
“கல்வி என்பது ஒரு விதை என்றால், வேலை என்பது அதன் அறுவடை.”
ஒரு மனிதனின் வாழ்வில் இருபது ஆண்டுகால கல்வி உழைப்புக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த அங்கீகாரம், அவர் படித்து முடித்த கையோடு தகுதியான ஒரு பணியில் அமர்வதுதான். இன்றைய போட்டி நிறைந்த உலகில், லட்சக்கணக்கான இளைஞர்கள் பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் சூழலில், ஒரு சிலருக்கு மட்டும் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே வேலை கிடைத்துவிடுகிறது. இது வெறும் அதிர்ஷ்டம் தானா? அல்லது அவர்களின் உழைப்பு மட்டும்தானா?
ஜோதிட ரீதியாகப் பார்த்தால், ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் அணிவகுப்பும், தசா புத்திகளும் கச்சிதமாக அமையும் போதுதான் இத்தகைய ‘உடனடி வேலை’ எனும் யோகம் வாய்க்கிறது.
முக்கிய கிரக இணைப்புகள்:
நமது கர்ம வினைப்படி தொழிலைத் தீர்மானிக்கும் 10-ம் அதிபதி, புத்தியைத் தீர்மானிக்கும் 5-ம் அதிபதி, மற்றும் லாபத்தைத் தரும் 11-ம் அதிபதி ஆகிய மூவரும் ஒருவருக்கொருவர் சுபத் தொடர்பில் இருக்கும்போது, அந்த ஜாதகர் எவ்விதத் தடையுமின்றி வெற்றிக் கொடியை நாட்டுகிறார்.
வெறும் வேலை கிடைப்பது மட்டுமல்லாமல், படித்த படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் தொடர்பு இருக்கிறதா? அல்லது வேறு துறையில் சாதிக்கப் போகிறாரா? என்பதையும் ஒருவரின் ஜன்ம ஜாதகத்தைக் கொண்டு துல்லியமாகக் கணித்துவிட முடியும்.
உதாரண ஜாதக ஆய்வு: வங்கிப் பணி யோகம்

அடுத்த மாதம் தனது கல்லூரி இறுதியாண்டுத் தேர்வை எழுதவுள்ள ஒரு மாணவியின் ஜாதகத்தை உதாரணமாகக் கொள்வோம்.
- லக்ன அமைப்பு: துலாம் லக்னம். லக்னாதிபதி சுக்கிரன் மூலத்திரிகோண வலுவுடன் லக்னத்திலேயே அமர்ந்துள்ளார்.
- சுப கிரக சேர்க்கை: லக்னத்தில் 9, 12-க்கு அதிபதியான புதனுடன் இணைந்து திக்பலம் பெற்றுள்ளார். இவர்களை பாக்கிய ஸ்தானத்தில் (9-ம் இடம்) ராகுவுடன் இணைந்து நிற்கும் குரு தனது 5-ஆம் பார்வையால் பார்க்கிறார்.
- துறை சார்ந்த கிரகங்கள்: தனகாரகர் குரு, செல்வ வளமை காரகர் சுக்கிரன், கணக்கன் என்றழைக்கப்படும் புதன் ஆகிய மூவருமே வங்கிப் பணியோடு தொடர்புடைய கிரகங்கள். ஜாதகி இளங்கலையில் B.Com முடித்து தற்போது முதுகலையில் MBA இறுதித் தேர்வை எழுதவுள்ள நிலையில், ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக (Assistant Manager) வேலை கிடைத்துள்ளது.
தசா புத்தி பலன்கள்:
- கல்வி காலம்: பொருளாதாரத்தைக் குறிக்கும் 2-ஆம் இடமான விருச்சிகத்தில், குருவின் விசாகம்-4 இல் நின்ற சூரிய தசையில் ஜாதகி B.Com படித்தார். சூரியனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் உச்சமானதால் இளங்கலையில் சிறப்பாகத் தேறினார். சூரிய தசையை அடுத்து வந்த தசாநாதர் தனுசு சந்திரனை அதன் அதிபதி குரு இரட்டை ராசியான மிதுனத்தில் இருந்து பார்ப்பதால் ஜாதகி மற்றுமொரு பட்டம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
- வேலை உறுதி: தற்போது 10-ஆம் அதிபதியான சந்திரனின் தசை நடக்கிறது. சந்திரன் வளர்பிறையாக இருப்பது கூடுதல் சிறப்பு.
- விரைவான வாய்ப்பு: ஜீவன காரகர் சனி, சந்திரனின் சாரத்தில் (ரோகிணி-3) நின்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பது வேலை விரைந்து கிடைப்பதை உறுதி செய்கிறது.
- தற்போதைய நிலை: கோட்சார சனி தற்போது 6-ஆம் இடமான (வேலைக்கான பாவகம்) மீனத்தில் இருப்பதால் வேலை கிடைத்துவிட்டது. அடுத்து வரும் புதன் புக்தியில் இவர் பணியில் சேருவார்.
- எதிர்காலம்: தசாநாதர் சந்திரன் ராகு-கேதுக்களுடன் தொடர்பாவதால், எதிர்காலத்தில் வெளிநாட்டு வரவு செலவுகளைக் கவனிக்கும் பொறுப்பு இவருக்குக் கிடைக்கும்.
முடிவுரை:
“கல்வி உங்கள் தகுதியைத் தீர்மானிக்கிறது; கிரகங்களின் கதி உங்கள் விதியைத் தீர்மானிக்கிறது! சரியான நேரத்தில் அமையும் ஜாதக யோகமே, உங்கள் உழைப்பிற்குரிய வெற்றியை அரியணையில் அமர்த்துகிறது.” ✨💼
மீண்டும் விரைவில் உங்களை மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501










