உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

ஜோதிடமே ஒரு ஆச்சரியமான விஷயம்தான். அதிலும் ஜோதிடரிடம் வரும் வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகள் சில சமயம் ஜோதிடரையும் மிகுந்த ஆச்சரியப்படுத்தும். எனது சில வாடிக்கையாளர்கள் ஒரு விஷயத்தில் முடிவு செய்துவிட்டு நான் என்ன சொல்லுகிறேன் என்று உறுதி செய்துகொள்ள வருவார்கள். ஒருவர் ஜாதகத்தில் உள்ளதை ஜோதிடம் கூறுவது மட்டுமல்ல, ஆலோசனை பெற வரும் நபர் எப்படிப்பட்ட மனநிலையில் உள்ளார் என்பதையும் அவர் ஜோதிடரை சந்திக்கும் நேரமே காட்டிக்கொடுத்துவிடும். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பணிபுரிந்த ஒரு நிறுவன உரிமையாளர் ஜோதிடம் அறிந்தவன் என்ற முறையில் என்னிடம் நிறுவன செயல்பாடுகள் பற்றி அவ்வப்போது ஆலோசனை செய்வது வழக்கம். நான் கூறிய பல ஜோதிட விஷயங்களை அனுபவ பூரமாக உணர்ந்தவர். அதனால் என்மீது மதிப்பு மிக அதிகம். நான் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறிய காலம் வந்தபோது மிகவும்  வருத்தப்பட்டார்.  ஆனால் காலம் நம் அனைவரையும் மாறுபட்ட சூழல்களுக்கு  தள்ளுகிறது. “நாம் அனைவரும் காலம் ஆட்டுவிக்கும் பொம்மைகள் என்றால் அது மிகையல்ல”. பெரிய சமாதானத்திற்குப் பிறகு அவரது நிறுவனத்தில் இருந்து விலகினேன். ஆனாலும் அவ்வப்போது என்னை தொடர்புகொள்வார். தற்போது  புதிதாக ஒருவரை பணியமர்த்த வேண்டிய நிலை. அவரை நிறுவனத்தில் சேர்ப்பதால் நிறுவனத்திற்கு பலன் கிடைக்குமா? என்று ஆலோசனை கேட்டார். என்னை நாடி வந்த நிறுவன உரிமையாளர் தொழில் நிமித்தம் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்பவர். இயல்பான அவரது ஜோதிட ஆர்வம் காரணமாக வெளிநாட்டில் டாரட் அட்டை ஜோதிடமும் பார்த்துள்ளார். அதில் பல ஆச்சரியங்களை உணர்ந்தவர். இதனால் மேற்குறிப்பிட்ட கேள்விக்கான பதிலை  தனக்கு டாராட் அட்டை ஜோதிடம் மூலம் பதிலளிக்க கேட்டுக்கொண்டார்.

 

கீழே மேற்கண்ட கேள்விக்கான டாரட் அட்டை.

 

                                           

படத்திலுள்ளவரின் ஆடையில் பல மண்டையோட்டு சின்னங்கள் உள்ளன. பல போர் அனுபவங்களை பெற்ற ஒருவரை இது குறிப்பிடுகிறது. நிறுவனத்திற்கு வரக்கூடிய நபர் அனுபவம் வாய்ந்தவர் என்பதை இது காட்டுகிறது. படத்தில் வீரனின் கையில் ஒரு கம்பும் தலையில் கவசமும் கொடியும் காணப்படுவது இது சாதாரண வீரனை குறிக்காது. அதிகாரப் பொறுப்பில் இருக்கும் சேனாதிபதியை குறிப்பிடும். இதனால்  நிறுவனத்திற்கு புதிதாக வரும் நபர் ஒரு அதிகாரப் பொறுப்பிற்கே வருகிறார். சாதாரண பணியாளர் அல்ல என்று தெரிகிறது.  பாதுகாப்புக் கவசங்களுடன் சேனாதிபதி உள்ளார் என்பதால் வரக்கூடிய பணியாளர் ஏற்கனவே பாதுகாப்பான வேலையில்தான் உள்ளார் என்பதை குறிப்பிடுகிறது. அதாவது அவர் தற்போதும் பணியில்தான் உள்ளார். கேட்டுக்கொண்டவர் நிறுவனத்திற்கு வந்தால் அவரது தற்போதைய வேலையை ராஜினாமா செய்துவிட்டுத்தான் வர வேண்டும்.

