
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற மூதுரைக்கு ஏற்ப, தன் சொந்த மண்ணையும், உற்றார் உறவினர்களையும் பிரிந்து, பாலைவன தேசங்களில் தங்கள் வியர்வையைச் சிந்தி உழைத்துக் கொண்டிருக்கும் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக, தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் உள்ள பல குடும்பங்களின் வாழ்வாதார விளக்காகத் திகழ்வது வளைகுடா நாடுகளின் வேலை வாய்ப்புகளே.
ஆனால், தற்போதைய சர்வதேச அரசியல் சூழலில் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றமும், நிலையற்ற தன்மையும் அங்கு பணிபுரியும் லட்சக்கணக்கான இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் வேலை குறித்த கவலை மட்டுமல்ல; மாறாக, தங்கள் உழைப்பை நம்பி கட்டப்பட்ட கனவு இல்லங்கள், வாங்கிய கடன்கள், குழந்தைகளின் கல்விச் செலவுகள் மற்றும் முதுமையில் இருக்கும் பெற்றோரின் மருத்துவத் தேவைகள் என ஒரு நீண்ட போராட்டத்தின் அங்கமாகவே இக்கவலை பார்க்கப்படுகிறது.
“எப்போது என்ன நடக்குமோ?” என்ற இந்த நிச்சயமற்ற சூழலில், தனிமனித ஜாதகக் கட்டங்களைத் தாண்டி, பிரபஞ்சத்தின் தற்போதைய கோட்சார நிலைகளும், ஆரூடக் கணிப்புகளும் என்ன சொல்கின்றன என்பதை அறிய வேண்டியது அவசியமாகிறது.
காலத்தின் கணக்கைத் துல்லியமாகக் காட்டும் ஜாமக்கோள் பிரசன்னம், தற்போதைய இந்த இக்கட்டான சூழலை எவ்வாறு அணுகுகிறது? கிரகங்களின் சஞ்சாரமும், உதய-ஆரூட நிலைகளும் வளைகுடா வாழ் இந்தியர்களுக்குச் சாதகமாக உள்ளதா? அல்லது சவால்கள் தொடருமா? வேலை இழப்பு குறித்த அச்சம், பொருளாதார நெருக்கடி மற்றும் குடும்பப் பொறுப்புகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் மனதிடத்தை இந்தப் பிரசன்னக் கணிப்பு எவ்வாறு வழங்குகிறது என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
எனது நெடுநாள் வளைகுடா வாடிக்கையாளர் ஒருவரின் தற்போதைய வேலை நிலவரம் குறித்துப் பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னத்தின் விரிவான அலசலே கீழே நீங்கள் காண்பது.

கடக உதயத்தில் உதயாதிபதி சந்திரன் ஆட்சி பெற்று நிற்பது, கேள்வியாளர் வெளிநாட்டில் இருப்பதைக் குறிப்பிடுகிறது. கடக உதயம் சனியின் பூசத்தில் அமைந்து, சனி மீனத்தில் செவ்வாய், புதனுடன் இணைந்து நிற்பதால், கேள்வியாளர் வளைகுடாவில் எண்ணெய் எடுக்குமிடத்தில் பணிபுரிவதைக் குறிப்பிடுகிறது. உதயத்தில் நிற்கும் ஜாமச் சூரியனே (வெளிவட்டச் சூரியன்), 10-ஆம் இடமான மேஷத்தில் உச்சம் மற்றும் திக்பல வலுவுடன் 6, 9-ஆம் அதிபதி குருவோடு இணைந்து நிற்கிறார். இது கேள்வியாளர் கடகம் குறிப்பிடும் கடல் கடந்த தேசத்தில், உச்ச சூரியன் குறிப்பிடும் உயர்வான சம்பாத்தியத்தில், பெரிய பொறுப்பில் இருப்பதையும் காட்டுகிறது.

