
“பாரதம் விரைவில் உலக வல்லரசாக உருவெடுக்க வேண்டும்” என்பது இன்று ஒவ்வொரு இந்தியனின் கனவு மட்டுமல்ல, அது நம் தேசத்தின் தவிர்க்க முடியாத இலக்கும்கூட!
ஆனால், வெறும் பாரம்பரியத் தொழில்களையும், உடல் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் பொருளாதாரத்தையும் வைத்துக்கொண்டு ஒரு தேசத்தால் வல்லரசாக உருவெடுத்துவிட முடியுமா? நிச்சயம் முடியாது. உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் மனிதனின் அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளையும், வயிற்றுப் பசியையும் மட்டுமே பூர்த்தி செய்யக்கூடும். ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை உலக அரங்கில் உச்சத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய ஆற்றல் ‘அறிவுசார் பொருளாதாரம்’ (Knowledge Economy) மற்றும் ‘சாதுர்யமான முதலீடுகளுக்கு’ (Smart Investments) மட்டுமே உண்டு.
கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியப் பொருளாதாரத்தின் முகவரியையே மாற்றி அமைத்து, நம் நாட்டின் மதிப்பையும் கௌரவத்தையும் உலகளவில் உயர்த்திக் காட்டியது கணினித் துறை (Information Technology) தான். ‘புத்திசாலித்தனத்தையும் தொழில்நுட்பத்தையும் முதன்மையாகக் கொண்டு பெறப்படும் பொருளாதாரம் மட்டுமே ஒரு தேசத்தின் உண்மையான மதிப்புமிக்க சொத்து’ என்பதை தகவல் தொழில்நுட்பப் புரட்சி நமக்கு மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டிவிட்டது.
அதேபோல, தனிமனித வாழ்விலும் சரி, நாட்டின் பொருளாதாரத்திலும் சரி—யாரையும் சாராமல் சுயசார்போடு வாழ வைக்கும் வல்லமை ‘சாதுர்யமான முதலீடுகளுக்கு’ உண்டு. அதன் வெளிப்பாடாகவே, வேகமாக வளர்ந்து வரும் இன்றைய இந்தியாவில், சாமானிய மக்களிடையேயும் பங்குச்சந்தை முதலீடுகள் (Stock Market Investments) பற்றிய விழிப்புணர்வும், அதில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் முன்னெப்போதையும் விட இப்போது கணிசமாக அதிகரித்து வருகின்றன.
நவீன பொருளாதாரமும் சோழிப் பிரசன்னமும்
இத்தகைய நவீனப் பொருளாதாரச் சூழலில், பழம்பெரும் ஜோதிடக் கலையான ‘சோழிப் பிரசன்னம்’ ஒரு மனிதனுக்கு எவ்வாறு வழிகாட்டுகிறது என்பதுதான் இந்தப் பதிவின் முக்கிய நோக்கம்!
சமீபத்தில், எனது வீட்டில் பாரம்பரிய முறைப்படி சோழிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது என்னை நாடி வந்த அன்பர் ஒருவர், “எனது மனைவியின் பெயரில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டால் லாபகரமாக அமையுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
காலம் மாறியிருக்கிறது; ஆனால் மக்களின் கேள்விகளுக்கு வழிகாட்டும் இயற்கையின் வாக்கு மாறவில்லை! தொழில்நுட்பமும் பங்கு வணிகமும் கொடிகட்டிப் பறக்கும் இந்த நவீன காலத்தில் வந்த வாடிக்கையாளரின் கேள்விக்காகப் பார்க்கப்பட்ட புனிதமான சோழிப் பிரசன்ன அமைப்புகள் என்ன சொல்கின்றன? பெண்களின் பெயரில் செய்யும் முதலீடுகள் யாருக்கு யோகத்தைத் தரும்? சோழிப் பிரசன்னம் சுட்டிக்காட்டிய நுட்பமான ரகசியங்கள் என்னென்ன?
வாருங்கள்… விரிவாகப் பார்ப்போம்!

