உங்கள் வாழ்க்கை பாதையில் தெளிவு, நம்பிக்கை மற்றும் நியாயமான தீர்வை வழங்கும் உங்கள் ஜோதிட வழிகாட்டி.

மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில், ‘பொருளாதாரப் பாதுகாப்பு’ என்பது வெறும் சேமிப்பு சார்ந்தது மட்டுமல்ல; அது சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளைப் பொறுத்தது. ஜோதிட ரீதியாக, ஒருவரது செல்வ நிலையைத் தீர்மானிப்பதில் தன காரகன் குரு (வியாழன்), இலாப காரகன் சனி மற்றும் செல்வச் செழிப்பிற்குரிய சுக்கிரன் ஆகியோர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். காலச்சக்கரத்தில் கோள்களின் தற்போதைய சஞ்சாரங்கள் மற்றும் தசா-புக்திகளின் அடிப்படையில், வரும் கால மாற்றங்களை முன்கூட்டியே கணித்து முதலீடுகளைத் திட்டமிடுவது அவசியம். இந்தப் பதிவில் நிலையான செல்வத்தைப் பெருக்க ஜாதகப்படியான வழிமுறைகளை உதாரண ஜாதகத்துடன் ஆராய்வோம்.

 

முதலீடு மற்றும் வளர்ச்சி

கால புருஷ தத்துவப்படி, முதலீட்டு பாவகமான நான்காமிடம் கடகத்தில் தன காரகர் குரு உச்சமாவார். எனவே, ஜாதகத்தில் குரு பகவான் சுபத்துவமாக இருந்தால் மட்டுமே ஒருவரால் செல்வத்தைச் சேமிக்க முடியும். லக்னத்திற்கு நான்காமிடத்தில் வலுவானதொரு கிரகம் அமைவது சிறப்பு. கடகத்தில் செவ்வாய் நீசமானவர்களும், சுய ஜாதகத்தில் 4-ஆம் இடத்தில் நீச அல்லது அஸ்தங்க கிரகங்கள் அமைந்தவர்களும் முறையான திட்டமிடல் இன்றி முதலீடு செய்து, பின்னாளில் நஷ்டத்தைச் சந்திக்கின்றனர்.

 

தொழில் மற்றும் நிலைத்தன்மை

சனி பகவான் உழைப்பிற்கும், அதற்கேற்பக் கிடைக்கும் வருமானத்திற்கும் காரகர் ஆவார். ஜாதகத்தில் சனி பலவீனமாக அமைந்தவர்கள் முதலீட்டில் பொறுமை காக்க இயலாமல், அவசர முடிவுகளால் நஷ்டமடைகின்றனர். சனி வலுவாக அமைந்தவர்களும், தசா-புக்தி நாதர்களுடன் சனி தொடர்பு பெற்றிருப்பவர்களும் பல ஆண்டுகள் காத்திருந்தால் மட்டுமே முதலீட்டில் பெரும் லாபம் ஈட்ட முடியும். குறிப்பாக 1, 2, 4, 5, 11 ஆகிய பாவகங்கள் சுபத்துவமாக அமைந்து, அவற்றின் தசா-புக்தி நடப்பவர்கள் நல்ல பொருளாதார வளர்ச்சியைப் பெறுகிறார்கள்.

 

மனதை வென்றவன் உலகை வென்றவன்

சுக்கிரன் சுகபோகங்களுக்கு அதிபதி. இன்று பலரது பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளே. சுக்கிரன் பலவீனமாக அமையப் பெற்றவர்கள், முதலீடு வளரும் காலத்திலேயே சமூக அங்கீகாரத்திற்காக (Social Status) ஆடம்பரச் செலவு செய்து முதலீட்டின் அடிப்படையையே சிதைத்து விடுகின்றனர்.

 

கீழே பங்கு வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு ஆணின் ஜாதகம்.

 

ஜாதகத்தில் 8-ஆம் பாவகமும், அதன் ‘பாவத் பாவம்’ ஆன 3-ஆம் பாவகமும் பங்கு வணிகத்தைக் குறிப்பவை. 5-ஆம் பாவகம் அதிர்ஷ்டத்தைக் குறிக்கும்.

