கார்த்திகை மாதம் மாலையணிந்து, நேர்த்தியாகவே விரதமிருந்து…

தனி மனிதர்கள் அனைவரும் தங்களது மன நிறைவை, அடையாளத்தை பல்வேறு வகைகளில் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். பக்தி, இசை, விளையாட்டு என்று தேடலின் வகைகள் மனிதர்க்கு மனிதர் மாறுபடுகிறது. எங்களைப் போன்றோர் ஜோதிடத்தில் தேடுகிறோம். பொதுவாக வயதான காலத்தில் அனைவருமே ஆன்மீகத் தேடலில் ஈடுபடுவது இயல்பு. மனிதராய் பிறந்த அனைவரும் தங்களது பிறப்பின் நோக்கத்தை அறிந்துகொள்ள பல்வேறு வகையான தேடல்களில் ஈடுபடுகிறார்கள். மனித மனம் லாப-நஷ்டம் கருதியே தற்காலத்தில் சிந்திக்கிறது. ஆனால் ஏற்றத்தாழ்வுக்குட்பட்ட பொருளாதாரம் நமக்கு மன நிறைவிலும் ஏற்றத்தாழ்வையே தரும் என உணரும் தருணத்தில் நமது தேடல்களை ஏற்றத்தாழுகளற்ற நிரந்த மன நிறைவைத் தரும் விதத்தில் அமைத்துக்கொள்கிறோம்.  ஒரு காரண, காரியத்தை முன்னிட்டான தேடலில் தடைகளையும், தாமதங்களையும் எதிர்கொள்ளும்போது நமக்கு அங்கே விரக்தி மேலிடுகிறது. நமது தேடல்களில் பொறுமை இல்லாத போதும் நாம் களைப்படைந்துவிடுவோம். மனம், சிந்தனை, செயல் ஆகியனவற்றின் ஒருங்கிணைந்த தேடலே அதன் நோக்கத்தை நிறைவேற்றும். மேலோட்டமான தேடல்கள் எவ்வித பலனையும் பெற்றுத் தந்துவிடாது என்பதை ஒருவர் விரைவில் புரிந்துகொள்வார். அதில் மன நிறைவும் கிடைக்காது என்பதோடு காலமும் வீணாகும். எனவே நமது தேடல்கள் தூய்மையான நோக்கம் கொண்டவையாக இருக்க வேண்டியது அவசியம். இப்பதிவில் நாம் ஆன்மீகத்தில் தனது தேடலை துவக்கிய ஒரு நபரின் ஜாதகத்தை ஆராயவுள்ளோம்.

ஒருவர் தனது ஆன்மீகத் தேடலில் நல்ல பலனை பெறவேண்டுமானால் அவருக்கு ஜாதகத்தில் லக்னம்,  லக்னாதிபதி, சந்திரன் மற்றும் நெருப்பு ராசி அதிபதிகளான செவ்வாய், சூரியன், குரு ஆகியோர் சிறப்புற அமைந்திருக்க வேண்டும். மேற்கண்ட ஆணின் ஜாதகத்தில் சந்திரன், செவ்வாயைத் தவிர லக்னாதிபதி சுக்கிரன், குரு, சூரியன் ஆகியோர் சிறப்புற அமையவில்லை. பொதுவாக லக்னமோ, லக்னாதிபதியோ வக்கிர கிரக தொடர்பு பெறுவது விரும்பத்தக்கதல்ல. சந்திரன் மட்டும் ஆன்மீக விஷயங்களுக்கு ராகு-கேதுக்களின் தொடர்பை பெறலாம். மேற்கண்ட ஜாதகத்தில் லக்னத்தை நீசம் பெற்ற சனி வக்கிரமான நிலையில் தொடர்புகொள்வதால் ஜாதகர் தனது செயல்களில் தீவிர முனைப்போடு ஈடுபடுவார். ஆனால் பலனடையமாட்டார். இதனால் பின்வாங்குவார் என்பதையே இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. லக்னாதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் கேதுவுடன் இணைந்துள்ளார் என்பதை கவனிக்க. இதனால் இவருக்கு ஆன்மீக நாட்டம் இருக்கும். ஆனால் அது லாப நோக்கம் கருதியதாகவே இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்காதபோது தனது தேடல்களில் இருந்து இந்த ஜாதகர் பின்வாங்குவார்.

