
வாழ்வில் அனைவருக்கும் அனைத்துவிதமான பாக்கியங்களும் பரிபூரணமாக அமைந்துவிடுவதில்லை. சம்பாத்தியம் சிறப்பானால் குடும்பத்தில் பிரச்சனை; குடும்பம் சிறப்பானால் ஆரோக்கியத்தில் சிரமங்கள் என, எதையாவது ஒன்றை இழந்துவிட்டுத்தான் மனிதன் வாழ வேண்டியிருக்கிறது. அனைவரையும் ஏதோ ஒருவித கண்ணுக்குத் தெரியாத ‘கர்மா’ வாட்டி வதைப்பதாகவே தோன்றும்.
படிக்கும் வயதில் சரியாகப் படிக்காததால் பிற்காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவது போல, சில தடைகளுக்கான காரணங்கள் நமக்கு நேரடியாகத் தெரியும். ஆனால், எவ்விதக் காரணமும் தெரியாமல் நம்மைத் தாக்கும் பல சோதனைகளுக்கு என்ன பெயர் வைப்பது? இதற்கான மூலத்தைத் தேடும்போதுதான் ‘கர்மா’ என்ற சொல் நம் நினைவிற்கு வருகிறது.
ஆன்மீகமும் மக்களிடம் இருக்கும் அச்சமும்:
இத்தகைய ‘கர்மா’ எனும் சொல்லைச் சுட்டிக்காட்டி, ஆன்மீகவாதிகளும் ஜோதிடர்களும் சாமானியர்களைப் பயமுறுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமூகத்தில் பரவலாக உண்டு. இதில் உண்மை இருக்கிறதா? அல்லது இது மக்களை அச்சுறுத்திப் பிழைப்பு நடத்தும் தந்திரமா? என்று புலம்புவோரின் குரலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்தச் சூழலில், மனிதர்களின் மனநிலையை மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம்:
- தன்முயற்சியே தெய்வம் என்போர்:
“எத்தகைய கர்மா என்னை ஆட்டுவித்தாலும், அதைத் தகர்த்து எனது வாழ்வைச் சிறப்பாக அமைத்துக் கொள்வேன்” என்று தன் முன்னேற்றத்திற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு, முயற்சியில் வெற்றிபெறுவோர் முதல் வகையினர். இவர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்கள். இவர்களுக்கு ஜோதிடர்களும் தேவையில்லை, ஆன்மீக வழிகாட்டிகளும் தேவையில்லை. “எனது வாழ்விற்கு நானே பொறுப்பு” என்று நேர்மறையாக அணுகும் இவர்களைப் போன்றோரைச் சமூகம் எப்போதும் வரவேற்க வேண்டும்.
- பயமும் தேடலும் உடையோர்:
தங்கள் சிரமங்களுக்குப் பின்னணியில் இருக்கும் கர்மா என்ன என்பதையும், அதன் காரணத்தையும் புரிந்து கொண்டு, தகுந்த ஆலோசகர்களின் உதவியோடு அதைச் சரிசெய்ய நினைப்பவர்கள் இரண்டாம் வகையினர். சற்று புத்திசாலித்தனமாகவும், அதே சமயம் இயல்பான பயத்துடனும் இவர்கள் ஜோதிடர்களை நாடுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இவர்களது இந்த மனப்பயமும் தயக்கமுமே பல ஏமாற்றுப் பேர்வழிகளுக்குப் பிரதான இலக்காகி விடுகிறது.
- பயத்தை மூலதனமாக்கும் போலிகள்:
இரண்டாம் வகையினரின் மனப்பயத்தையே மூலதனமாக்கி, “ஜாதகத்தில் கிரகங்கள் கெட்டுவிட்டன, கர்மா துரத்துகிறது” என்று கூறி அச்சுறுத்தும் போலி ஜோதிடர்களும் ஆன்மீகவாதிகளும் இங்கிருக்கத்தான் செய்கிறார்கள். மக்களின் அறியாமையும் பயமுமே இவர்களின் பிழைப்பிற்கு ஆதாரமாகிறது.
உண்மையான ஜோதிடத்தின் பங்கு என்ன?
