
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பார்கள். ஆனால், இன்றைய ரியல் எஸ்டேட் உலகில் நண்பர்களுடன் “கூட்டாக இணைந்து” வாங்கும் நிலம், சில நேரங்களில் ‘கோடி நன்மைக்கு’ப் பதிலாக ‘கோடி கவலைகளை’த் தந்துவிடுகிறது. ஆசை ஆசையாய், எதிர்கால லாபத்தை மனதில்கொண்டு நண்பர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு நிலத்தில் முதலீடு செய்கிறார்கள். ஆனால், எதிர்பாராத சூழலால் அந்த நிலம் கைமாறாமல், போட்ட முதலீடும் திரும்பக் கிடைக்காமல் முடங்கிப்போகும்போது, அது பண நெருக்கடியை மட்டுமல்ல… நண்பர்களுக்குள் இருக்கும் மன நெருக்கடியையும் அதிகமாக்கிவிடுகிறது.
“நிலம் எப்போது விற்பனையாகும்? போட்ட பணம் எப்போது கையில் வரும்? இந்த முட்டுக்கட்டைக்குக் காரணம் என்ன?” – இப்படிப்பட்ட தீராத தவிப்போடு நம்மிடம் வந்த ஒரு அன்பரின் கேள்விக்காகப் பார்க்கப்பட்டதுதான் இந்த ஜாமக்கோள் பிரசன்னம்.
சாதாரண ஜாதகக் கட்டங்கள் தற்போதைய தசாபுத்தியைக் காட்டினாலும், ‘இந்தக் கணத்தில்’ பிரபஞ்சம் நமக்கு என்ன சொல்ல வருகிறது என்பதைத் துல்லியமாக, அக்குவேர் ஆணிவேராக உடைத்துக் காட்டும் அற்புதமான கலைதான் ஜாமக்கோள் பிரசன்னம்.
நிலத்திற்கு அதிபதியான செவ்வாயின் நிலை என்ன? கூட்டாளிகளைக் குறிக்கும் ஏழாம் பாவகத்தின் ரகசியம் என்ன? லாபத்தைக் கொடுக்கும் உதயமும் ஆருடமும் எங்கே நிற்கிறது? நிலம் விற்பனையாகாமல் தடுத்த அந்த ‘முட்டுக்கட்டை’ எது? அது எப்போது விலகி, கையில் பணம் புழங்கும்? வாருங்கள், இந்த நேரடிப் பிரசன்னக் கணக்கீட்டின் மூலம், முடங்கிய முதலீடுகள் மீள்வதற்கான ஜோதிட சூட்சுமங்களை இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்!

பிரசன்னக் கிரகங்களின் நிலையும் விளக்கமும்:
கால புருஷனுக்கு நில விற்பனையைக் குறிப்பிடும் மிதுனமே உதயமாக அமைந்துள்ளது. கூட்டாளிகளைக் குறிப்பிடும் 7ஆம் அதிபதியும், தொழிலைக் குறிப்பிடும் 10ஆம் அதிபதியுமான குரு, உள்வட்டத்திலும் வெளிவட்டத்திலும் உதயத்திலேயே திக்பலம் பெற்று நிற்பது, பூமி விற்பனையைக் கூட்டாக இணைந்து தொழிலாகச் செய்பவர் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. உதயாதிபதி புதனே நண்பர்களைக் குறிப்பிடும் கிரகமாகி, அவர் நண்பர்களைக் குறிக்கும் 11ஆம் இடமான மேஷத்தில் செவ்வாயுடன் இணைந்துள்ளது, லாப நோக்கில் பெரிய அளவில் செயல்பட நண்பர்களைத் தொழிலில் கூட்டு சேர்த்துள்ளதை உறுதி செய்கிறது.

