
பக்தி என்பது மனிதர்க்கு மனிதர் வேறுபடும். தேவைக்காக மட்டும் கடவுளைப் பிடிப்பவர்களுக்கு அது காமிய பக்தி. தன்னலமற்று இறைவனை வழிபடுபவர்களுக்கு அது நிஷ்காம்ய பக்தி. ஒருவர் இறைவன் மேல் எந்த அளவு நம்பிக்கை வைத்துள்ளாரோ அந்த அளவுதான் அவரால் இறைவனை உணர முடியும். இதை பிரசன்னத்தில் பலமுறை உறுதி செய்து அதிசயத்திருக்கிறேன். அப்பழுக்கற்ற பக்திமான்கள் இனம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை பார்ப்பதில்லை. உருவம், சடங்குகள் ஆகியவை கலாச்சாரங்களோடு தொடர்புடையவை. ஆனால் பக்தி பொதுவானது. பக்தியில் அனைத்தையும்விட ஆத்மார்த்தமே மிக முக்கியம் என்பதே அனைத்து மத ஞானிகளின் கோட்பாடு. நம்மவர்கள் எளிமையாகச் சொன்னார்கள் “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்” என்று. படைத்தவனை பற்றி அறிந்துகொள்ளும் எண்ணம், வழிபாடு, குல தெய்வம், பக்தியின் அளவு, அதை ஒருவர் வெளிப்படுத்தும் விதம், அதற்காக மேற்கொள்ளப்படும் புண்ணிய செயல்கள், யாத்திரைகள், மந்திர ஜபங்கள், உபாசனைகள், மதம் மாறுதல் ஆகிய அனைத்தையும் ஜோதிடத்தில் விம்சாம்சம் மூலம் அறிந்து கொள்ளலாம். இன்றைய பதிவில் ஒரு உதாரண ஜாதகத்தை விம்சாம்சம் மூலம் ஆராய்வோம்.

ஜாதகர் எண்பதுகளின் இறுதியில் பிறந்த ஒரு ஆண். ஜாதகத்தில் இரண்டாவது பாவகம் வருமானத்தையும், 5 ஆம் பாவகம் குல வழிபாட்டையும், ஒன்பதாம் பாவகம் அவரது பக்திக்காண அங்கீகாரத்தையும் கூறும். இரண்டாமிடத்தில் லக்னாதிபதியே அமைத்திருப்பது சிறந்த பொருளாதாரம் உள்ள ஜாதகம் என்பதை குறிப்பிடும். ஜாதகரின் குடும்பத்தில் நிதி, கல்வி சார்ந்தவர்கள் இருப்பர். 5 ஆமதிபதி சந்திரன் சுய சாரமான ஹஸ்தத்தில் 7 ல் அமைந்திருப்பது மனச் சலனத்தை ஏற்படுத்தினாலும், ஜாதகர் தனது விஷயங்களில் தனித்து முடிவெடுப்பார். மற்றவர்களின் தலையீட்டை ஏற்கமாட்டார் என்பதை குறிப்பிடுகிறது. 2 ஆமதிபதி செவ்வாய் 2 க்கு பாதகத்தில் அமைவது தனம் தேடி ஜாதகர் அந்நிய தேசம் செல்வதையும், 9 ஆமதிபதி ராகு/கேதுக்களுடன் இணைவது ஒருவர் தனது குல வழக்கங்களை விட்டு மாறுவதை குறிப்பிடுகிறது. லக்னாதிபதி குருவிற்கு 5 ல் கேது அமைந்திருப்பதை கவனியுங்கள். ஜாதகர் பிறப்பால் ஒரு கிறிஸ்தவர். ஆனால் 5 ஆமதிபதி சந்திரன் கேதுவை கடந்துள்ளார். இதனால் தனது மதம் சார்ந்த நம்பிக்கைகளை ஜாதகர் கடந்துவிட்டவராக இருப்பார். ராகுவுடன் இணைந்தால் பாதிக்கப்பட்ட 9 ஆமதிபதி செவ்வாயின் 8 ஆம் பார்வையை பெறும் 5 ஆமதிபதி சந்திரனுக்கு தனது குல தெய்வ வழிபாடுகளை துறந்து மாற்று தெய்வ வழிபாடுகளை ஏற்றுக்கொள்ளும் மன நிலையை ஏற்படும்.