 

தற்போதைய நிலை: ஜாதகர் பங்கு வணிகத்தைக் குறிக்கும் மிதுனத்தில் அமைந்த கேது தசை முதல் இதில் ஈடுபட்டுள்ளார். தற்போது லக்னத்திற்கு 2-ஆம் இடத்தில் (தன ஸ்தானம்) மூலத்திரிகோண வலுப்பெற்ற சுக்கிர தசையில் உள்ளார். சுக்கிரன் 8-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பங்குச் சந்தை ஆர்வம் தொடர்கிறது.

 

ஆசையும் விரயமும்: ஆசையின் காரகரான சுக்கிரன் 2-ல் அமர்ந்து 8-ஐப் பார்ப்பதால், பங்குச் சந்தையில் அதிக பொருளீட்ட வேண்டும் என்ற ஆசை மேலோங்குகிறது. ஆனால், சுக்கிரன் 12-ல் நிற்கும் பாதகாதிபதி குருவின் (விசாகம்) நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். இதனால் முதலீடுகள் விரயமாகும் வாய்ப்பும் உள்ளது.

 

சனி தரும் கட்டுப்பாடு: இங்கே ஒரு திருப்பம் (Twist) உள்ளது. 2-ஆம் இடத்தை 5-ல் அமர்ந்த சனி தனது 10-ஆம் பார்வையால் பார்க்கிறார். இதனால் சுக்கிர தசையில் ஜாதகர் அவசர முடிவுகளை எடுக்கத் தயங்குவார். நட்சத்திரப் பரிவர்த்தனையால் (குரு-பூரம், சுக்கிரன்-விசாகம்)  துலாத்திற்கு வரும் குருவையும் சனி தொடர்பு கொள்கிறார். இதனால் லக்ன யோகாதிபதி சனி, பாதகாதிபதி குருவையும் தசா நாதரையும் கட்டுப்படுத்தி ஜாதகரை நிதானமாகச் செயல்பட வைக்கிறார்.

 

எச்சரிக்கை: கோட்சார மாற்றங்கள்

தற்போது 5-ஆம் இடத்துச் சனியை நோக்கி கோட்சார ராகு வந்துகொண்டுள்ளார். அதே சமயம் பாதகாதிபதி குரு கோட்சாரத்தில் தனது உச்ச வீடான கடகத்தை நெருங்குகிறார். இந்த நேரத்தில் ஜாதகர் அவசரப்பட்டு முதலீடுகளை இழக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், ராகு ஜனன சனியைக் கடந்ததும் முதலீடுகள் மீண்டும் லாபமளிக்கத் தொடங்கும்.

 

ஒரு முக்கியக் குறிப்பு: 2-ஆம் அதிபதி சுக்கிரன் 12-ல் மறைவதால், பெரும் லாபத்தைக் கண்ட பின் ஜாதகரிடம் குண மாற்றம் ஏற்படலாம். இதனால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரியும் சூழல் உருவாகலாம். “பணியால் குடும்பத்தை தொலைப்பவர்களைவிட, பெரும் தனம் வந்த பிறகு குடும்பத்தைத் தொலைப்பவர்கள் இன்று அதிகம்.” இத்தகைய ஜோதிட நுணுக்கங்களை முன்கூட்டியே அறிந்து செயல்பட்டால், ஒரு முதலீட்டாளர் பொருளாதாரத்தையும் குடும்பத்தையும் சிதையாமல் காக்க முடியும்.

 

“கோள்களின் சஞ்சாரம் நம் கையில் இல்லை, ஆனால் கோள்களின் தன்மையை அறிந்து கொள்ளும் விவேகம் நம் கையில் உள்ளது. சரியான ஜோதிட வழிகாட்டலும், முறையான நிதானமும் இருந்தால், எத்தகைய பொருளாதார நெருக்கடியையும் ஒருவரது ஜாதகம் ‘யோகமாக’ மாற்றும் வல்லமை கொண்டது!”

 

மீண்டும் விரைவில் உங்களை மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

 

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

 கைபேசி: +91 8300124501

 

 

 

Leave A Comment

WhatsApp