
அனைவரின் வாழ்விலும் வேலைவாய்ப்பு என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கம். நிம்மதியான வேலை, கைநிறையச் சம்பளம், வெளிநாட்டுப் பயணங்கள், பணியிடத்தில் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் என ஒரு காலகட்டம் வசந்தமாக அமையும். ஆனால், அதே உத்தியோகத்தில் சில சமயங்களில் எதிர்பாராத தடைகள், வீண் பழிச்சொற்கள், வழக்குகள், மன உளைச்சல்கள், ஏன்… திடீர் பணியிழப்புகள் கூட ஏற்படுவதுண்டு.
“ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?” என்ற கேள்வி உங்களில் பலருக்கு வேலை நெருக்கடியின் போது எழுந்திருக்கலாம். ஆனால், இயற்கை நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றுதான். வசந்த காலங்கள் நம் வாழ்வில் வாய்ப்புகளை அள்ளித் தருகின்றன என்றால், சவால்கள் நிறைந்த கடினமான காலங்கள் நம்மைப் பக்குவப்படுத்தி புதிய மாற்றங்களை ஏற்க வைக்கின்றன. “மாற்றங்கள் இல்லையேல் வாழ்வில் மாறுதல்கள் இல்லை” என்பதே பிரபஞ்சத்தின் எழுதப்படாத விதி. இந்த ஆழமான உண்மையை முழுமையாகப் புரிந்து கொண்டால், எந்தவொரு கடினமான சூழ்நிலையையும், பணியிட நெருக்கடிகளையும் நாம் எளிதாகக் கடந்து செல்லலாம்.
ஆனால், இங்குதான் ஒரு சுவாரஸ்யமான ஜோதிட சூட்சுமம் ஒளிந்திருக்கிறது. இயற்கையின் இந்த மாற்றங்களையும், சவால்களையும் தாண்டி, சிலருக்கு மட்டும் எந்தப் புயல் வந்தாலும் அசையாத ஆலமரம் போல உத்தியோகத்தில் ஒரு நிலையான தன்மை இருக்கும். ஜாதகரின் கட்டுப்பாட்டையும் மீறி, அவர்களை எந்தப் பெரிய வீழ்ச்சியிலும் சிக்கவிடாமல் பாதுகாக்கும் அசைக்க முடியாத அரணாக அவர்களின் ஜாதக அமைப்பே செயல்படும்.
எவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடி வந்தாலும், வேலை செய்யும் நிறுவனமே ஆட்டம் கண்டாலும், இந்த அபூர்வமான ஜாதக அமைப்பு உள்ளவர்கள் மட்டும் எந்தப் பாதிப்புமின்றி தப்பித்துக்கொள்வார்கள்; அல்லது உடனடியாக அதைவிடச் சிறந்த மாற்று வேலைக்குச் சென்றுவிடுவார்கள்.
- இத்தகைய அசாத்தியமான வலிமையை ஒரு ஜாதகத்திற்குத் தருவது எது?
- தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றியை வசமாக்கும் கிரக நிலைப்பாடுகள் எவை?
- எந்தெந்த கிரகங்களின் சேர்க்கை மற்றும் சுபப் பார்வைகள் ஒருவரை உத்தியோகத்தில் பாதுகாப்பான வட்டத்திற்குள் (Safe Zone) வைத்திருக்க உதவுகின்றன?
இன்றைய நவீன கார்ப்பரேட் மற்றும் தொழில் உலகில், இத்தகைய வலுவான ஜாதக அமைப்புகள் ஒருவரின் வேலைவாய்ப்பில் எவ்வாறு சூட்சுமமாகச் செயல்படுகின்றன என்பதைப் பற்றித்தான் இந்தப் பதிவில் நாம் விரிவாகவும் ஆழமாகவும் ஆராயப் போகிறோம்.
வாருங்கள், உத்தியோக ஸ்தானத்தில் நிகழும் கிரகங்களின் இந்த சுவாரஸ்யமான சதிராட்டத்தை அலசுவோம்!