இங்குதான் நாம் ஜோதிடத்தின் உண்மையான முகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஜோதிடம் என்பது மனிதர்களைப் பயமுறுத்துவதற்கான ஆயுதம் அல்ல; மாறாக, நம் வாழ்வின் தடைகளை முன் கூட்டியே அறிந்து, அதற்குரிய நல்வழிகள் மற்றும் பரிகாரங்கள் மூலம் நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள உதவும் ஒரு வழிகாட்டி மட்டுமே!
பயம் நம் முன்னேற்றத்திற்குப் மிகப்பெரிய தடையாக அமைகிறது. அதனால்தான் முன்னோர்கள் “துணிந்தவன் வெல்வான்” என்றார்கள். உங்கள் வாழ்வின் சவால்களைக் கண்டு அஞ்சி நடுங்காமல், அதற்கான சரியான காரணங்களை ஆராய்ந்து, போலிகளைத் தவிர்த்துத் தெளிவான சிந்தனையோடு பயணித்தால் எந்தக் கர்மாவையும், விதியையும் உங்களால் மாற்றியமைக்க முடியும்.
இதற்கு ஒரு தெளிவான உதாரணத்தை நடைமுறை ஜாதக ஆய்வு மூலம் காண்போம்.
“தெரிந்த எதிரியுடன் போராடலாம், தெரியாத எதிரியை என்ன செய்வது? வாழ்க்கையில் முன்னேற நான் மேற்கொண்ட முயற்சிகளில் பெரும்பாலானவை பலனளிக்கவில்லை. இதற்கு எனது ஜாதகக் கர்மா காரணமா? அப்படியெனில் அது என்ன கர்மா? அதைப் போக்கிக்கொள்ள வழியுண்டா?” என்ற கேள்விகளுடன் என்னை அணுகிய ஒரு அன்பரின் ஜாதகத்தை இங்கு ஆராய்வோம்.

ஜாதக அமைப்பு:
- லக்னம்: மேஷம்.
- லக்னத்தில் கர்ம காரகரும், 10-ஆம் அதிபதியும், பாதகாதிபதியுமான சனி நீச வக்கிரம் பெற்று சந்திரனுடன் இணைந்துள்ளார்.
- இதனால் இவருக்குக் கர்மா அதிகம்; கடுமையான உழைப்பு வீணாவதுடன், முன்னேற்றத்தில் தடைகளும் தாமதங்களும் ஏற்படுகின்றன.
- மனோகாரகனான சந்திரன் சனியோடு இணைந்ததால், கர்மா ‘சோம்பல்’ வடிவில் ஜாதகரைப் பாதித்து, உரிய காலத்தில் விரைவாகச் செயல்படும் ஆற்றலை முடக்கி வைக்கிறது.
- இவர் ஒரு விவசாயி. 4-ஆம் அதிபதி சனியோடு இணைந்ததால் விவசாயத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் அடைய முடியவில்லை. இருப்பினும், தன் கடுமையான உழைப்பால் ஓரளவு லாபம் பார்த்து வாழ்வைக் கடத்தி வருகிறார்.
காரணம் தெரியாத கர்மா – ராகு/கேது அளிக்கும் விளக்கம்:
ஜாதகரின் கேள்வி, முன்னேற்றத் தடைகள் பற்றியது. பாதிப்பின் வெளிப்படையான காரணம் ஜாதகத்தில் தெரிகிறது (சோம்பல் மற்றும் தாமதம்). ஆனால், இதன் பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத கர்மா ஏதும் உள்ளதா? என்பதை ஆராய்வோம்.
ஒரு பாதிப்பிற்கு வெளிப்படையான காரணம் சனி என்றால், கண்ணுக்குத் தெரியாத மறைமுகக் காரணங்களுக்கு நிழல் கிரகங்களான ராகு-கேதுக்களே பொறுப்பாகிறார்கள். எனவே சனி, ராகு-கேது ஆகிய மூன்றும் கர்மாவை வெளிப்படுத்தும் பிரதான கிரகங்கள் ஆகும்.
- தந்தையைக் குறிக்கும் 9-ஆம் பாவத்திற்கு 9-ஆம் பாவகம் (லக்னத்திற்கு 5-ஆம் இடம் – சிம்மம்) தாத்தாவைக் குறிக்கும் பாவகமாகும்.
- இந்த ஜாதகத்தில் 5-ஆம் இடமான சிம்மத்தில் 2, 7-க்குரிய சுக்கிரனுடன் கேது இணைந்துள்ளார். இவர்கள் 11-ஆம் இடத்தில் இருக்கும் ராகுவின் பார்வையைப் பெறுகிறார்கள்.