பங்கு வணிகமும் கிரக அமைப்புகளும்
ஜோதிட சாஸ்திரப்படி புதனும், சுக்கிரனும் பங்கு வணிகத்துடன் தொடர்புடைய முக்கிய கிரகங்களாகும். பாவகங்களில் 3-ஆம் இடமும், 8-ஆம் இடமும் பங்கு வணிகத்தைக் குறிக்கும். ஒருவர் பங்கு வணிகத்தில் பெரும் தனமீட்ட வேண்டுமானால், அதிர்ஷ்ட பாவகமெனும் 5-ஆம் இடம், தன ஸ்தானமான 2-ஆம் இடம் மற்றும் லாப ஸ்தானமான 11-ஆம் இடம் ஆகியவை மேற்கூறிய 3, 8 பாவகங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இந்தப் பிரசன்னத்தின் கிரக நிலைகள்:
- சோழி லக்னம்: சிம்மம்.
- லக்னத்தில் கேதுவுடன் 3, 10 அதிபதியான சுக்கிரன் இணைந்துள்ளார்.
எந்த வகைப் பிரசன்னமாக இருந்தாலும், பிரசன்னம் கேள்வியை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்ட வேண்டும். கேள்வி பிரசன்னத்தில் எதிரொலித்தால் மட்டுமே, பிரசன்னம் கேட்பவர் ஆத்மார்த்தமாக அந்தச் சிக்கலுக்கான தீர்வைத் தேடுகிறார் என்று பொருள். இதை உறுதி செய்துகொண்டுதான் பதிலைச் சொல்ல வேண்டும்.
பிரசன்னம் காட்டும் நுட்பங்கள்
மனைவியைக் குறிக்கக்கூடிய சுக்கிரன், சோழி லக்னத்தில் அமைந்துள்ளார். இதனால் “மனைவி பெயரில் முதலீடு செய்யலாமா?” என்று அவர் கேட்பது உறுதியாகிறது.
- மனோகாரகரான சந்திரன் அதிர்ஷ்ட பாவகமெனும் 5-ஆம் இடத்தில் அமைந்துள்ளார்.
- சந்திரனை லாப ஸ்தானத்திலிருந்து புதன் நேர்பார்வை பார்க்கிறார். கூடவே 8-ஆம் இடத்தில் இருந்து சனி 10-ஆம் பார்வையாகப் பார்க்கிறார்.
- முதலீட்டுப் பாவகமெனும் 4-ஆம் பாவகாதிபதி செவ்வாய், ரிஷபத்தில் திக்பலம் பெற்று, 5-ஆம் இடத்திலிருக்கும் சந்திரனை 8-ஆம் பார்வையாகப் பார்க்கிறார்.
ஆக, இவருக்கு மனைவி பெயரில் பங்கு வணிகத்தில் முதலீடு செய்யும் எண்ணம் தீவிரமாக உள்ளதை பிரசன்னம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
பலனும் ஆலோசனையும்
இனி பதிலுக்கு வருவோம். லக்னத்தில் நிற்கும் ஆசையின் காரக கிரகமான சுக்கிரன் ராகு-கேதுக்களின் தொடர்பில் உள்ளார். இவை ஒருவரின் பண ஆசையைத் தூண்டி, தவறு செய்ய வைத்துத் தண்டிக்கும் இயல்புடையவை.
இங்கு செவ்வாய் திக்பலம் பெற்று லக்னத்தை 4-ஆம் பார்வையாகப் பார்ப்பது சிறப்பு. கணவரைக் குறிக்கும் செவ்வாய் சோழி லக்னத்தில் நிற்கும் சுக்கிரனை பார்ப்பதால் மனைவி பெயரில் பங்கு வணிகத்தில் முதலீடு செய்ய கணவர் முயல்வது சிறப்பே. ஆனால், சிம்ம லக்னத்திற்கு செவ்வாய் பாதகாதிபதி என்பதுடன் சோழிப் பிரசன்ன விதிகளின்படி மகாபாதகாதிபதியும் அவரே ஆகிறார். அதுவும் சனியின் 3-ஆம் பார்வையைப் பெற்ற செவ்வாய், ராகு-கேதுக்களால் பாதிக்கப்பட்ட லக்னத்தைப் பார்க்கிறார். இதனால் ராகு-கேதுக்கள் மற்றும் செவ்வாய் தொடர்புடைய குறிப்பிட்ட சில முதலீடுகள் தவிர, இதர வகை முதலீடுகள் இவருக்குப் பாதிப்பையே தரும்.