பொதுவான அமைப்பும் கால புருஷ தத்துவமும்
எந்த லக்னமாக இருந்தாலும் பொதுவான சில அமைப்புகள் அனைத்து ஜாதகங்களிலும் செயல்படும். அது பெரும்பாலும் கால புருஷ தத்துவ அடிப்படையில் அமையும். இதனை ஒரு நிஜ ஜாதக உதாரணத்துடன் பார்ப்போம்.

துலாம் லக்னமும் கிரகங்களின் பலமும்: துலா லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் தனது மூலத் திரிகோண வீட்டில் வலுவாக அமைந்துள்ளார். அவருடன் 9 மற்றும் 12-ஆம் அதிபதியான புதன் இணைந்துள்ளார். லக்னமும், லக்னாதிபதியும் வலுவாக அமைந்துவிட்ட ஜாதகர்கள் வேலையில் மட்டுமல்ல, வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள்.
இந்த லக்னத்தை 3 மற்றும் 6-ஆம் அதிபதியான குரு, 5-ஆம் இடத்திலிருந்து வக்கிரம் பெற்ற நிலையில் தனது 9-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். வேறு எந்த கிரகங்களும் லக்னத்துடன் தொடர்பு கொள்ளவில்லை.
வங்கிப் பணியும் வழக்குகளும்:
- லக்னத்துடன் பணத்தைக் குறிப்பிடும் குரு, சுக்கிரன் மற்றும் கணக்குப் பதிவேடுகளைக் குறிப்பிடும் புதன் ஆகியோர் தொடர்பு கொண்டதால், ஜாதகர் நிதி மற்றும் வங்கித் துறையில் பணிபுரிய அதிக வாய்ப்பு உண்டு.
- லக்னமே நீதிமன்றத்தைக் குறிப்பிடும் துலாம் என்பதால், ஜாதகர் தனது வாழ்வில் நீதிமன்றம் செல்வது தவிர்க்க முடியாதது.
- வேலையோடு வழக்கையும் குறிப்பிடும் 6-ஆம் அதிபதி குரு லக்னத்தைப் பார்ப்பதால், ‘வேலையும் உண்டு, வேலையால் வழக்கும் உண்டு’ என்ற நிலை ஏற்படுகிறது.
- கால புருஷ தத்துவப்படி கடன் மற்றும் வழக்கைக் குறிப்பிடும் 6-ஆம் இடமான கன்னியிலிருந்து (லக்னத்திற்கு 12-ல்) சூரியனும், கடன் மற்றும் வழக்குக் காரகரான கேதுவும் பார்ப்பதால், வேலையில் ஜாதகருக்கு சூரியன் குறிப்பிடும் அரசுத் தொடர்பும், வழக்குத் தொடர்பும் ஏற்படும்.
தற்போது இந்த ஜாதகர் ஒரு அரசு வங்கியில் தலைமைப் பொறுப்பில் உள்ளார். வங்கி வேலையையும், அதனால் கடன் வழக்குகளும் ஏற்படும் என்று ஜாதக அமைப்பு முன்பே கூறிவிட்டது. சரி, இது எப்போது ஏற்படும்? அதனை எதிர்கொண்டு ஜாதகர் சமாளித்து மீள்வாரா என்பதை தசா-புக்திகளும், கோச்சார நகர்வுகளும் தெளிவாகச் சுட்டிக்காட்டிவிடும்.
தசா-புக்திகள் மற்றும் கோச்சார ஆய்வு

ஜனன லக்னம், லக்னாதிபதி வலுவாக அமைந்துவிட்ட ஜாதகர் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்; அதில் வெற்றியும் உண்டு. இதனால் ஜாதகருக்கு வேலையில் தற்போதைய நிலை என்ன என்பதைத் தசா-புக்தி மற்றும் கோச்சார அடிப்படையில் ஆராய்வோம்.
கோச்சார நிலைப்பாடு (Transit Chart):
- ஜனன லக்னமான துலாத்திற்கு 10-ல் கோச்சார லக்னமும், கோச்சார சந்திரனும் இருக்கிறார்கள். இது பணிபுரியும் இடம் தொடர்பான பிரச்சனை என்பதைக் குறிப்பிடுகிறது.