- 2, 7-ஆம் அதிபதி சுக்கிரன் கேதுவுடன் இணைந்தது வருமானத் தடையைக் காட்டுகிறது (சுக்கிரன் களத்திர காரகன் என்பதால் ஜாதகரின் மனைவி நல்லவர் என்பதையும் குறிக்கிறது).
- தாத்தாவைக் குறிக்கும் 5-ஆம் இடம் கேதுவால் பாதிக்கப்பட்டிருப்பதால், ஜாதகரின் பூர்வ புண்ணியம் தாத்தாவின் கர்மாவினால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது தெளிவாகிறது.
- தாத்தாவைக் குறிக்கும் காரக கிரகமான ராகுவின் மீது கோச்சார சந்திரன் பயணிப்பதும் ,கோட்சார ராகுவும் ஜனன ராகு மீதே 11 ல் நிற்பதும் ஜாதகரை வாட்டுவது தாத்தாவின் கர்மாவென்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
தாத்தாவின் கர்மா என்ன?
11-ஆம் இடத்துடன் தொடர்புடைய கிரக காரக உறவிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமண உறவுகள் அமையும் என்ற ஜோதிட விதிப்படி, தாத்தாவைக் குறிக்கும் ராகு 11-ல் நிற்பதால் அவருக்கு இரு திருமணங்கள் நடந்திருக்க வேண்டும்.
ராகு நின்ற வீட்டின் 7 ஆமதிபதி சூரியன், ராகுவிற்கு 8-ஆம் இடமான கன்னியில் மறைந்துவிட்டதால், அவரது முதல் திருமணம் தோல்வியில் முடிந்துள்ளது. மேலும் ராகுவின் 8-ஆம் அதிபதியான புதனே, ராகுவுக்கு 5-ஆம் இடமான மிதுனத்திற்கும் அதிபதியாகிறார். இதனால் காதல் காரகனான புதனின் மிதுனம் தாத்தாவுக்குக் காதல் பாவகமாக அமைவதால், அவர் மற்றொரு பெண்ணின் மீது ஏற்பட்ட காதலால் முதல் மனைவியைப் பிரிந்து இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார் என்பது புரிகிறது. (தாத்தாவைக் குறிக்கும் 5 ஆம் பாவகம் சிம்மத்திற்கு 5, 8-ஆம் வீடுகளாக தனுசும் மீனமும் குரு என்ற ஒரே கிரகத்தின் வீடுகளாகவும் உபய வீடுகளாக அமைவதும் இதையே உறுதி செய்கின்றன).
முடிவு மற்றும் தீர்வு:
மேற்சொன்ன ஜோதிட விதிகளைக் கணக்கிட்டு, கேள்வி எழுப்பிய அன்பரிடம்: “உங்களது தந்தைவழித் தாத்தாவின் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட கர்ம வினைகளே உங்களது முன்னேற்றத் தடைகளுக்குக் காரணம். அதுவே சோம்பல் வடிவில் உங்களை விரைந்து செயல்பட விடாமல் முடக்கி வைக்கிறது” என்று கூறினேன்.
அதற்கு அந்த அன்பர், “ஆம், எங்களது தந்தைவழி தாத்தாவிற்கு இரு திருமணங்கள் நடந்துள்ளன. நாங்கள் முதல் தாரத்தின் வழி வந்த வாரிசுகள்” என்று ஆமோதித்தார்.
மறைமுகமாகக் கட்டுப்படுத்திய கர்மா என்னவென்று கண்டறிந்தாயிற்று. அதன்பின், ஜாதகர் தனது கர்மாவை போக்கிக்கொள்ள கிரக காரணிகளை அதற்குரிய வர்க்கச் சக்கரங்களின் மூலம் ஆராய்ந்து, அந்த அன்பருக்குத் தேவையான உரிய பரிகார முறைகளையும் நல்வழிகளையும் தெளிவுபடுத்தினோம்.
வந்தவருக்குத் துல்லியமான பதிலும் வழிகாட்டலும் வழங்கும் பாக்கியத்தை அளித்த எனது குருநாதருக்கு மனமார நன்றி கூறிக்கொண்டேன்.
மீண்டும் உங்களை விரைவில் மற்றுமொரு சுவாரசியமான பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்
கைபேசி: +91 8300124501