ஆருடம் 4-ல் அமைந்தது, இவருடைய கேள்வி நில விற்பனை தொடர்பானது என்பதை அறுதியிட்டுக் கூறுகிறது. முதலீட்டைக் குறிப்பிடும் 4ஆம் இடமான ஆருடத்தில் ஜாம சூரியன் நிற்பது, கேள்வியாளரது முதலீடு பெரிய அளவிலானது என்பதைக் குறிக்கிறது. 10ஆம் இடமான மீனத்தில் உச்சம் பெற்ற ஜாமச் சுக்கிரன், உள்வட்ட சனியோடு இணைந்து ஆருடத்தைப் பார்ப்பதால் மிகப்பெரிய முதலீடு முடங்கியுள்ளதைக் காட்டுகிறது. ஏனெனில், முடக்கத்தைக் குறிப்பிடும் 12ஆம் இடமான ரிஷபத்தையும், முதலீட்டைக் குறிப்பிடும் 4ஆம் இடத்தையும், கால புருஷனின் 12ஆம் இடத்திலிருந்து தாமதம் மற்றும் தடைகளைக் குறிப்பிடும் சனி பார்க்கிறார் என்பதுவே இதற்குக் காரணமாகும்.
வருமானத்தைக் குறிப்பிடும் 2ஆம் இடமான கடகத்தில் வெளிவட்டத்தில் கேள்வியின் காரக கிரகம் செவ்வாய் நீசம் பெற்ற நிலையில், அவரை 8ஆம் இடமான மகரத்தில் வெளிவட்ட சனியோடு கவிப்பு பார்ப்பது, முதலீடு செய்த நிலம் விற்பனையாகாமல் முடங்கி, வருமானத் தடையை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது.
மனைவியின் உதவி (ரகசியப் பின்னணி):
12ஆம் இடத்துப் புதன், உதயச் சுக்கிரனுடன் பரிவர்த்தனையாகியுள்ளதைக் கவனிக்கவும். இது இவருடைய மனைவி, இந்த முதலீட்டிற்குப் பணம் கொடுத்து உதவியுள்ளதைக் குறிப்பிடுகிறது. உதயத்தில் பரிவர்த்தனையாகும் சுக்கிரனே 10ஆம் இடத்திலும் உச்சம் பெற்று நிற்பதால், மனைவியின் நகைகளை அடமானம் வைத்து கேள்வியாளர் நிலத்தில் முதலீடு செய்துள்ளார். உதயத்தில் தங்கத்தைக் குறிப்பிடும் குருவே மனைவியைக் குறிப்பிடும் 7ஆம் இடத்திற்கும், தொழிலைக் குறிப்பிடும் 10ஆம் இடத்திற்கும் அதிபதியாகி அவர் உதயத்திலேயே நிற்கிறார் என்பதிலிருந்தும் இது உறுதியாகிறது. இந்த முதலீடுதான் தற்போது நிலம் விற்பனையாகாமல் கேள்வியாளரைக் கஷ்டப்படுத்துகிறது.
நிலம் எப்போது விற்பனையாகும்? (தீர்வு):
உதயத்தில் நிற்கும் குரு, விரைவில் கடகத்தில் நீசம் பெற்ற லாபாதிபதி செவ்வாயை அடைந்து அவரை நீச பங்கப்படுத்தவுள்ளார். உதயத்திற்கு நெருங்கமாக ரிஷபத்தில் நிற்கும் உதயாதிபதி புதன் உதயத்தை அடைந்து விரைவில் திக்பலம் பெறவுள்ளார் என்பதாலும் கேள்வியாளர் கூட்டாக இணைந்து வாங்கிய நிலம் விற்பனையாகும் நிலையில் உள்ளது. எப்போது? எனும் கேள்வி எழுகையில் குரு 2ஆம் இடம் கடகத்திற்கு வந்து வந்து உச்சம் பெற்று, சுய சாரமான புனர்பூசம் கடந்து, தடைகளை ஏற்படுத்தும் சனியின் பூச நட்சத்திரத்தில் செல்லும்போது நிலம் விற்பனையாகிப் பணம் கைக்கு வந்துவிடும்.
“அதுவரை கவலை வேண்டாம், பொறுமையாக இருந்தால் போதும்” என்று கேள்வியாளருக்கு நல்வழிகாட்டுதல் கூறப்பட்டது.
மீண்டும் விரைவில் உங்களை மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501