ஒருவர் மதம் மாறுவதற்காண அமைப்புகள்.
விம்சாம்சத்தில் 5 ஆமிடத்தை ராகு/கேதுக்கள் லக்னத்திற்கு லாப, பாதக ஸ்தானத்தில் இருந்து பார்வை செய்கின்றன. 5 ஆமதிபதி செவ்வாய் 5 க்கு 8 ஆமிடமான 12 ஆமிடம் மிதுனத்தில் மறைந்துவிட்டார். 9 ஆமதிபதி குரு 9 க்கு 6 ல் சிம்மத்தில் அதன் அதிபதி சூரியனோடு இணைந்துள்ளார். இது லாப நோக்கில் பொருளாதாரத்தில் பொருட்டு ஜாதகரின் முன்னோர்கள் தாய் மதமான இந்து மதத்தை விட்டு விலகி மாற்று மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என்பதை குறிக்கிறது. முன்னோர்களின் தாய் மதம் இந்து மதமே என்று கூற காரணம் லக்னத்தில் அமைந்த தாய் மதத்தை குறிக்கும் சந்திரனை கடந்து 9 ஆமதிபதி குரு அமைந்திருப்பதுதான். குரு பாட்டனை குறிக்கும் கிரகம் என்பதால் ஜாதகரின் தந்தை வழி பாட்டனாரின் காலத்தில் மத மாற்றம் நடந்திருக்கும்.
முன்னோர்கள் வழிபட்ட தெய்வம்.
கால புருஷனின் 5 ஆம் பாவகமான சிம்மத்தில் குரு, சூரியன் சேர்க்கை இருப்பது முன்னோர்கள் சிவ வழிபாடு செய்துள்ளதை குறிப்பிடுகிறது.
தாய் மதம் திரும்புவதற்காண அமைப்பு.
விசாம்சத்தில் சந்திரனும் சூரியனும் ஆட்சி பெற்றுள்ள நிலையில் ஒன்பதாமதிபதி குரு, சூரியனுடன் லக்னத்திற்கு 2 ல் இணைவது ஜாதகர் தாய் மதம் திரும்பி தனது முன்னோர்கள் வழிபட்ட சிவ வழிபாட்டை தொடர்வதை குறிக்கிறது.
தேடி வரும் தெய்வம்.
ஜாதகருக்கு 21 வயது ஆனபோது ஆன்மீக நாட்டம் அதிகரித்தது. விசாம்சத்தில் 11 ல் அமைந்த ராகுவின் தசையில், ராசியை போன்றே விசாம்சத்திலும் ராகுவின் திரிகோணத்தில் அமைந்து 9 ஆமிடத்தை நேர்பார்வை செய்யும் புதனின் புக்தியில் ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் ஏற்பட்டது. தனது கிறிஸ்தவ மதம் சார்ந்த நூல்களை தேடித்தேடி பயின்றார். பிறகு இணைய வாயிலாக தனது ஆன்மீகத் தேடலை துவங்கினார். அப்போதுதான் இறைவன் ஒருவனே என்றும், பல்வேறு வழிபாட்டு முறைகள் பல்வேறு தேச மக்களின் வாழ்வியலோடு தொடர்புடையவை என்றும் உணர்கிறார். இதனால் நமது இந்திய வாழ்வியலோடு தொடர்பற்ற திணிக்கப்பட்ட மதங்களின் கருத்துக்கள் நமக்கு தெளிவு தராது எனவும், தனக்குரிய தெளிவை தரக்கூடியது தாய் மதமான இந்து மதமே எனவும் உணர்கிறார். ராகுவின் திரிகோணத்தில் புதன் அமைவது தகவல் தொடர்பு சாதனைகளின் வாயிலான ஆன்மீக தேடலை குறிக்கிறது.
