
வீடு கட்டுவது, பராமரிப்பது, புதுப்பிப்பது போன்றவை அனைவருக்கும் ஒரு விரும்பத்தக்க செயலாகவே எப்போதும் இருக்கும். வீடு கட்ட இயலாதவர்களுக்கு அது ஒரு பெருங்கனவு. கூட்டுக் குடும்பமாக வசித்த கடந்த நூற்றாண்டில் அனைவருக்குமான பெரியதொரு வீட்டை கட்டி வைத்தார்கள். அரண்மனை போன்ற வீடுகள் வெளிநாடுகளில் வியாபாரத்திற்காக குடும்பத்தைப் பிரிந்து சென்று பொருளீட்டிய நகரத்தார் தங்கள் ஊர்களில் தம்குடும்பப் பெருமையை நிலைநாட்ட கட்டி வைத்தவை. கேரளாவின் தரவாட்டு வீடுகள் பாரம்பரியத்தை பறை சாற்றினாலும், அவை கடந்த சில நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களுடன் ஆதிக்க சமூகமும் இணைந்து உழைப்பாளி சமூகத்தின் ரத்தத்தை உறிஞ்சிக் கட்டிக்கொண்டவைகளே. அத்தகைய தங்கள் மூதாதையர் வீடுகளில் இன்று குறுங்குடும்பமாக வசிக்கும் வாரிசுகள் அவற்றை தற்போது பராமரிக்க இயலாது தவிக்கிறார்கள். இத்தகைய வாரிசுகளில் ஒரு வகையினர் தங்கள் மூதாதையரின் பெருஞ்சொத்துக்களை இன்றைய சூழலுக்கு ஏற்ப வணிக வளாகங்களாக உருமாற்றிக்கொண்டு விடுகிறார்கள். இரண்டாவது வகையினர் இன்றைய நவீன பணக்காரர்களிடம் அவற்றை விற்றுவிடுகிறார்கள். மூதாதையர் சொத்தை விற்க மனமின்றி, மாற்றியமைக்கவும் மனமின்றி அவற்றில் வசிப்போரின் சில குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பொருளாதாரத் தேவைக்கேற்ப வெளியிடங்களுக்கு சென்று குடியமர்ந்த பிறகு இங்குள்ள தங்கள் சொத்தை பராமரிக்க செலவு செய்ய முன்வரும் வேளையில் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதுபற்றி அலசுவதே இன்றைய பதிவு.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

மகர லக்னத்தையும், மீனத்திலமைந்த லக்னாதிபதி சனியையும் கால புருஷனுக்கு வீட்டை குறிக்கும் கடகத்திலிருந்து உச்ச குரு பார்க்கிறார். 4 ஆமிடத்தில் கால புருஷ 4 ஆமதிபதி சந்திரன் லக்னத்திற்கு 4 ல் ராகுவுடன் இணைந்து நிற்கிறார். 1௦ ஆமிடத்தில் 4, 11 ஆமதிபதி செவ்வாய் கேதுவுடன் இணைந்து நிற்கிறார். சூரியன் தனது மூலத்திரிகோண வீட்டில் வலுவாக அமைந்துள்ளார். இத்தகைய அமைப்புகளால் இந்த ஜாதகர் நல்ல வீடு, வாகன பாக்கியங்களுடனும் சிறந்த பொருளாதாரப் பின்னணியுடைய குடும்பத்தில் பிறந்தவர் என்பது புலனாகிறது. 4 ஆமிட சந்திரனும் 4 ஆமதிபதி செவ்வாயும் திக்பலம் பெற்று அமைந்து ஒருவருக்கொருவர் நேர் பார்வை பார்ப்பது வீடு பாக்கியத்திற்கு மிகச் சிறப்பு. கால புருஷ 9 ஆமதிபதி குரு உச்சம் பெற்றதும், சூரியன் மூலதிரிகோணம் பெற்று அமைந்ததும், 4 ஆமதிபதி செவ்வாயும், 4 ல் நின்ற கால புருஷ 4 ஆமதிபதி சந்திரனும் திக்பலம் பெற்றது ஜாதகரின் தாயும் தந்தையும் செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதை குறிக்கிறது. ஆனால் வீட்டை குறிக்கும் 4 ஆமிடத்திற்கும் 4 ஆமதிபதி செவ்வாய்க்கும் ராகு-கேதுக்கள் தொடர்பு ஏற்பட்டது ஜாதகருக்கு கிடைத்த பெற்றோர் வழி வீட்டை அனுபவிக்க ஜாதகர் போராட வேண்டும் என்பதை குறிக்கிறது.