ஜாமச் சந்திரன் வீட்டைக் குறிக்கும் 4-ஆம் இடம் துலாத்தில் திக்பலம் பெற்று நிற்கிறார். அவர் 10-ஆம் இடத்தில் உள்ள உச்ச சூரியன் மற்றும் குருவால் பார்க்கப்படுகிறார். இது கேள்வியாளர் வீடு கட்டியுள்ளதையும், உச்ச சூரியன் மற்றும் குருவால் 4-ஆம் இட சந்திரன் பார்க்கப்படுவதால் அது மதிப்பான பெரிய வீடாக இருக்கும் என்பதையும் உணர்த்துகிறது. மேலும், உதய சந்திரன் கடனைக் குறிக்கும் கால புருஷ 6-ஆம் அதிபதி புதனின் ஆயில்யத்தில் நிற்பதால், கட்ட வேண்டிய வீட்டுக் கடனில் ஒரு பெரும் தொகை இன்னும் மீதம் உள்ளதையும் காட்டுகிறது.
ஆரூடம் 10-ஆம் இடத்தில் அமைந்துள்ளது, கேள்வி வேலை தொடர்பானது என்பதையும், 2-ல் கேது நிற்க, 2-ஆம் அதிபதி சூரியன் ஆரூடத்தில் உச்சம் பெற்று நிற்பது, கட்ட வேண்டிய பெரிய கடனை நினைத்து கேள்வியாளர் கவலைப்படுவதையும் குறிப்பிடுகிறது. 10-ஆம் இடம் வலுவானதால் வேலைக்குப் பாதிப்பு வருமோ என்று கேள்வியாளர் அஞ்ச மாட்டார். ஆனால், 2-ல் கேதுவும், கவிப்பும் உள்ளதால் “போர்ச்சூழல் காரணமாகக் கடன் தவணைகளைக் கட்ட இயலாத நிலை ஏற்பட்டால் என்ன செய்வது?” என்றுதான் கேள்வியாளர் கவலைப்படுகிறார்.
உதயாதிபதியும், 10-ஆம் இடமும் வலுவானதால் வேலை குறித்து கேள்வியாளர் அஞ்சத் தேவையில்லை. ஆனால், உதயத்தை நோக்கி கேது நகர்ந்து வருவது கடன் நெருக்கடியில் ஆழ்த்தும். உதயத்தை கேது கடந்து செல்லும் காலம் வரை, கேள்வியாளர் கவனமாக வேலையில் ஏற்படும் கசப்புகளைச் சகித்துக்கொண்டு பணிபுரிய வேண்டும். தவறினால் வருமானம் தடைபடும் அமைப்பு உள்ளது. எனவே, இங்கு பொறுமையும் சகிப்புத்தன்மையுமே பணியிடத்தில் கேள்வியாளருக்குத் தேவை.
வெளிநாட்டில் பணிபுரிவோரை பொதுவாக ராகு/கேதுக்கள் பெரிய அளவில் பாதிப்பதில்லை என்பதால் கேள்வியாளருக்கு வேலையில் பாதிப்பு வராது. ஆனால், மனதைக் குறிக்கும் கடக ராசியை கேது கடக்கும் வரை கேள்வியாளருக்கு கடனை நினைத்து மன உளைச்சல் இருக்கும். தைரிய ஸ்தானாதிபதி (3-ஆம் அதிபதி) புதன் மீனத்தில் நீசமானது மன தைரியத்தை உலுக்கிப் பார்க்கும் அமைப்பாகும். உதய சந்திரன் நீச புதனின் ஆயில்யத்தில் நிற்பதால், கடனை முன்னிட்ட மன சஞ்சலம் அதிகமிருக்கும்.
தீர்வும் அறிவுரையும்: மேற்கண்ட அமைப்புகளை ஆராய்ந்துவிட்டு கேள்வியாளரிடம், “வளைகுடாவில் பணி போய்விடுமோ என்ற கவலை உங்களுக்கு இருக்காது. என்றாலும், போரால் வேலை தடைபட்டு வருமானம் பாதிக்கப்படுமோ என்ற அச்சமே உங்களுக்கு உள்ளது. கேது கடகத்தைக் கடக்கும் 2028 மத்தியக் காலம் வரை கடனை நினைத்து அச்சம் இருக்கும். அதற்குள் கடனில் பெருமளவை அடைத்துவிடுவீர்கள் என்பதால் அதன்பிறகு கவலைப்பட மாட்டீர்கள்” என்று கூறினேன். தற்போது வேலையில் மன சஞ்சலத்தை விடுத்து கவனமாகப் பணியைத் தொடரவும் என்ற அறிவுரையுடன், கடன் விரைந்து அடைபட சில வழிபாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் உங்களைச் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துகளுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501