குருவை காணும் காலம்.
புக்திநாதரான புதன் விசாம்சத்தில் தேடல் பாவகமான மூன்றில் உச்சம் பெற்று குருநாதரை குறிக்கும் 9 ஆம் பாவகத்தை நேர் பார்வை செய்கிறார் என்பதை கவனிக்கவும். ராசிச்சக்கரத்திலும் ஓசை ராசியான மிதுனத்தில் புதன் அமைந்துள்ளதால் ஜாதகர் இணைய வழியில் காயத்ரி மந்திர ஜபம் கற்றுக்கொண்டு ஓரிரு வாரங்கள் அதை ஜபிக்கிறார். அதே ஆண்டு இணைய வழியிலேயே வெளிநாட்டை சார்ந்த, இந்து மதத்தில் தேர்ந்த நுட்பம் வாய்ந்த தனது முதல் ஆன்மீக குருவை சந்திக்கிறார். அவற்றிடம் தனது முதல் மந்திர தீக்ஷையை இணைய வழியிலேயே பெறுகிறார்.
அதீத ஆன்மீக உணர்வுகளும் தடைபடும் ஆன்மீக உணர்வுகளும்.
ஜாதகரின் ஆன்மீக ஈடுபாட்டை பார்த்த அந்த குரு ஜாதகருக்கு குண்டலினி உள்ளிட்ட உடலின் ஆதார சக்கரங்களை தூண்டுவது பற்றி சிறப்பு வகுப்பு எடுக்கிறார். உடல் என்பது நான்காம் பாவகமாமும். உடலை தூண்டுவது நான்கின் விரைய பாவகமான மூன்றாம் பாவகமாகும். புதன் விம்சாம்சத்தில் 3 ஆம் பாவகத்தில் இருந்து புக்தி நடத்துகிறார் என்பதை கவனிக்கவும். தனது குருவின் ஆன்மீக வழிகாட்டலில் அதீத ஆன்மீக உணர்வுகளால் ஜாதகர் தூண்டப்படுகிறார். 2010 ல் குருநாதர் முக்தியடைகிறார். ராசிச்சக்கரத்தில் சந்திரனுக்கு 10 ல் அமைந்த சுக்கிர புக்தியில் ஜாதகருக்கு வேலை கிடைக்கிறது. விம்சாம்ச லக்னத்திற்கு 6 ல், 8 ஆமதிபதியும் ஜீவன காரகருமான சனியோடு சுக்கிரன் இணைந்துள்ளதை கவனியுங்கள். இதனால் வேலையின் பொருட்டு ஜாதகரின் ஆன்மீகம் தடைகளை சந்திக்கிறது.
ஆன்மீக பயணங்கள்.
சுக்கிரனுக்கு 8 ல் லக்னாதிபதி சந்திரன் அமைந்திருப்பதை கவனியுங்கள். ஆன்மீக ராசியான கடகத்தில் லக்னாதிபதியும் பயண காரகருமான ஆட்சி பெற்ற சந்திரன் அமைந்துள்ளார். ராகு தசையில், சுக்கிர புக்தியில், சரியாக சந்திரன் அந்தரத்தில் ஜாதகருக்கு ஆன்மீக பயணங்களை சந்திரன் ஏற்படுத்துகிறார். இந்த சமயத்தில் ஜாதகர் இமயமலைக்கும், திருவண்ணாமலைக்கும் சென்று வருகிறார். திருவண்ணாமலையில் மற்றொரு யோகியிடம் பஞ்சாக்ஷர தீக்ஷை பெறுகிறார். ராசிக்கட்டத்தில் சூரியன் சந்திரனின் ரோஹிணியில் அமைந்துள்ளது இதற்கு முக்கிய காரணம்.
அசைவம் தவிர்த்தல்.