ஒரு ராசியை 9 கூறாக்கி ஆராயும் நவாம்சத்தில் 9 ஆமிடம் ஒருவரின் தர்மப்படியான செயல்களை குறிப்பிடும்.  அதனால் நவாம்சத்தை தர்மாம்சம் என்றும் குறிப்பிடுவதுண்டு. ஒருவர் தனது ஆன்மீகத் தேடல்களில் தர்மப்படியான பலன்களை அடையும் பாக்கியம் உள்ளதா? என்பதை நவாம்சம் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடும். ராசிச் சக்கரத்தின்படி 9 ஆமிடமான  மிதுனத்தின் அதிபதி புதனே, விரைய பாவகமான கன்னியின் அதிபதியும் ஆவார். ஜாதகர் தனது ஆத்மார்த்தமான தேடல்களின் பலனை அடைவாரா? என்பதை நவாம்சத்தில் 9 ஆமதிபதி, கால புருஷ 9 ஆமதிபதி குரு இவர்களின் நிலை மூலம் அறியலாம். ராசிச் சக்கரத்தில் 9 ஆமதிபதி புதன் நவாம்ச லக்னத்திலேயே நீசம் பெற்று வக்கிரமும் பெற்றது இவரது ஆன்மீகத் தேடல்கள் பயனற்றது என்பதை குறிக்கிறது..  நவாம்சத்தில் கடக குரு தனுசு சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். குரு உச்சம் பெற்று கடகத்தில் அமைந்துள்ளது ஜாதகர் தனது இறை தேடலில் ஆத்மார்த்தமாக ஈடுபடுவதை குறிப்பிடுகிறது. ஆனால் 9 ஆமதிபதி செவ்வாய் வக்கிரமான 12 ஆமதிபதி சனியுடன் இணைந்து 6 ல் அமைந்தது இவரது இறை தேடல்களில் 12 ஆமிடம் குறிப்பிடும் விரையமும், 6 ஆமிடம் குறிப்பிடும் விரோதமும் ஏற்படும் என்பதை குறிப்பிடுகிறது.  குரு-சந்திரன் பரிவர்த்தனை இவரது இறை தேடலின் பலன் ஜாதகருக்கு கிடைக்காமல் இடம் மாறிச் செல்லும் என்பதை குறிக்கிறது.  

ஒருவரது பக்தி, எந்தக் கடவுளை அல்லது எந்த வடிவத்தை அவர் வணங்குவார், இறை வழிபாட்டில் அவர் கடை பிடிக்கும் நியமங்கள், விரதங்கள், அதில் அவருக்குள்ள ஆத்மார்த்தமான ஈடுபாடு போன்ற பலவற்றை விம்சாம்ச சக்கரம் (D20) நமக்கு சுட்டிக்காட்டும். ஒரு ராசியை 20 கூறுகளாக்கி ஆராய்வது விம்சாம்ச சக்கரமாகும். மேற்கண்ட ஜாதகரது விம்சாம்சத்தில் மேஷ லக்னத்தில் மோட்ச ராசிகளுள் முதல் ராசியான கடக சந்திரன் அமைந்துள்ளார். இதனால் இவருக்கு இறை சிந்தனை உண்டு. ராசிச் சக்கரத்தில் துலா லக்னத்தை மேஷத்திலிருந்து நீசம் பெற்ற வக்கிர சனி மட்டுமே பார்க்கிறார் என்பதை கவனிக்க. தலையை குறிக்கும் மேஷத்தில் கால்களை குறிக்கும் சனி அமைந்துள்ளார். விம்சாம்சத்தில் காடுகளை குறிக்கும் மேஷத்தில் மோட்ச ராசிகளுள் முதல் ராசியதிபதியும் பயண காரகருமான சந்திரன் கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். மேஷத்தில் உச்சமாகும் சூரியன் உயர்ந்த மலைப்பகுதிகளை குறிப்பவர் என்பதால் ஜாதகர் தனது ஆன்மீகத் தேடலில் மலைகாடுகளில் இருக்கும் தனது தெய்வத்தை பயணம் செய்து வழிபடுவதையும் தலையில் சிறு மூட்டையை (அஸ்வினி = தலையில் சிறு மூட்டை)  சுமந்துகொண்டு கால்நடையாகவும் பயணித்து வழிபடுவார் என்பதையும் அறியலாம். விம்சாம்ச லக்னாதிபதி செவ்வாய் மூன்றாமிடமான மிதுனத்தில் அமைந்துள்ளதை கவனிக்க மூன்றாமிடம் சிறு தூரப் பயணத்தை குறிப்பிடும் பாவகமாகும் என்பதால் ஜாதகர் ஆன்மீகத் தேடலுக்கான தனது பயணத்தில் சிறுதொலைவு பயணத்தையே மேற்கொள்வர் என்பதையும் அறியலாம்.

