உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

நல்ல ஜோதிடராக ஒருவர் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனில் அவர் தொடர்ந்த ஆய்வாளராக இருக்க வேண்டும். அனுபவமே ஆசான் என்று என்து குருநாதர் அடிக்கடி குறிப்பிடுவார். பொதுவாக நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையோ அல்லது பிற ஜோதிடர்களின் கருத்துக்களையோ சுய ஆய்வு செய்தே பயன்படுத்தும் வழக்கம் என்னுடையது. சில வாடிக்கையாளர்களும் ஜோதிடரின் ஆய்வுக்கு தூண்டுகோலாக அமைகின்றனர். ஜோதிடக் கருதுகோள்கள் சமூக ஊடகங்களில் பரவலாக கிடைக்கின்ற இன்றைய நாட்களில் பெரும்பாலோனோர் ஓரளவு ஜோதிடம் பற்றிய புரிதலுடன் ஜோதிடர்களை அணுகுகிறார்கள் என்பது இதனால் ஏற்பட்டுள்ள நல்ல விஷயம். அப்படி சமீபத்தில் என்னை அணுகிய ஒருவர் எழுப்பிய கேள்வியே என்னை இப்பதிவு எழுதத் தூண்டியது. மேலும் இது பற்றிய புரிதல்கள் பலருக்கும் பயன்படும் என்ற எண்ணமே இப்பதிவு எழுதக் காரணம். 

 

ஜாதகத்தில் 5 ஆவது பாவகத்திற்கு புத்திரம், பூர்வ புண்ணியம் போன்ற பல காரகங்கள் உள்ளன. பிற பாவகங்களை இணைத்து எந்த பாவகத்திற்கு 5 ஆமிடம் நன்மை, தீமை செய்யும் என்ற அடிப்படையிலும் அதை விரிவாக்கம் செய்யலாம். உதாரணமாக புத்திர பாவகம் எனும் 5 ஆமிடம் வேலை எனும் 6 ஆம் பாவகத்தின் விரைய பாவகம் என்பது அதில் ஒன்று. இதன்படி பார்த்தால் ஒருவருக்கு குழந்தை பிறந்தால் வேலை பாதிக்கப்படும் என்பது பொதுவான ஒரு கருதுகோள். இதன்படி பார்த்தால் குழந்தை பிறந்த அனைவரும் பணியிழப்பை சந்திப்பதில்லை. ஆனால் வாழ்வில் ஒரு மாற்றத்தை அடைகிறார்கள் என்பது உண்மை.

 

பின்வரும் ஆணின் ஜாதகத்தை கவனியுங்கள்.

 

                           

 

ஜாதகர் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் திருமணமானவர். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியுள்ளவர்.  ஜனன காலத்தில் விருட்சிக லக்னத்திற்கு 5 ஆமிடமான மீனத்தை குருவும் சனியும்தான் பார்க்கிறார்கள். இதனால் கோட்சாரத்தில் 5 ஆமிடத்துடன் குருவும் சனியும் தொடர்புகொள்கையில் இவர்களின் தசா-புக்தி அந்தரத்தில் ஜாதகருக்கு புத்திரம் அமையும் வாய்ப்புண்டு. ஏற்கனவே கோட்சார சனி 5 ஆமிடத்தில்தான் உள்ளார். தற்போது மிதுனத்தில் உள்ள கோட்சார குருவும் இவ்வாண்டு மத்தியில் கடகத்திற்கு வந்து  5 ஆமிட சனியை பார்க்கையில் ஜாதகருக்கு புத்திர பாக்கியம் அமைய வேண்டும்.   இவ்வாண்டு பிற்பகுதியில் ஜாதகருக்கு குரு தசை துவங்குவது இதை உறுதி செய்கிறது. ஆனால் இங்கே தான் பிரச்சனையும் துவங்குகிறது.  குரு ஜாதகருக்கு 2 , 5 க்கு அதிபதி என்பதால் குடும்பத்திற்கு புது வரவாக குழந்தையை கொடுத்துவிடுவார் என்பது உறுதி. அதே சமயம் 5 ஆமதிபதியான குரு வேலையை குறிப்பிடும் 6 ஆம் பாவகத்தின் விரையாதிபதி என்ற வகையில் ஜாதகனுக்கு பணியிழப்பை கொடுக்கவும் வேண்டும். இதுவே இந்த ஜாதகத்தை ஆய்வுக்கு கொடுத்த அன்பரின் கேள்வி. தசா-புக்தி கிரகங்களின் நகர்வுடன் குரு மற்றும் சனியின் கோட்சார நிலைகளை கவனித்து உண்மையில் ஜாதகனுக்கு என்ன நடக்கும் என்பதை அறியலாம்.   