- கோச்சார லக்னத்தில் பணத்தைக் குறிப்பிடும் குருவும், சுக்கிரனும் சந்திரனுடன் அமைந்துள்ளனர். 6-ஆம் அதிபதி குரு உச்சம் பெற்று லக்னத்தில் அமைந்துள்ளதால், நிதி சார்ந்த துறையில் உயர் பதவியில் இருப்பது உறுதியாகிறது.
- 12-ஆம் இடத்துச் சூரியனும், புதனும் 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் அரசு வங்கியில் பணி.
- லக்னத்திற்கு அடுத்து நிற்கும் கேது, கடக லக்னத்தை நோக்கி வந்து கொண்டுள்ளது ஜாதகர் எதிர்கொள்ளும் வழக்கை குறிப்பிடுகிறது.
- லக்னத்தில் உச்ச குரு திக்பலம் பெற்று நிற்க, ஆட்சி பெற்ற லக்னாதிபதி சந்திரனுடன், வழக்கு வெற்றியைக் குறிப்பிடும் 11-ஆம் அதிபதியும், நீதிமன்றத்தைக் குறிப்பிடும் துலா ராசிக்கு அதிபதியான சுக்கிரனும் லக்னத்தில் நிற்பதால், ஜாதகர் வழக்கை முழு பலத்துடன் எதிர்கொள்ளத் தயாராக உள்ளார்.
- 10-ல் திக்பலம் பெற்ற செவ்வாய் லக்னத்தைப் பார்ப்பது, வேலையில் சிறப்பு இருந்தாலும் ஜாதகர் ஒருவித கண்காணிப்பு வளையத்தில் (Under Surveillance) இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
தசா மற்றும் பரிவர்த்தனை யோகம்: ஜனன ஜாதகப்படி ஜாதகர் தற்போது சனி தசையில் உள்ளார். கோச்சார சனி 6-ஆம் இடமான மீனத்தில் ஜனன ராகு மீது சென்று கொண்டுள்ளார். வேலையில் தற்போது வழக்கு நடந்து கொண்டிருப்பதை இது குறிப்பிடுகிறது.
ஜனன ஜாதகத்தில் மகரத்தில் உச்சம் பெற்ற புக்தி நாதர் செவ்வாய், தன ஸ்தானமான 2-ஆம் இடத்தில் நிற்கும் விருச்சிக சனியோடு பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார். இதுவே, வங்கிப் பணியில் பணப் பரிவர்த்தனையில் ஏற்பட்ட ஒரு பாதிப்பால் ஜாதகர் மீது வழக்கு ஏற்படக் காரணமாக அமைந்தது.
வழக்கின் பின்னணியும் வெற்றியும்
இந்த ஜாதகர் ஒரு குறிப்பிட்ட நபருக்குப் பெரிய தொகையை வங்கிக் கடனாகக் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளார். கடன் வாங்கிய நபர் கடனைத் திரும்பச் செலுத்த இயலாத நிலையில், ஜாதகர் மீது துறை ரீதியான விசாரணை நடக்கிறது. ஆனால், தனது உயரதிகாரிகளின் முறையான ஒப்புதலுடன்தான் ஜாதகர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்: ஜனன ஜாதகத்திலும் சரி, கோச்சார ஜாதகத்திலும் சரி, லக்னமும் லக்னாதிபதியும் மிக வலுவாகவே உள்ளனர். இதனால் இந்த வேலை மற்றும் வழக்குச் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு வெற்றி கிட்டுவது நூற்றுக்கு நூறு உறுதி!
அப்படியானால் இது போன்ற நிகழ்வுகள் ஜாதகருக்கு ஏன் ஏற்படுகிறது? தவறுகளே புதிய விதிமுறைகள் உருவாகக் காரணமாக இருக்கின்றன என்ற இயற்கை நியதியின் அடிப்படையில், எதிர்காலத்தில் பெரிய தொகைகளைக் கடனாகப் பெறுவதற்கான வங்கி விதிகள் கடினமாக்கப்படும்; அந்தப் புதிய மாற்றத்திற்கான கருவியாகவே இந்த ஜாதகரின் அனுபவம் அமையும் என்பதே இதற்கான ஆழமான காரணமாகும்.
மீண்டும் விரைவில் உங்களை மற்றுமொரு சுவாரஸ்யமான பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துகளுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501