அந்தரநாதர் சந்திரன் உணவு காரகரும்கூட. இதனால் சுக்கிர புக்தியின் சந்திரனது அந்தரத்தில் ஜாதகர் ஆன்மீக நண்பரின் வேண்டுகோளை ஏற்று அசைவம் உண்பதை துறக்கிறார். அதன் பிறகு இதுவரை அசைவம் உண்ணும் எண்ணம் கூட ஏற்பட்டது இல்லை என்கிறார் ஜாதகர். அசைவம் உண்பதை நிறுத்திய பிறகு ஆன்மீகத்தில் ஜாதகருக்கு போதையே ஏற்பட்டது என்கிறார். உடலின் மூலாதார சக்கரங்களை எப்படி தூண்டுவது, எப்படி கட்டுப்படுத்துவது என்பனவற்றை ஒரு மாணவராக ஜாதகர் கற்றுக்கொள்கிறார். ராசியில் புதன் வீட்டில் அமைந்து விம்சாம்சத்தில் சந்திரன் ஆட்சி பெற்று, புதன் உச்சம் பெற்றது இதற்கு காரணமாகும். சந்திரன் அந்தரத்திலேயே நிழல் உருவில் சித்தர் ஒருவரை தரிசித்ததாக ஜாதகர் தெரிவித்தார்.
ஆன்மீகம் திருமண வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம்.

ராகு தசை சுக்கிர புக்தியில் சந்திரன் அந்தரம் முடிந்ததும் ஜாதகர் ஆன்மீகத்தை குறைத்துக்கொண்டு பணியில் கவனம் செலுத்துகிறார். வெளிநாட்டில் வேலை அமைகிறது. பிறகு ராசியிலும் நவாம்சத்திலும் 7 ல் நிற்கும் சந்திர புக்தியில் ஜாதகருக்கு தான் சார்ந்த கிறிஸ்தவ மதத்தில் திருமணம் நடக்கிறது. நவாம்சத்தில் தனுசு லக்னாதிபதி குரு, விரயாதிபதி செவ்வாயோடு பரிவர்த்தனையாகி ராகு-கேதுக்களுடன் தொடர்பாகிறார். 7 ஆமதிபதி புதனும், வக்கிர சுக்கிரனும் கேதுவோடு 12 ல் மறைகின்றனர். 7 ஆமிடத்தில் 8 ஆமதிபதி சந்திரன் சனியோடு இணைந்து லக்ன விரயாதிபதி செவ்வாய் பார்வையை பெறுகிறார். இந்த அமைப்புகளால் ஜாதகருக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடுகள் எழுகின்றன. சரியாக கோப காரகர் செவ்வாய் புக்தி தொடங்கியதும் திருமணமாகி ஓரிரு மாதங்களே ஆன நிலையில், கருத்து வேறுபாடுகள் அதிகரித்த நிலையில் அதீத கோபத்தால் ஜாதகர் குடும்ப வாழ்வை இழக்கிறார். மனைவி பிரிந்து சென்றுவிட்டார். நவாம்சத்தில் 2 க்கு விரையத்தில் அமைந்த குருவின் தசை துவங்கியதும் சுய புக்தியில் கேதுவின் அந்தரத்தில் சட்டப்படி விவாகரத்து கிடைக்கிறது.
விம்சாம்சத்தில் லக்னாதிபதிக்கும் 7 ஆமதிபதி சனிக்கும் & சுக்கிரனுக்கும் சஷ்டாஷ்டகம் (6/8) இருப்பதை கவனியுங்கள். இதனால் ஆன்மீகத்தில் ஜாதகரின் எண்ணங்களும் மனைவியின் எண்ணங்களும் ஒன்றாக அமையாதது புலனாகிறது. இப்போது தசாநாதர் குரு ஜாதகரின் வாழ்க்கை பயணத்தை மாற்றி அமைக்கிறார். சம்பாத்திய சூழல் மாறுகிறது. விவாகரத்தான அதே காலகட்டத்தில் 2018 இறுதியில் குரு தசை சுய புக்தி, கேது அந்தரத்தில் ஜாதகருக்கு மூலாதாரம் வெளிப்பட்டது என்கிறார். கேது உண்மையை அறியவைப்பவர். இதனால் உண்மையை அறியும்பொருட்டு ஜாதகர் தமிழ் சித்தர்களின் நூல்களை தேடித்தேடிப் படிக்கிறார்.