ஒருவருக்கு கிடைக்கும் வீடு பாக்கியத்தை அறியப் பயன்படும் சதுர்த்தாம்சத்தில் காரக கிரகம் செவ்வாய் துலாம் லக்னத்திற்கு 10 ல் திக்பலம் பெற்று அமைந்தது சிறப்பு. ஜாதகருக்கு வீடு பாக்கியம் சிறப்பாக அமையும் என்பதை இது குறிக்கிறது. ஆனால் செவ்வாய் நீசம் பெற்று அமைந்ததும் 4 ஆமதிபதி சனி லக்னத்திற்கு 12 ல் மறைந்தது ஜாதகர் வீடு பாக்கியத்தை அனுபவிப்பதில் எதிர்கொள்ளும் தடையை குறிக்கிறது. சனி இங்கு 1 2 ல் மறைந்து, செவ்வாய் நீர் ராசியான கடகத்தில் நின்று தனது உச்ச வீட்டை பார்ப்பதால், ஜாதகர் வெளிநாடு சென்று சம்பாதித்து அங்கு வீடு வாங்க உதவி செய்யும். லக்னத்திற்கு சனி 5 ஆமதிபதியுமாவதால் ஜாதகர் தனது பூர்வீக சொத்தை அனுபவிக்க தடை உள்ளதையும் குறிக்கிறது. கால புருஷ 4 ஆமதிபதி சந்திரன் நீதி ராசியான துலாத்தில், வழக்கு காரகர் கேதுவுடன் இணைவு பெற்று அமைந்து நீச செவ்வாய் பார்வையை பெறுவதால் ஜாதகர் தனது சொத்து விஷயங்களுக்காக நீதிமன்றம் செல்லும் சூழல் ஏற்படும் என்பதை குறிக்கிறது.

அக்ஷவேதாம்சம் எனும் வர்க்கச் சக்கரம் ஒரு ஜாதகருக்கு தந்தை வழி பூர்வீகச் சொத்து பாக்கியம் உண்டா? என ஆராய பயன்படுகிறது. சொத்தின் காரக கிரகம் செவ்வாய் கும்ப லக்னத்திற்கு 8 ல் தந்தையை குறிக்கும் சூரியனுடன் இணைந்து மறைந்துவிட்டது. இது தந்தை வழி பாக்கியம் ஜாதகருக்கு கிடைப்பதில் ஏற்படும் பாதிப்பை குறிக்கிறது. எதிர்ப்புகளைக் குறிக்கும் 6 ஆமதிபதி சந்திரன் தந்தையை குறிக்கும் 9 ஆமிடத்தில், நீதிமன்றத்தை குறிக்கும் துலாத்தில் அமைந்தது, தந்தை வழிச் சொத்தை அனுபவிக்க முயல்கையில் ஜாதகர் வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என்பதை தெரிவிக்கிறது. 9 ஆமிடம் இந்த கும்ப லக்னத்திற்கு பாதக ஸ்தானம் என்பதும் 9 ஆமதிபதி சுக்கிரன் 9 ஆமிடத்திற்கு 8 ல் லக்னத்திற்கு 4 ல் வக்கிரம் பெற்றுவிட்டதால் தனது வலுவை இழந்துவிட்டார். இதனால் ஜாதகருக்கு தந்தை வழிப் பூர்வீகச் சொத்தை அனுபவிக்க இயலா நிலை ஏற்படும். 4 ல் அமைந்த சுக்கிரன் வக்கிரம் பெற்றதால் திக்பலமோ, ஆட்சி பலமோ சுக்கிரனுக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜாதகர் நல்ல வசதியான பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். பூர்வீகத்தில் சம்பாதிக்க வழியின்றி வெளிநாடு சென்று நல்ல சம்பாத்தியத்தில் இருக்கிறார். வெளிநாட்டில் தனக்கான வீடு, வாகன வசதிகளை ஏற்படுத்திக்கொண்டுவிட்டார். அக்ஷவேதாம்சத்தில் எதிர்ப்பு ஸ்தானமான 6 ஆமிடமும், தாயாரை குறிக்கும் ராசியுமான கடகத்தில் உச்சம் பெற்ற குரு தசை துவங்கியதும், லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் நிற்கும் சந்திரன் வடிவில் ஜாதகருக்கு சோதனை வந்தது. தனது பூர்வீக வீட்டை தனது தாயாரின் விருப்பத்திற்கிணங்க கணிசமான பொருட் செலவில் ஜாதகர் புதுப்பித்துக் கொடுத்தார். ஆனால் பூர்வீகத்தில் உள்ள இவரது பங்காளிகள் பூர்வீக சொத்தில் ஜாதகருக்கு உரிமை இல்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். ஜாதக அமைப்பு பூர்வீக சொத்தை நல்லவிதமாக அனுபவிக்கும் அமைப்பை காட்டவில்லை. இதனால் தனக்கு பங்குள்ள சொத்தை தான் அனுபவிக்க ஜாதகர் நீதிமன்றம் சென்று வருகிறார்.
ஒருவருக்கு கொடுப்பினை உள்ள ஒன்றை அவர் அடைவதை யாராலும் தடுக்க இயலாது என்பதுபோல, ஒருவருக்கு மறுக்கப்பட்ட கொடுப்பினையை எந்த மன்றம் சென்றாலும் அவர் அடைய முடியாது என்பதே நிதர்சனம்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501