விம்சாம்ச லக்னம் மேஷத்தின் திரிகோணத்தில் சூரியன் ஆட்சியில் அமைந்திருக்க, அவரை கும்ப சுக்கிரன் பார்ப்பதையும் கவனிக்க. இந்த ஜாதகர் சபரிமலைக்கு சுக்கிர தசையிலும் சூரிய திசையிலும் 23 ஆண்டுகள் தொடர்ந்து மாலையணிந்து தலையில் இருமுடி சுமந்து பயணப்பட்டு வழிபாடு செய்திருக்கிறார். சூரிய திசையின் இறுதிப் பகுதியில் தான் வணங்கிய ஐயப்பன்   தன்னை கைவிட்டதாக எண்ணி நாத்திகவாதியாக மாறிவிட்டார். அதன் பிறகு எந்த தெய்வத்தையும் வணங்குவதில்லை. என்ன காரணம்?

தொழிலுக்கு ஆராய வேண்டிய வர்க்கச் சக்கரமான தசாம்சத்தில் மேற்கண்ட கேள்விக்கான பதில் உள்ளது. தசாம்சத்தில் மேஷ லக்னத்தில் கேது அமைந்துள்ளார். இதனால் இவர் கேது குறிக்கும் எளிமையாக தொழில்களில் ஈடுபட விரும்புவார். லக்னாதிபதி செவ்வாய் இரண்டாமிடத்தில் உணவுகாரகர் சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். இதனால் சிறிய வகை கடைகள், சிறு உணவகங்கள் போன்ற தொழில் செய்ய விரும்புவார். சூரியன் 8 ல் சனியின் அனுஷ நட்சத்திரத்தில் மறைந்துவிட்ட நிலையில் வக்கிர சனி சிம்மத்தில் அமர்ந்துவிட்டதால்  ஜாதகருக்கு நிர்வாகத்திறன் இருக்காது. பெரிய தொழில் செய்ய எண்ணமிருந்தாலும் செயல்படுத்த முடியாது. சிம்ம வக்கிர சனி மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரனின் பூர நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். இதனால் இவர் சுக்கிரனின் காராகத் தொழில்களிலும் ஈடுபட விரும்புவார்.