ஆன்மீகமும் மாந்திரீகமும்.
ஜாதகத்தில் எட்டாமிடமும் கிரகங்களில் ராகு/கேதுக்களும் மாந்தரீகத்தை குறிப்பவையாகும். ராசிச்சக்கரத்தில் சுக்கிரன் 8 ஆமதிபதியாவார். அவர் விம்சாம்சத்தில் 8 ஆமதிபதி சனியோடு இணைந்துள்ளார். தசாநாதர் குரு ராசியிலும், விம்சாம்சதிலும் எட்டாமிடத்தை பார்வை செய்கிறார். இந்த அமைப்பால் குரு தசை, சுய புக்தி சுக்கிரன் அந்தரத்தில் ஜாதகர் முன்பு கற்ற மந்திர தீக்ஷைகளை பரிசோதித்துப் பார்க்கிறார்.
எந்த தெய்வ உபாசனை? எப்போது உபாசனை?
ராசிச் சக்கரத்தில் கால புருஷ லக்னத்திலிருந்து கால புருஷ 9 ஆம் பாவகமான தனுசுவில் அமைந்த சனியையும், கால புருஷ 5 ல் அமைந்த கேதுவையும் தசாநாதர் குரு பார்க்கிறார். சனி கேது சாரம். விம்சம்சத்தில் அதே தனுசுவில் வர்கோத்தமம் பெற்ற சனியும் லக்னத்திற்கு லாபத்தில் ராகு-கேதுக்களும் அமைந்துள்ளனர். இந்த அமைப்பால் ஜாதகருக்கு குரு தசாவில் சனி புக்தி துவங்கியதும் கணபதி உபாசனை கிடைத்தது. புக்திநாதர் சனியுடன் ஸ்ரீவித்யா உபாசனையை குறிக்கும் சுக்கிரனும் தனுசுவில் இணைந்துள்ளதால் ஜாதகருக்கு வெளிநாட்டில் நண்பர் ஒருவர் மூலம் ஸ்ரீவித்யா உபாசனையும் கிடைத்தது. உபாசனைகளை விம்சாம்சத்தில் கால புருஷனுக்கு ஒன்பதாமிடமான தனுசு ராசியும், அதன் அதிபதி குருவும், லக்னத்திற்கு 9 ஆமிடம் இவற்றோடு தொடர்புடைய கிரகங்களே குறிப்பிடுகின்றன. குரு தசையின் அதே சனி புக்தியில், மூலிகைகளை குறிக்கும் கேது அந்தரத்தில் மூலிகைகள் பற்றி ஜாதகர் அறிந்துகொண்டார். கேது காவல்துறை உயரதிகாரிகளை குறிப்பவர் என்பதால் இணைய மோசடிகளைப்பற்றி காவல்துறை உயரதிகாரிகளுக்கு வகுப்புகள் அக்காலத்தில் எடுத்தார். குரு தசையில் வித்யா கிரகமான உச்ச புதனின் புக்தி துவங்கியதும் சனி புக்தியில் கிடைத்த கணபதி உபாசனையின் உச்ச நிலையை அடைந்து சிறப்பு தீக்ஷை பெற்றார்.
இவரது தீவிர ஆன்மீக எண்ணங்களை அறிந்தகொண்ட ஜாதகரின் பெற்றோர்கள், மீண்டும் ஒரு கிறிஸ்தவ பெண்ணை ஜாதகர் ஏற்க மாட்டார் என்பதையறிந்து ஜாதகருகேற்ற இந்துமத ஆச்சாரங்களில் பற்றுதல்களையுடைய ஒரு பெண்ணை ஜாதரது இரண்டாவது திருமணத்திற்காக தேடிக்கொண்டுள்ளனர்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி:8300124501.