 

தற்போது வரக்கூடிய நபர் கேள்வியாளரின் நிறுவனத்தில் என்ன எதிர்பார்த்து வருவார்? என்று பார்ப்போம். சேனாதிபதி அணிந்துள்ள ஆடையில் பண வளமையை குறிப்பிடும் மஞ்சள் வர்ணமே பிரதானமாக உள்ளதால் புதிய பணியாளர் நல்ல சம்பாத்தியத்தை எதிர்பார்ப்பார். மஞ்சளை அடுத்து சிவப்பு வர்ணம் அதிகமுள்ளதால் அதிகாரம் மிக்க பொறுப்பை எதிர்பார்ப்பார். அதாவது நிறுவனத்திற்கு புதிதாக வருபவர் சாதாரண உழியராகவோ அல்லது நிறுவனத்தில் ஏற்கனவே பொறுப்பில் உள்ளவருக்கு உதவியாளராகவோ பணி  செய்ய விரும்பாமல் சுதந்திரமாக, யாருக்கும் கட்டுப்படாமல் தனிப்பொறுப்பில் பணிபுரிய விரும்புவார். அதே சமயம் வெள்ளை வர்ணமும் அதிகம் உள்ளதால் பற்றற்றவராகவும் இருப்பார்.

 

இனி புதிய நபரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை காண்போம். சேனாதிபதியின் கையில் கம்பு உள்ளது. கம்பில் வளர்ந்துகொண்டுள்ள இலைகள் உள்ளன. இது புதிதாக நிறுவனத்திற்கு வரும் நபரின் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல் நிறுவனத்தில் எதிர்ப்புகள் எழும் என்று காட்டுகிறது. அல்லது அவருடன் இணைந்து செயல்பட நிறுவன ஊழியர்களில் ஐந்து பேர் ஒத்துழைப்பு தர மாட்டார்கள். கம்பில் உள்ள 5 செடிகள் அதை குறிப்பிடுகின்றன. சேனாதிபதி பயணத்தில் உள்ளார். மணல் குவியலுள்ள இடத்தை கடந்துகொண்டுள்ளார். இது புதிதாக வரும் நபர் அலைந்து திரியும் விற்பனை பிரதிநிதியாக இருப்பார். அவர் அலுவலகத்தில் நிலையாக அமர்ந்து செயல்படுபவர் அல்ல. ஆனால் அவருக்கு மணல் குவியல் போல குவியல் குவியலாக வேலையில் தடைகள் வரும். சேனாதிபதி பயணிக்கும் குதிரை குனிந்த தலையுடன் உள்ளது. சேனாதிபதியும் குனிந்த பார்வையிலேயே உள்ளார். இதனால் புதிதாக நிறுவனத்திற்கு வரும் நபரை நிறுவனம் முழுமையாக நம்பாது. அவரது வேலையும் நிறுவனத்திற்கு நம்பத்தக்கதாக இருக்காது என்பதை குறிப்பிடுகிறது.

 

மேற்கண்ட டாராட் அட்டை கூறிய தகவல்களை கேள்வி கேட்ட நிறுவன உரிமையாளரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் “நீங்கள் கூறிய அனைத்தும் சரியானவை. வரும் நபர் ஏற்கனவே எனது நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் பணிபுரிந்தவர்.  ஆனால் தற்போது பொறுப்பில் உள்ள பணியாளரின் பணிச்சுமையை குறைக்கவே அவரை மீண்டும் பணியமர்த்துகிறேன். தற்போதைய பணியாளர் புதியவரிடம் தனது வேலையை பகிர்ந்துகொள்ள மாட்டார். ஏனெனில் தனது வேலையை புதிதாக வரும் நபர் தட்டிப்பறித்து விடுவார் என்று அவர் எண்ணுவார். இதனால்தான் தனக்கு ஒரு உதவியாளர் தேவை என்று அவர் கூறினார். ஆனால் நான்தான் வேலையின் முக்கியத்துவம் கருதி அதே பொறுப்பில் இருந்த பழைய ஊழியரை அழைக்கிறேன் என்றார். முன்பு பணியிலிருந்த போது வேலையில் ஓரளவு நன்கு செயல்பட்டிருந்தாலும் அப்போது அவர் ஆரோக்கியத்தின் பொருட்டு நிறைய விடுப்புகள் எடுத்தார். அதனால் தற்போதும் அவரை நம்பி முழுப் பொறுப்பையும் கொடுக்க இயலாது. அதனால் தற்போதுள்ள ஊழியருடன் இணைந்து செயல்பட அவரை அழைக்கிறேன் என்றார். ஆனால் இந்த ஒரு டாரட் அட்டையை பார்த்து நீங்கள் கூறிய அத்தனை விஷயங்களும் துல்லியமானவை. ஆச்சரியமாகவும் உள்ளது” என்றார். இதை எனக்கு கற்றுத்தந்த எனது குருவிற்கு மானசீகமாக நன்றி கூறிக்கொண்டேன்.

 

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

 

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: +91 8300124501.

Leave A Comment

WhatsApp