்பதை உணர வேண்டும்.
வாடிக்கையாளர்கள் எப்படி அமைவர்?
லக்னாதிபதி சுக்கிரன் 11-ஆம் இடமான மீனத்தில் உச்சம் பெற்றுள்ளதைக் கவனிக்கவும். மீனம் கால புருஷனுக்கு இரவைக் குறிப்பிடும் ராசியாகும். 2-ஆம் இடம் மிதுனத்தில் அமைந்த ஜீவன காரகர் சனி, தனது 10-ஆம் பார்வையால் மீனச் சுக்கிரனைப் பார்க்கிறார். பகலை ஆளும் சூரியன் லக்னத்திற்கு இரவைக் குறிப்பிடும் 12-ஆம் இடமான மேஷத்தில் அமைந்துள்ளார்.
இதனால் இவரது உணவகத்திற்கு மேற்சொன்ன மூன்று கிரகங்களின் கிழமைகளான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பகலை விட இரவில்தான் அதிக கூட்டம் வருகிறது.
மீன, மேஷ ராசிகளுடன் தொடர்பற்ற இதர கிரகங்களின் கிழமைகளான திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் இரவை விடப் பகலில் அதிக வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.
12-ல் நிற்கும் புதன், 2-ஆம் இடத்துச் செவ்வாயுடன் பரிவர்த்தனையாவதால் செவ்வாய், புதன் கிழமைகளில் மட்டும் பகல்-இரவு இரு வேளைகளிலும் சராசரியான வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்.
பொதுவாக, உணவுத் தொழிலை ஆளுமை செய்யும் சந்திரன் வளர்பிறை-தேய்பிறை மாற்றங்களுக்கு உள்ளாவதால், இத்தொழிலில் உள்ளவர்கள் வளர்பிறையில் தொழில் சூடுபிடிப்பதையும், தேய்பிறையில் சற்றுத் தொய்வடைவதையும் அனுபவப்பூர்வமாகக் காணலாம்.

கூட்டுத் தொழில் சாதகமா? பாதகமா?
தொழிலுக்காக ஆராய வேண்டிய தசாம்சத்தில், உணவு காரகர் சந்திரன் புதனுடன் இணைந்து 10-ஆம் இடத்தைப் பார்ப்பதே ஜாதகர் உணவுத் தொழில் செய்யக் காரணமாகிறது. இருவரும் உச்சம் பெற்ற லக்னாதிபதி குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் நிற்பதால், இத்தொழில் ஜாதகருக்குச் சிறப்பைத் தருகிறது.
இருப்பினும், 2-ல் ராகு அமைந்தது வருமானத்தில் தடைகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால்தான் ஜாதகர் “கூட்டுச் சேரலாமா?” என்று கேட்கிறார். ஆனால், உபய லக்னத்திற்கு (தசாம்சத்தில்) கூட்டாளியைக் குறிப்பிடும் 7-ஆம் இடமே பாதக ஸ்தானமாக வருவதால், இவர்கள் கூட்டுத் தொழில் செய்யக் கூடாது.
7-ல் செவ்வாய் நிற்பதால் கூட்டாளி பொறுமையற்றவராகவும், அவசர முடிவெடுப்பவராகவும் இருப்பார். மேலும், லக்னாதிபதி குருவிற்கு விரய ஸ்தானமான மிதுனத்தில் கூட்டாளியின் காரக கிரகமான புதன் இருப்பதாலும், ராசிச் சக்கரத்தில் 7-ல் நிற்கும் ராகு புதனின் கேட்டை நட்சத்திரத்தில் இருப்பதாலும், ஜாதகருக்கு கூட்டாளிகள் நம்பிக்கையற்றவர்களாகவும், மன ஒற்றுமை இல்லாதவர்களாகவுமே அமைவர்.
முடிவு:
மேற்சொன்ன விபரங்களை ஜாதகருக்கு விளக்கி, தொழில் கூட்டைத் தவிர்க்கும்படியும், தசா-புத்திகளின் சாதக பாதகங்களுக்கேற்ப தொழிலை நடத்தும் விதத்தையும், சில வழிபாடுகளையும் பரிந்துரை செய்துள்ளோம்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துகளுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501