 

லக்னத்திற்கு 3 ஆமிடத்திலுள்ள சனியை நோக்கி தற்போது கும்பத்திலுள்ள கோட்சார ராகு வந்துகொண்டுள்ளார்.  ஜனன சனியை கோட்சார ராகு நெருங்க நெருங்க ஜாதகனுக்கு வேலைக்கும், ஆயுளுக்கும் பாதிப்புகள் வரும். எந்த தசா-புக்திகள் நடந்தாலும் இது ஜாதகனுக்கு நடக்கும் என்றாலும் ராகு-சனி தசா-புக்திகள் தொடர்பானால் மட்டுமே சம்பவங்கள் உறுதியாக நிலைத்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இல்லையேல் கோட்சார ராகு  சனிக்கு கொடுக்கும் பாதிப்புகள் தற்காலிகமானதாகவே இருக்கும். தற்போது நடக்கும் ராகு தசை ஜாதகனுக்கு இவ்வாண்டு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் முடிந்துவிடுகிறது. ஆனால் கோட்சார ராகு மகர ராசிக்கு பெயர்ச்சியாவது டிசம்பர் முதல் வாரத்தில்தான். எனவே அதன் பிறகு ஜாதகனுக்கு வேலையில் பாதிப்பு வரும் என்று அனுமானிக்கலாம்.

 

ஆனால் ஜனன காலத்தில் கால புருஷனுக்கு வேலையை குறிப்பிடும் 6 ஆவது பாவம் கன்னியில் லக்னத்திற்கு 11 ல் நின்று தசையை துவங்கும் குரு வேலையை பறிக்க வாய்ப்பில்லை. எப்படியெனில் சனி உள்ள மகர ராசிக்கு பெயர்ந்து வரும் கோட்சார ராகு ஜனன கால கன்னி குருவின் பார்வையை பெறுவதால் ராகு தரும் பாதிப்புகள் குருவால் மட்டுப்படுத்தப்படும். புத்திர காரகரும், புத்திர ஸ்தானாதிபதியுமான குரு 5 ஆமிடத்தை பார்ப்பதால் புத்திரத்தை வழங்குவதோடு மகரத்தில் நிற்கும் ஜனன சனியும், கோட்சாரத்தில் மீனத்தில் நிற்கும் சனியும் கன்னி குருவின் பார்வையை பெறுவது இதற்குக் காரணம். சிறிய சிரமங்கள் கோட்சார குரு வக்கிரமாகும் காலங்களில் ஏற்பட்டு நீங்கும். மேலும் ஆட்சி வீட்டிலுள்ள சனி ராகுவின் பாதிப்பை எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பார் என்பதால் வேலையில் ஜாதகருக்கு வரும் பாதிப்புகள் சமாளிக்கத்தக்கதாகவே இருக்கும். ஆனால் வேலையில் இடமாற்றமும் சிரமங்களும் தவிர்க்க இயலாததாக இருக்கும். காரணம் குரு, சனி இருவருமே மாற்றத்தின் காரகர் சந்திரனின் நட்சத்திரங்களான ஹஸ்தம், திருவோணத்தில் நிற்பதுதான். குரு தசை சுய புக்தி முடிந்து சந்திரனின்  திருவோணத்தில் நிற்கும் சனி புக்தி துவங்கும்போது ஜாதகன் ஏழரை சனியில் இருப்பார் என்பதாலும், புக்திநாதர் சனிக்கு திரிகோணத்தில் நிற்கும் கேது வேலையில் மாற்றங்களுடன் சிரமங்களையும் கொடுக்கும் வகையில்தான் உள்ளார் என்பது தெரிகிறது.  

 

எனவே ஜாதகனுக்கு குரு தசை சுய புக்தியில் குழந்தை பிறப்புடன் ஜனன சனி மீது செல்லும் கோட்சார ராகுவின் தீமையை ஜனன குரு பார்வை  கட்டுப்படுத்திவிடுவதால் பணி பாதிப்புகள் சமாளிக்கும் விதத்திலேயே இருக்கும். ஆட்சி சனி புக்தி மாற்றத்தை ஏற்படுத்துமே தவிர கடும் பாதிப்புகளை ஏற்படுத்தாது. இதை சனி புக்தி காலத்தில் கோட்சார ராகு ஜனன சனியை கடந்துவிடும் என்பதிலிருந்து உறுதியாக கூறலாம். இவற்றை ஜாதகன் சார்பாக விளக்கம் கேட்ட அன்பருக்கு புரிய வைத்ததும் அவர் நிம்மதியடைந்தார்.

 

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

 

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Leave A Comment

WhatsApp