5-ஆம் இடத்தை சனியும், செவ்வாயும், புதனும் பார்க்கிறார்கள் என்பதால் இவர் இக்கிரகங்கள் குறிப்பிடும் பங்குகளிலும் முதலீடு செய்வார். 5-ஆம் இடத்துச் சந்திரன் மாந்தியோடு இணைந்த நிலையில், அவர் 12-ஆம் இடத்து குருவோடு பரிவர்த்தனை ஆகிறார்.
இதன் பொருள் என்ன? கேள்வியாளர் பொறுமையின்றி அடிக்கடி முதலீடுகளை மாற்றியமைப்பார். இதனால் முதலீடுகள் விரயமாகும். லக்னாதிபதி சூரியன், 5 மற்றும் 8-ஆம் அதிபதியான குருவுடன் 12-ஆம் இடத்தில் இணைவு பெற்றது, அவர் பங்கு வணிகத்தில் தனது அதிர்ஷ்டத்தைச் சோதனை செய்ய எண்ணுவதைக் குறிப்பிட்டாலும், விரயம் ஏற்படவுள்ளதையே தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. எனினும் சூரியன் மாதக் கிரகம் என்பதால், கேள்வியாளரின் தற்போதைய நிலையைத்தான் இது குறிக்கும். பிற்காலத்தில் இந்நிலை மாற வாய்ப்புண்டு.
பிரசன்னத்தின் இறுதித் தீர்ப்பு
மேற்கண்ட விஷயங்களை ஆராய்ந்து வந்தவரிடம் நான் கூறியது இதுதான்:
“நீங்கள் மனைவி பெயரில் முதலீடு செய்தாலும் நீங்கள்தான் அதை இயக்குவீர்கள். உங்களது பொறுமையற்ற தன்மையால் முதலீடுகள் விரயமாகும். எனவே, நீண்ட கால முதலீடு செய்வதாக இருந்தால் மட்டும் முதலீடு செய்யுங்கள் (லக்னத்திலமைந்த ராகு-கேதுக்கள் தொடர்புடைய சில துறைகளைக் குறிப்பிட்டேன்). ஓரிரு ஆண்டுகளிலேயே லாபம் வேண்டும் என்று அவசரப்பட்டு ஆசைப்பட்டால், அது மரண வலி தருவதாகவே இருக்கும் (சந்திரனுடன் மாந்தி இருப்பதால்).”
இதைக் கேட்ட கேள்வியாளர் மனம் திறந்து ஒப்புக்கொண்டார்: “எனது பெயரில் கடந்த காலங்களில் செய்த முதலீடுகளைக் குறுகிய லாபங்களுக்கு ஆசைப்பட்டு பெரும் லாபங்களை இழந்துவிட்டேன். சில தவறான பங்குகளையும் தெரிவு செய்து அதிலிருந்து வெளியேற அடிக்கடி பங்குகளை மாற்றியமைத்ததும் லாபமில்லாமல் செய்துவிட்டது. அதனால்தான் மனைவி பெயரில் முதலீடு செய்ய எண்ணுகிறேன்,” என்றார்.
அதற்கு நான், “கணக்கின் பெயரை (Account Name) மாற்றுவதால் மட்டும் பலனில்லை. மனைவி பெயரில் முதலீடு செய்தாலும், அதை நிர்வகிக்கும் உங்களது குணத்தையும், அவசரத்தையும் மாற்றிக்கொள்ளாவிட்டால் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்பதைத்தான் சோழிப் பிரசன்னம் உறுதி செய்கிறது” என்று தெளிவுபடுத்தினேன்.
நிறைவாக
இன்றைய உலகப் பொருளாதாரச் சூழல் சற்று ஏற்ற இறக்கத்துடன் உள்ள நிலையில், பங்குச்சந்தையில் உடனடி லாபங்கள் என்பது பொதுவாகவே சாத்தியமற்றது. எனவே, குறுகிய லாபங்களுக்காக வாழ்வின் ஆதாரங்களை இழந்துவிடாதீர்கள். நிதானமும், சரியான வழிகாட்டுதலும், நீண்ட கால முதலீடுமே பங்குச்சந்தையில் வெற்றியைக் கொடுக்கும்.
மீண்டும் விரைவில் உங்களை மற்றுமொரு பயனுள்ள பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துகளுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்
கைபேசி: +91 8300124501