லக்னத்தில் கேது அமைந்திருப்பதால் முதலில் ஜாதகர் பெட்டிக்கடை வைத்திருந்தார். பிறகு 2 ஆமிட செவ்வாயின் நிலையால் சிறு உணவகமும் நடத்தினார். லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 2 க்கு 11 ல் உச்சம் பெற்றதால் ஜாதகரது தேவைக்கு சிறப்பான வருமானம் வந்துகொண்டிருந்தது. சுக்கிரனுக்கு 3 ஆவது திரிகோணத்தில் சூரியன் அமைந்ததால் அரசுத்துறையில் பணிபுரியும் மனைவி மூலம் சிறப்பான வருமானம் வந்துகொண்டிருந்தது. மீன சுக்கிரன் சனியில் உத்திரட்டாதியில் அமைந்து, சிம்ம சனி சுக்கிரனின் பூரத்தில் அமைந்து நட்சத்திரப் பரிவர்த்தனை பெறுகிறார்கள். எந்தவொரு வர்க்கத்திலும் வலுப்பெற்ற கிரகமே ஜாதகரை வழிநடத்தும் என்பதற்கேற்ப சனியோடு பரிவர்தனைபெற்ற உச்ச சுக்கிரன் ஜாதகரை இயக்கினார். சுக்கிரன் குறிக்கும் திரைத்துறையில் முதலீடு செய்ய ஜாதகருக்கு ஆர்வம் பிறந்தது. 4 ஆமிட வக்கிர புதன் தசாம்சத்தில் சனியில் பூசத்தில் நின்று 10 ஆமிடத்தை பார்வை செய்ததும் இதற்கு முக்கிய காரணம். சுக்கிரனும் புதனுமே திரைத்துறைக்கும் முக்கியமான காரக கிரகங்களாவார். ஜாதகர் திரைத்துறையில் தனது சம்பாத்தியத்தின் கணிசமான பகுதியை திரைப்படமெடுக்க தயாரிப்பாளர்களிடம் கொடுத்து ஏமாற்றப்பட்டார். போதுமான முதலீடு பெறப்படாததால் மீண்டும் முதலீடு செய்யுங்கள் என்று ஜாதகரிடம் கூறப்பட்டது. இம்முறை சுதாகரித்த ஜாதகர் ஒரு முறைக்கு 3 ஜோதிடர்களிடம் ஆலோசித்து இம்முறை முதலீடு செய்தால் ஏற்கனவே முதலீடு செய்த பணமும் கிடைத்துவிடும் என மூன்று அரைகுறை ஜோதிடர்களும் ஒன்று போலவே கூறியதை நம்பி மீண்டும் ஒரு கணிசமான தொகையை திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் கொடுத்து ஏமாற்றமடைந்தார். தனது வாழ்நாள் சேமிப்புகள் கறைந்ததை எண்ணி விரக்தியின் உச்சத்திற்கு சென்ற ஜாதகர் அதன் பிறகு யாரையும் நம்புவதில்லை. கடவுள் உட்பட. தொழில் கூட்டாளியை குறிக்கும் 7 ஆமிடத்தில் ராகு அமைந்து ராகுவிற்கு வீடு கொடுத்த சுக்கிரன் 7 க்கு 6 ல் லக்னத்திற்கு விரையத்தில் மறைந்துவிட்டதாலும் திரைத்துறை கூட்டாளிகளால் ஜாதகர் ஏமாற்றப்பட்டார்.

கூட்டாளிகளை, தரகர்களை குறிக்கும் கிரகம் புதனாவார். புதன் தசாம்ச லக்னம் மேஷத்திற்கு பகைவராவார். புதன் சனி தொடர்பு ஏமாற்றத்தை தரக்கூடிய அமைப்பாகும். தசாம்சத்தில் புதன் லக்ன பகை கிரகமாகி சனி சாரம் பெற்று, சனியும் விரைய சாரம் பெற்றதால் சிறுக சிறுக சேமித்த பெரிய தொகையை ஜாதகர் இழந்துள்ளார். புதன் இரட்டைத் தன்மையை குறிக்கும் கிரகமாவார். அதனால் ஜாதகர் ஒருமுறைக்கு இரு முறை கூட்டாளிகளிடம் பணம் கொடுத்து புதன் ஏமாறச் செய்துள்ளார். (என்ன கொடும சரவணா). தயாரிப்பாளர்களை குறிக்கும் சூரியன் 8 ல் மறைந்தது தயாரிப்பாளர்களால் ஜாதகர் தீமையையே அடைவார் என்பதை குறிப்பிடுகிறது.

கூட்டாளிகளின் தன்மையை துல்லியமாக அறிய நவாம்சத்தில் கூட்டாளிகளை குறிக்கும் காரக கிரகமான புதனையும், 7 ஆமிடத்தையும் ஆராய வேண்டும். நவாம்சத்தில் மீன லக்னத்திற்கு கூட்டாளி பாவகமான கன்னியே பாதக ஸ்தானமாகவும் வருகிறது. நவாம்சத்தில் 7 ஆமதிபதி புதன்  லக்னத்தில் நீச வக்கிரம் பெற்று அமைந்ததால் மோசமான கூட்டாளிகள் ஜாதகரை தேடி வந்தனர் என்றே கூற வேண்டும். லக்னத்தில் நீசம் பெற்று வக்கிரமடைந்து 12 ஆமிடத்தை நோக்கி திரும்பும் வக்கிர புதன் கூட்டாளிகளால் விரையத்தை சந்திப்பார் என்பதை துல்லியமாகக் காட்டுகிறது.. லக்ன புதன் வக்கிரம் பெற்று 12 ஆமிடத்தை நோக்கித் திரும்புவதால்  புதனுக்கு திக்பலம் இங்கு வேலை செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஜாதகத்தில்  எந்தவொரு வர்க்கத்தில் புதன் தீமை செய்யும் அமைப்பில் உள்ளதோ அந்த வர்க்கம் சார்ந்த வகையில் ஜாதகருக்கு நல்ல கூட்டாளிகளோ, நண்பர்களோ, ஆலோசகர்களோ உதவமாட்டார்கள். புதன் ஜோதிடர்களை குறிக்கும் கிரகமாவார். தசாம்ச புதன் லக்ன பகைவராகி அவர் பாதகாதிபதி சனி சாரம் பெற்றதால் புதனின் அம்சமான ஜோதிடர்கள் கூட ஜாதகருக்கு தொழில் வகையில் உதவவில்லை என்பது குறிப்பிடத்தகது.

அப்படியானால் ஜாதகர் நம்பி வணங்கிய ஐயப்பன் ஜாதகரை கைவிட்டுவிட்டாரா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு மீண்டும் விம்சாம்சத்திற்கே வரவேண்டும். விம்சாம்சத்தில் வழிபாட்டின் பயனை 11 ஆமிடம் மூலம் அறியலாம். விம்சாம்சத்தில் மேஷ லக்னத்திற்கு 5 ல் சூரியன் சுக்கிரனின் பூரத்தில் அமைய, சுக்கிரன் 11 ஆமிடத்தில் புத்திர காரகர் குருவின் பூரட்டாதியில் நின்று 5 ஆமிட சூரியனை பார்க்கிறார். இதனால் இவரது வழிபாட்டின் லாபத்தை ஜாதகருக்குப் பதில் இவரது ஒரே மகன் அடைகிறார். 23 வருடங்கள் இருமுடி கட்டி ஐயப்பனை வணங்கியதன் பலன் ஜாதகருக்குப் பதில் இவரது புத்திரனுக்கு செல்கிறது. நவாம்ச லக்னம் மீனத்திற்கு 5 ஆமிடமான கடகத்தில் குரு உச்சமாகி 10 ஆமிட சந்திரனோடு பரிவர்த்தனை பெறுவதும் இவரது வழிபாட்டின் பலனை ஜாதகருக்குப் பதில் மகனே அனுபவிப்பார் என்பதை உறுதி செய்கிறது. இவரது மகன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சிறப்பான பணியில் இருக்கிறார். தந்தை இழந்த பொருளாதாரத்தை மகன் தனது சம்பாத்தியத்தால் மீட்டெடுத்துவிட்டார்.

நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு என்பர். இதை புரிந்துகொள்ள மானுட அறிவுக்கு சக்தியில்லை. என்னைப் போன்றோர் ஓரளவு ஜோதிடம் மூலம் புரிந்துகொள்ள முயல்கிறோம்.

“சாமியே சரணம் ஐயப்பா”

மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil